சனி, 22 செப்டம்பர், 2012

தி ஹேங் ஓவர்


நாளைக்கு விடிஞ்சா கல்யாணம். இன்னைக்கு நைட் பேச்சுலர் பார்ட்டி. அதைக் கொண்டாட நாலு நண்பர்கள் (மாப்பிள்ளை, அவனோட வருங்கால மச்சான், மாப்பிள்ளையோட இரண்டு நண்பர்கள் - ஒரு ஸ்கூல் வாத்தி, ஒரு பல் புடுங்கி டாக்டர்) லாஸ் வேகாஸ் போறாங்க. தண்ணி, கூத்து-ன்னு ஒரே ஜாலி நைட் பூரா...

காலையில் எழுந்தால் மூணு பேருக்கும் (மூணு பேரா? ஆமாம். மூணு பேர் தான்) பயங்கர தலைவலி. தண்ணி ஓவர். என்ன நடந்தது நேத்து நைட்டு..? தெரியலை...

எழுந்து பார்த்தால், ரூம் மகா மோசமான அலங்கோலமான நிலையில். மச்சானுக்கு ஜட்டி பேன்ட்டு எதையும் காணோம், பாத்ரூமுக்குள் உயிருடன் ஒரு புலி, ஆம், நிஜப்புலி. கெஸ்ட் ரூமில் ஒரு குழந்தை. டாக்டர் கையில் திருமண மோதிரம், டாக்டருக்கு ஒரு பல்லைக்காணோம், இந்தப்பக்கம் மாப்பிள்ளையையே காணோம், வாத்தி கையில் ஆஸ்பிடலில் அட்மிட் ஆனதற்கான ஸ்டிரிப், ஹோட்டலை விட்டு வெளியே வந்தால் இவர்களின் மெர்சிடிஸ் காரைக்காணோம், ஹோட்டல் மாடியில் இருந்த ஒரு பெரிய சிலையின் கையில் இவர்கள் ரூமில் இருந்த ஒரு படுக்கை. குட்மார்னிங் ஆபீசர் என்று ஒரு போலீஸ் காரைக்கொண்டு வந்து தந்துவிட்டுப்போகிறான் ஒருவன்.....

"ஹேங் ஓவர்" படம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது. முதல் ஐந்து நிமிடங்கள் நடப்பது தான் நான் மேலே சொன்னது... இவை ஆரம்பம் மட்டுமே.. இவற்றுக்குப்பிறகும் ஆனந்த (நமக்கு) அதிர்ச்சிகள் உண்டு படம் முழுக்க. ஸாம்பிள் வேணுமா? மெர்சிடிஸ் கார் போலீஸின் கன்ட்ரோலில், அதன் டிக்கிக்குள் அம்மணமாக ஒரு சைனா மேன், புலியின் ஓனர் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன். பல் டாக்டருக்கு ஒரு பார் டான்ஸருடன் கல்யாணம், சைனா மேன் ஒரு டான், அவன் கன்ட்ரோலில் மாப்பிள்ளை, காசு கொடுத்து மீட்டால் அன்ஃபார்ச்சுனேட்லி, அது மாப்பிள்ளை இல்லை, எக்ஸெட்ரா - இவையெல்லாம் பிற்பகுதிக்கதையில் வருபவை..

நைட்டு என்ன நடந்திருக்கும். விடை தேடிக் கிளம்புகிறார்கள் மூவரும், அந்தக் குழந்தையையும் எடுத்துக்கொண்டு.. அவர்களது விடை தேடும் அன்றைய ஒருநாள் பயணமே கதை... மாப்பிள்ளையைக் கண்டுபிடித்தார்களா? கல்யாணம் நல்லபடியாக நடந்ததா? ஏன் பல்லைக்காணோம்? இவையெல்லாம் வெண் திரையில்.

படம் வெளியானதும் சூப்பர் டூப்பர் ஹிட்டு. கொஞ்ச நாட்களில் இரண்டாம் பாகம் வரும் அளவுக்கு. படம் அச்சு அசலான அமெரிக்க யூத் கலாச்சாரத்தினை பிரதிபலிப்பதனாலும், அவற்றால் இப்படி சில அபத்தங்கள் விளைந்தால் என்ன ஆகும் என்ற ஜாலியான யோசைனையாலும். என்ன ஒன்று... பக்கா லோக்கல் லேங்குவேஜ் டயலாக்ஸ், பயங்கரமான கெட்ட வார்த்தைகளுடன்.

(இந்தப்படத்தின் லோக்கல் தமிழ் வெர்ஷன் சி.டி ஒன்றும் சில மாதங்களுக்கு முன் கிடைத்தது. யாரோ நம்மூர் பத்து காலேஜ் மாணவர்கள் வசனம் எழுதி, அவர்களே டப்பிங்கும் பேசி................. ஸோ மியூஸிக் மட்டும் மிஸ்ஸிங்.. ஆயா, அம்மா என்று ஆங்கில வெர்ஷனுக்குக் குறையாமல் கெட்ட வார்த்தைகளுடன் எழுதியிருந்தார்கள்)

அந்தப்படம் மூவீஸ் நவ் - ல் அடிக்கடி திரையிடப்படுகிறது...

புதன், 18 ஏப்ரல், 2012

ரொம்ப நாளைக்குப்பிறகு... ஓக்கே.. ஓக்கே...



ரிலீஸன்று முதல் நாள் ஈவினிங் ஷோவுக்கு ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முயற்சிக்கும் போதே எனக்கும் பப்பிக்கும் பஞ்சாயத்து ஆரம்பித்தது.. அந்த தியேட்டர், இந்த தியேட்டர் என்று.. பாவா (கோவை ப்ரூக்ஃபீல்ட்) "தி சினிமா" மால்-இல் தான் பார்க்க வேண்டும் என ஆரம்பித்து வைத்தார்.. அங்க ஒரு டிக்கெட் 120 ரூபாயாம், புக்கிங் சார்ஜ் 20 ரூபாயாம்.. மூணு பேருக்கு 420, பைக் வேற ரிப்பேர், ஸோ.. போக வர ஆட்டோக்களுக்கு ஒரு 200, இன்டர்வெல் ஸ்னாக்ஸ் ஒரு 150, நைட் வெளியில சாப்பிட்டா அது ஒரு 200, ஆக 900 ரூபாய் மொய் வைக்கப்போறீங்க, நான் ஒரே ஒரு பீட்ஸாவோ, மசால் பூரியோ கேட்டா மட்டும் வாங்கித் தராதீங்க யாரும்.... எப்படியும் ரெண்டு வாரம் கழிச்சு யாராவது நல்ல பிரிண்டா பென் டிரைவுல போட்டுத் தரத்தான் போறாங்க, அப்போ பாத்துகிட்டா என்ன குறைஞ்சா போயிடும், எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா, என்றெல்லாம் இழுத்துக்கொண்டே போனதில்... எந்தப்பக்கமும் மெஜாரிட்டி இல்லாமல் பஞ்சாயத்து தோல்வியில் முடிந்தது. இதில் பாழாய்ப்போன பவர்கட் வேறு, டிக்கெட் புக் செய்ய முடியாமல் தமிழ்நாடு ஈ.பி மேல் லேசாக கோவம் வந்தது..

இரண்டாவது நாள் "ஏதாவது ஒரு தியேட்டர்" என சமாதானமாகி புக்கிங் செய்ய முயற்சித்தால் எல்லா தியேட்டர்களும் ஃபுல்.. விசாரித்தால் படம் ஹிட்டாம்.. ஆல் ஃபேமிலீஸ் ஆர் பிரசன்ட் இன் ஓக்கே ஓக்கே தியேட்டர்ஸ் என்று உளவுத்துறை ரிப்போர்ட் (வேறு யார், பாவாவும், அவர் தம்பியும ரவுண்ட்ஸ் போய்விட்டு வந்து) சொன்னது. மூன்றாவது நாளும் இதே கதை.. அப்புறம் மனசை "கல்"லாக்கிக் கொண்டு மூஞ்சியைக் கழுவி "கண்ணாடி" பார்த்து துடைத்துக்கொண்டு சாலமன் பாப்பையா, வேலாயுதம், சிறுத்தை, எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா ஆகியவற்றை இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக மாஸ்டர் சர்வேஷின் வீச் வீச் கிய்யா முய்யா கத்தல்களுக்கிடையில் பாத்திர, பொம்மை உருட்டல்களுக்கு இடையில் பார்க்க முயற்சித்தோம்... பார்த்தோம்... பார்த்துத் தொலைத்தோம்...

இந்த கேப்பில் ஒரு ஆர்வத்தில் ------------------- க்கு போன் செய்து தெரியாமல் கதையை கேட்டுத் தொலைத்து விட்டேன், அவள் (யாரா? பழைய பதிவு மைனா - ஒரு புலம்பல்ஸ், அப்புறம் ஒரு செல்போன் ஞாபகம் இருக்கிறதா?) காது ஜவ்வு அறுந்து போகுமாறு மைனா கதை சொன்னது ஞாபகம் இருக்கிறதா??? தெரியாமல் கேட்டு விட்டேன்.. "ஒரு கல் ஒரு கண்ணாடி பாத்துட்டியா" என்று. ஹே... சூப்பர்டா, நேத்து தான் பி.வி.ஆர்ல போய் பாத்தோம், சந்தானம் பிச்சுட்டான் (எதை?), ஆக்சுவலி ஹீரோ உதயநிதி ஸ்மார்ட் யூ நோ (கோடியில காசு இருந்தா, நான்கூட ஸ்மார்ட்டா தான் இருப்பேன்), அந்த ரே பான் (பெரிய கம்பேனி போல) க்ளாஸோட நச்சுன்னு இருக்கான், ஸ்னேகா வேற வர்றாடா படத்துல (அடடே), கடைசி கிளைமாக்ஸூல ஆர்யாவும் வருவான் (அடடடடே), ஹி ஈஸ் வெரி வெரி ஹேன்ட்ஸம் யூ நோ (எவன்தான் உனக்கு ஹேன்ட்ஸம் இல்லை? என்னைத் தவிர), ஆனா சந்தானத்தை பார்த்து "யார் இவன் சுத்த லூஸா இருக்கான்" னு சொல்லிடுவான் (உண்மைதானே). சந்தானம் மட்டும் இல்லன்னா படமே இல்லடா (அதுவும் உண்மைதானே), பிளைட்ல "ஏம்மா? சாகப்போற நேரத்துல தேங்கா எண்ணெயை வச்சுகிட்டு நாங்க என்ன பண்றது" (கதையை கேட்டா டயலாக்லாம் ஏன் சொல்றா இவ?) சொல்வான் பாரு, தியேட்டரே அலறும்... படத்துல செம்மை இன்ட்ரோடா சந்தானத்துக்கு, பி.எம்.டபிள்யூ காரை காட்டி (காட்டி?).. ஹி, ஹி நான் சொல்ல மாட்டேன், நீயே போய் பாரு சூப்பர் பில்ட் அப்..... (அடச் செங்குரங்கே)

நான் "யம்மா, கதை என்னம்மா? படம் எப்டி இருக்கு?" அவள் "கதையா, அது என்னன்னா உதயநிதி சிக்னல்ல நிப்பானா, அப்போ முக்காடு போட்டுட்டு வர்ற ஹன்சிகாவை கிண்டல் பண்ணுவானா? (சரி) ஆனா அவ மூஞ்சியை பாத்து ஃபாலோ பண்ணி லவ் பண்ண ஆரம்பிச்சுடுவான் (சரிதான்) அவங்கப்பா சிட்டி கமிஷனர் (வெரிகுட்), சந்தானம் தான் பிரெண்டு (வெரி வெரி குட்), அவனுக்கு ஒரு லவ்வர் (அது யாரு?). ஆனா ஃபிரண்ட்ஷிப்தான் முக்கியம்னு நெறைய ஸீன் இருக்கு (நல்ல விஷயம் நல்ல விஷயம்)... ஹே... அதுல நெறைய தண்ணி அடிக்கிற ஸீன் இருக்கு.. உதயநிதி தண்ணி அடிக்குறத போய் பாரேன், ஆக்சுவலி நீதான்டா அது, மொக்கை பையன் நீ, நீயெல்லாம் அப்படித்தான் கேவலமா பண்ணுவ... (என் கதையை விடு தாயே, கதைக்கு வா) சரி, சரி, அவன் ஹன்சிகா கிட்ட மாட்டிக்குவானா?. அப்புறம் பாண்டிச்சேரியில கல்யாணம் அவளுக்கு (அதுக்குள்ளயா?), அதை நிறுத்த ரெண்டு பேரும் போவாங்க (அப்போ யார்கூட கல்யாணம்?). வழி எல்லாம் கமெடிதான்.. ஒண்ணுக்கு போக போகும் போது இன்டர்வெல் (யார் ஒண்ணுக்கு?) அதுல என்னன்னா... ஹலோ.. ஹலோ.. நல்ல வேளை.. போன் சிக்னல் கட்.. நான் எஸ்கேப்.




ஏதேதோ காரணம் சொல்லி, ஆனால் உண்மையில் ஐ.பி.எல்லுக்கு பயந்து அஜீத்-தின் பில்லா 2, சூர்யாவின் மாற்றான், கமல்-இன் விஸ்வரூபம், கார்த்தி-யின் சகுனி ஆகியவை ஜூன் மாத ரிலீஸூக்கு தள்ளிப்போனாலும் தைரியமாக "ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்தை (ஐ.பி.எல் ஃபீவரில்) யோசிக்காமல் ரிலீஸ் செய்வதற்கே தனி தில் வேண்டும். இதில் வரிவிலக்கு வேறு தர மறுக்கப்பட்டிருக்கிறதாம்.. ஆனால் என்ன? போனால் போகட்டும்.. படம் ஹிட்.. நல்ல டாக், நல்ல கலெக்ஷன்.. தியேட்டர் பக்கம் போனால் ராம் சரண் தேஜாவின் டப்பிங் "ரகளை", சிவாஜி மற்றும் என்.டி.ஆர் தி கிரேட்டின் தூசு தட்டப் பட்ட ஈஸ்மெண்ட் கலர் கர்ணன் மட்டுமே போட்டிக்களத்தில். ஸோ.... "மச்சி, ஓப்பன் த பாட்டில்".... கலக்கிக் கொண்டிருக்கிறது "ஒரு கல் ஒரு கண்ணாடி" என்கிற ஓக்கே ஓக்கே.

வேலை டென்ஷனெல்லாம் குறைந்த ஒரு மாலை நேரத்தில் நான்கைந்து நாள் கழித்து ஆபீஸ் நண்பர்களுடன் படம் பார்க்கப்போயாயிற்று.. படம் ஆரம்பிக்கும் முன்பே தியேட்டர் ஃபுல். முழுக்க முழுக்க (சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தையும் மறந்து வந்திருந்த) ஃபேமிலி கூட்டம். ஸார்... லேடீஸ் இருக்காங்க கொஞ்சம் கார்னர் ஸீட் எங்களுக்கு மாத்திக் கொடுங்களேன் என்ற புதுக் கணவர், ஸீட் க்ராஸ் செய்கையில் பெப்ஸியை மேலே ஊற்றி விட்டு ஸாரி சொல்லிப்போன ஸ்கூல் பெண், சந்தானம் அடிக்கும் ஜோக்குகளுக்கெல்லாம் கை தட்டத் தெரியாமல் முன் ஸீட்டை எட்டி, எட்டி உதைத்துக்கொண்டிருந்த நாலு வயது குட்டிப்பையன், உங்க அப்பா எப்பவுமே இப்டித்தான் லேட், படம் ஆரம்பிச்சப்புறம் தான் எப்பயும் உள்ளே வருவாரு, கல்யாணம் ஆனதில் இருந்தே இப்படித்தான் என பையனிடம் புலம்பியபடியே நுழைந்த ஒரு அம்மா, இந்தப் படத்துக்கு வராதே. கூட்டமா இருக்கும், யாராவது பாத்துட்டா என்ன பண்றது என்று துப்பட்டாவில் முக்காடு போட்டபடியே தன் ஆளிடம் முனகிய காலேஜ் பெண், எத்தனை வருஷம் கழிச்சு நீங்க என்னை தியேட்டருக்கு கூட்டிட்டடு வந்திருக்கீங்க என்று கொஞ்சலாக சொல்லிக்கொண்டிருந்த ஒரு பெரியம்மா என எல்லாரையும் ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் நீண்ட நாட்களுக்குப்பிறகு தியேட்டரில் பார்க்க முடிந்தது.

அந்த வகையில் உதயநிதி, ராஜேஷ், சந்தானம் டீமுக்கு ஒரு நன்றி சொல்லலாம்.. ஆனால் படத்தில் ஆறு இன்டர்வெல்.. ஒண்ணு நார்மல், அஞ்சு பாட்டு, அதைத்தான் சொன்னேன்.. தம்மடிக்கப்போகாதவர்கள் ஸீட்டுலேயே உக்காந்து நெளிய வேண்டியதுதான்... அதில் "அகிலா, அகிலா" பாட்டு ஜீவாவோட "என்னமோ, ஏதோ" மாதிரியே இருக்கு, "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு" பாட்டுக்கு மட்டும் நான் என் காலேஜ் பசங்க செட்டோட போயிருந்தா தியேட்டருக்குள்ள எந்திரிச்சு கெட்ட ஆட்டம் ஆடியிருப்பேன்.. சிரித்து, சிரித்து, கை தட்டி கை தட்டி ஓயவில்லை.. எல்லா ஸீனிலும் இருக்கும் சந்தானம், ஒரு லாங் ஸீனில் இல்லாமல் மிஸ்ஸாகி யோசிக்க வைத்து விட்டு அடுத்த கன்டினியூட்டியில் பேக்கிரவுண்ட் ஸாங்குடன் ஸ்கூட்டரில் வரும் ஸீன் தியேட்டரில் இருக்கும் எல்லாரையும் ஆரவாரிக்க வைக்கிறது..

கதை மட்டும் தான் படம் முழுக்க காணாமல் போன ஒரே விஷயம். அது மட்டுமல்ல... வெளியே வந்த பிறகு ரொம்ப நேரமாக யோசித்தும் எந்த ஸீன் எங்கே வந்தது என கோர்வையாக யோசிக்க முடியவில்லை.. ஆனால் திருப்தியாக படம் முடிந்து போனது. நல்ல ஓபனிங்.. புதுமுக ஹீரோ படம் பார்க்கிறோம் என்று ஏற்படாத உணர்வு.. கதை வேண்டாம், திரைக்கதை போதும் என்று மூன்றாவது ஹிட்டடித்த ராஜேஷின் ஃபார்முலா.. சந்தானத்தின் லவ்வராக வரும் குள்ளப் பிசாசின் அட்டகாசம், சென்ஸாருக்கு தப்பி வந்த ஒன்றிரண்டு ஏ வசனங்கள், கே.எஸ்.ரவிகுமார், சிவாஜி கணேசன், நித்யானந்தா, பால் தினகரனின் இயேசு மொழிபெயர்ப்பு என ரிவர்ஸில் கலாய்த்து இறங்கி விளாசும் சந்தானத்தின் வசனங்கள், படம் முழுக்க பில்ட் அப்பே இல்லாத பக்கத்து வீட்டுப்பையன் ஸ்டைல் ஹீரோ, என்று பல ப்ளஸ்களும் உண்டு..



என்னது? விமர்சனமா? ஏன் மேலே இவ்ளோ படிச்சது போதாதா? இதுக்கு மேல விமர்சனம் வேறயா? போய் புள்ள குட்டிங்களைப்படிக்க வைங்கப்பா... கப்பித் தனமா பேசிக்கிட்டு... படிக்க வச்சுட்டு, எக்ஸாம் முடிஞ்ச உடனே இந்த படத்துக்கு கூட்டிட்டுப்போங்க, நல்லா என்ஞாய் பண்ணுவாங்க, அவ்ளோ தான் சொல்வேன்...

திங்கள், 5 மார்ச், 2012

போகிற போக்கில்.... (ஓசூர் அல்லது ஹோசூர்) - - - - - "வடக்கு வாசல்"

பிரபல (உண்மையாகவே) வலைப்பதிவர் முத்துச்சரம் ராமலக்ஷ்மி மெயிலியிருந்தார்... டெல்லியில் இருந்து வெளிவரும் "வடக்கு வாசல்" இதழுக்காக ஒரு கட்டுரை தாருங்கள் என்று... தந்தாயிற்று.. இரண்டு நாட்கள் நேரம் கேட்டு...

எத்தனையோ வெப்சைட்டுகளுக்காக கட்டுரை எழுதியிருந்தாலும், விகடன், குமுதங்களில் ஜோக்குகள் எழுதியிருந்தாலும், என்னுடைய முழுக்கட்டுரையை இப்போது தான் முதன் முதலாக அச்சில் பார்க்கிறேன்... மனம் பொங்கி நிற்கும் சந்தோஷம் வார்த்தைகளில் தெரிவிக்க முடியாதது...

கட்டுரை நன்றாக, தெளிவாக "வடக்கு வாசல்" ஆசிரியர்களால் எடிட் செய்யப்பட்டுள்ளது.. வடக்கு வாசலுக்காகவே மற்றவர்கள் எழுதியிருக்கும் போது, போகிற போக்கில் நான் எழுதிய "போகிற போக்கில்" தான் அவர்களுக்கு அதிகம் வேலை வைத்துவிட்டது எனப்புரிகிறது.. என் பாணியிலான கமர்ஷியல் வேகமும், ஆங்கிலக்கலப்பும் அவர்களால் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.. இதுவும் நன்றே...

ஒரே ஒரு சிறு கருத்துப்பிழை... பக்கம் 33-ல் "அங்கிருந்து தினசரி கர்நாடக அரசுப் பேருந்து சேவையில் திருப்பதிக்கு" என்று அச்சாகி உள்ளது. அது "ஆந்திர அரசுப் பேருந்து" என்று இருக்க வேண்டும்

அந்த இதழில் வெளிவந்த என் கட்டுரை - "போகிற போக்கில்.... (ஓசூர் அல்லது ஹோசூர்)" - அதனை இங்கு மீள்பதிவு செய்கிறேன்.. ஆனால் எடிட் செய்யப்படாத வெர்ஷன் கீழே... (நன்றாக) எடிட் செய்யப்பட்ட வெர்ஷன் படங்களாக....

கட்டுரையை அச்சில் வெளியிட்ட "வடக்கு வாசலுக்கு" ஆயிரம் நன்றிகள்.. ஆசிரியர் பென்னேஸ்வரன் அவர்களுக்கும்.... ராமலக்ஷ்மி அவர்களுக்கு அதைவிட அதிகமாக...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
போகிற போக்கில்.... (ஓசூர் அல்லது ஹோசூர்)

புதிதாக வாங்கியிருக்கும் ஆன்டிராய்டு வசதி கொண்ட ஸேம்ஸங் கேலக்ஸி மொபைல்.. கையில் இருந்தாலே ஒரு சந்தோஷம்... பாடல்கள், கேம்ஸ், கூகிள் மேப், மெயில்கள், யூ டியூப், மினி டைரி, ஜி டாக், தினசரிகள், வாராந்தரிகள், ஈ புத்தகங்கள், அதுபோக எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் கணக்காக விக்கிபீடியாவில் இருந்து வெதர் கண்டிஷன் வரை எல்லாவற்றையும் நோண்டி, நோண்டி மற்றவர்களுக்குச்சொல்வதில் ஒரு பேரானந்தம்... குழந்தையைப்போல ஒரு குதூகலம்..

ஓசூர் வந்து சில வாரங்களிலேயே பிளாஸ்டிக் கலன்கள் விற்கும் நபர் ஒருவர் நண்பர் ஆனார்... ஒரே விலை தான் சார்... நோ பேரம்.. என்ற அவரது ஸ்ட்ராடஜி இரண்டுமுறை கடுப்படித்தாலும், பிற இடங்களில் விசாரித்த போது அவரது விலை குறைவாகவே இருந்தது... அவரும் அந்தப்பக்கம் போனால் ஒரு சல்யூட் அடிப்பார்.. வண்டியை விட்டு இறங்கிப்போய் பத்து நிமிடம் உபயோகமாகப் பேசிவிட்டு வரலாம்...

அவரிடம் நம்ம ஆன்டிராய்டை நோண்டி பாருங்க இதோ பாருங்க சார் என்னமா குளுருது ஓசூரு, பதினெட்டு டிகிரி காமிக்கிது சார், நாங்கள்ளாலம் ஏஸி ரூம்லயே பத்தம்போது தான் வைப்போம் என்றேன்.. அவர் சிரித்துவிட்டு (சாரில் இருந்து இறங்கி) தம்பி பதினெட்டு வருஷம் முன்னாடி ஓசூர் வந்தேன். அப்போ இருந்த குளுருக்கு இதெல்லாம் ஒண்ணுமேயில்லங்க.. ஆறு வினாடிக்கு மேல வெறும் தரையில நிக்க முடியாது.. பல்லெல்லாம் கிடுகிடுன்னு ஆடும். அந்தக்குளுருலயும் ஸ்வெட்டர் போடாம திரிவேன்.. அதோட கம்பேர் பண்ணா இதெல்லாம் ஒரு குளிரே இல்ல...

ஊட்டியில ஒரு பெரிய கான்வென்ட்ல தான் படிச்சேன்... சரியா இருபது வருஷம் முன்னாடி.. ஒருமுறை மேட்ச் விளையாடப் போனேன்.. முடிஞ்சதும் மொத்த டீமும் சேர்ந்து கிரவுண்டுல நின்னு முழு மலையும் தெரியுற மாதிரி போட்டோ எடுத்துக்கிட்டோம்.. சும்மா பச்சைப் பசேல்னு பின்னணியோட இருக்கு அந்தப்போட்டோ... இப்போ ரெண்டு வாரம் முன்னாடி ஊட்டி போனேன்... இந்த வாட்டி குடும்பத்தோட... அதே கிரவுண்டுல அதே இடத்துல நின்னு போட்டோ எடுத்துகிட்டேன்.. இப்போ பாருங்க... காண்பித்தார்... ஷாக்கிங்.. அந்த மலை முழுக்க கட்டிடங்கள்... கான்கிரீட் குன்றுகள்...

இதே மாதிரிதான் தம்பி ஓசூரும் ஆயிடுச்சு.. இதுவும், பெங்களூரும் இருந்த நல்ல க்ளைமேட்டுக்கு சுற்றுலாத்தலமா ஆகியிருக்க வேண்டிய இடங்க... ஆனா பெங்களூரு புல்லா சாஃப்ட்வேர் கம்பெனி, ஓசூர் புல்லா புரொடக்ஷ்ன் கம்பெனின்னு மொத்தமா மாத்திட்டாங்க.... இன்னைக்கு ஓசூருக்கு ஸாம்சங் பொருளுங்க ரெண்டு வாரத்துக்கு ஒரு லாரி லோடு வருதாம்... அவ்வளவும் விக்கிது.. எங்கேதான் போகுதோன்னு அந்த டிரைவர் சலிச்சுக்குறான்..

பெங்களூரில் ஐ.டியும், மற்ற கம்பெனிகளும் வளர வளர அங்கே பணியில் இருந்து கொண்டே கலாசாரத்தையும் விட்டு விடாமல், மற்ற செலவுகளையும் கட்டுப்படுத்தி, பிள்ளைகளை தமிழ் மீடியம் பள்ளிகளில் படிக்க வைக்கும் மனோபாவம் கொண்ட மிடில் கிளாஸூக்கு ஓசூர் ஓர் மகா, மெகா வரப்பிரசாதம்.. இங்கே வாடகைக்கோ, சொந்தமாகவோ வீடு வாங்கி, இங்கிருந்து தினசரி டிரெயின், பஸ் பிடித்து பெங்களூர் செல்பவர்கள் பல ஆயிரம் பேர்..

நான் யோசித்தேன் பதினெட்டு வருடம் முன்பு நான் எங்கே இருந்தேன் என்று.. கும்பகோணத்தில்.. இருந்த போது பக்கத்து வீட்டு பாபு அண்ணா ஓசூர்ல (பெரிய ஆச்சரியக்குறி) இருக்காங்களாம், ஓசூர்ல (மறுபடியும் பெரிய ஆச்சரியக்குறி) இருக்காங்களாம், ஹெச்.எம்.டி ல வேலையாம்... அங்கயே செட்டில் ஆயிட்டாங்களாம்.. ஓசூர், ஓசூர் என அக்கம்பக்கத்தவர்கள் ஓதியது ஓசூர் பற்றிய ஒரு பெரிய, இனம்புரியாத பிம்பத்தை மனதில் தோற்றுவித்திருந்தது... (ஓசூரைப்பார்த்தாயிற்று.. ஆனால் பாபு அண்ணாவைத்தான் நான் பார்த்ததே இல்லை..)

பாபு அண்ணாவிற்கு ஒரு தம்பி, கணேஷ் அண்ணா என்று.. டீனேஜ் முடியும் தறுவாயில் தங்க(ம்) வேலை செய்து, சில வருடங்களிலேயே பெரியாளாகி கூடவே தொழில் செய்த மெட்ராஸ் நண்பன் ஒருவனால் ஏமாற்றப்பட்டு, ஆளவந்தாருக்கு பின்பு, நாவரசுக்கு முன்பாக துண்டு துண்டாகி சன் டிவி ஃப்ளாஷ் நியூஸில் வந்தார். மெட்ராஸ் காரனை நம்பாதே நம்பாதேன்னு சொன்னேனே கேட்டியா? என்று அந்த அத்தை அழுதது இன்னும் கண்களிலேயே நிற்கிறது.. கணேஷ் அண்ணாவின் துண்டு துண்டான உடலின் போட்டோவை இன்னமும் மறக்க முடியவில்லை..

ஒரு ஊர் என்பது வாழ்க்கையை ஓட்டுவதற்கான, குடி இருப்பதற்கான ஓர் இடம் மட்டுமே என்ற எனது எண்ணத்தை அடியோடு துடைத்தெறிந்த இரு சம்பவங்கள் அவை.. ஊர் என்பது ஊர் அல்ல அது ஓர் உயிர்... எண்ணிப்பார்க்கையில் என் வாழ்க்கையில் திருப்பூர், கும்பகோணம், சேலம், ஈரோடு, கோவை, சென்னை, அப்புறம் கொஞ்சமே கொஞ்சமாக டெல்லி மற்றும் மும்பை, இப்போது ஓசூர் என மாறி மாறிப்புயலடித்ததில் நான் கொண்ட பாதிப்பு தானேவை விட மிக அதிகமே...

மூன்று வருடம் இருந்திருந்தாலும் சென்னையின் கலர் என்னைப்பொறுத்த வரை கறுப்பு தான்... சென்னை பற்றி எனது மனதில் ஊறிய பிம்பங்கள் என் சென்னை வாழ்க்கையை தட்டில் ஊற்றிய பாதரசம் போல் ஒட்டாமலேயே இருக்கச்செய்தது.. ஆனால் ஓசூர் எனது கற்பனையில் ஒரு இனம்புரியா பிம்பமாகவே பதிந்து போயிருந்தது... வந்து ஒன்றரை வருடமாகியும் இன்னமும் அப் புதிரை என்னால் அவிழ்க்க முடியவில்லை...

ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து இடது புறமாக சுமார் 7 கிலோமீட்டர் கடந்தாலே போதும் ஊர் முடிந்து விட்டது.. கர்நாடகா உங்களை வரவேற்கிறது.. என்று எல்லா படங்களிலும் தலைகாட்டும் ஆர்ச் வரவேற்கிறது.. போனில் தவறிப்போய் இன்கமிங் அட்டெண்ட் செய்தால் போச்சு... ரோமிங் பாஸ்... ஜாக்ரதை. ஓசூர் முழுக்க சிப்காட் ஒன்று, சிப்காட் இரண்டு, என்று அசோக் லேலண்டில் துவங்கி, டி.வி.எஸ், டி.டி.கே, ஹெச்.எம்.டி என எவ்வளவோ கம்பெனிகள்.. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தினக்கூலி, வாரக்கூலி, மாதச்சம்பள தொழிலாளிகளை ஏற்றியபடி அங்குமிங்குமாய்ப்பறக்கும் கம்பெனி வண்டிகள்...

ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர், ஆட்டோ ஏறி அமர்ந்து எவ்ளோண்ணா (தமிழ்) என்றால் நாப்பது என்று பதில் வரும்.. "ஏமி அன்னையா? இந்த்தா செப்தாவு?" என்றால் "சரி முப்பை ரூபாய் இவ்வு..." (என்னண்ணே, இவ்ளோ சொல்றீங்க? சரி முப்பதே கொடு) சடாரென ஷேர் விலை கூட இவ்வளவு இறங்காது...

ரயில்வே ஸ்டேஷனுக்கு போகும்போது அவசரத்திற்கு ஆட்டோ பிடித்தாலும், அங்கிருந்து வாபஸ் வரும்போது நடந்தே வந்து விடலாம், ஜஸ்ட் பதினைந்து முதல் இருபது நிமிடம், மிச்சமான காசை செலவு செய்ய வேண்டுமே? இளநீர் சாப்பிடலாமா? பனிரெண்டு ரூபாய்க்கு கூவிக்கொண்டிருந்த அம்மாவிடம் போய் "காய எந்த்த அம்மா?" என்றால் முகத்தை பார்த்து ஒரு வினாடி தாமதித்து "பதி ரூபாய்லு இவ்வப்பா... என்கிறார்.. புரிகிறதா? ஓசூரில் தெலுங்கின் ஆதிக்கம் அதிகம்... ரோட்டில் இறங்கி தைரியமாக எவரிடமும் தெலுங்கு பேசலாம்...

நான்காண்டுகளுக்கு முன்பு அலுவலக வேலையாக சென்னையிலிருந்து பேங்களூர் (ஸாரி, பெங்களூரு) சென்ற போது ஆபீஸில் அட்வைஸி அனுப்பினார்கள். அங்கே இறங்கி தைரியமாக ஹிந்தி பேசலாம், எல்லோருக்கும் புரியும், ஓட்டை ஹிந்தியாக இருந்தாலும் பரவாயில்லை, அடிச்சு விடு என்று அவர்கள் சொன்னதை நம்பி ஒருமுறை ஆட்டோவில் ஏறி லால் பாக் ஜானா ஹை, கித்னா லோகே என்றேன்.. என்ன ஆச்சர்யம், எழுபது ரூபாய் என்று (ஹிந்தியில் தான் அய்யா) பதில் சொன்னான், எனக்கு தான் இப்போது மறந்து விட்டது.

அதே போல் இப்போது என்னைக் கேட்டால் தைரியமாகச் சொல்வேன்.. ஓசூரில் தெலுங்கு ஆறாக ஓடுகிறது... தெலுங்கு, தமிழ், கன்னடம், மூன்றுமே இங்கே சாமானியர்களின் மொழிகள்.. அவ்வளவு ஏன்? மூன்றும் கலந்த ஒரு புதிய மொழியே உருவாகிக்கொண்டு இருக்கிறது...

ஒரு கன்னட ஃபேமிலி நேதாஜி ரோட்டில் ஓட்டல் நடத்துகிறார்கள்... நீங்கள் எந்த மொழியில் டிபன், பார்சல் கேட்டாலும் அசராமல் கன்னடத்திலேயே பதில் சொல்வார்கள்.. இரவத்து, மூவத்து, என்று கன்னடம் கற்றுக்கொள்ள பகீரதப்பிரயத்தனம் செய்து பார்க்கிறேன்.. ம்ஹூம்.. ரொம்பக் கடினமாக இருக்கிறது... சென்னையிலிருந்து மாற்றலாகி வந்த நண்பரை கூட்டிக்கொண்டு போனேன்.. வார்த்தைக்கு வார்த்தை ".....த்தா" போட்டுப்பேசும் அவனுக்கு மும்மொழி கலந்த இந்தச் செம்மொழி பேசக்கடினமாயிருந்தது..

நேஷனல் இன்டக்ரிட்டி என்று சொல்வார்கள்... இங்கே அது நிறையவே இருக்கிறது... கண்கூடாகத் தெரிகிறது.... அவ்வளவு ஏன்? சில பெங்காலித் தாய்மார்களைக் கூட காண நேர்ந்தது. எப்படி பெங்காலி என்று சொல்கிறாய் என்கிறீர்களா? அதற்கும் ஒரு க்ளூ உண்டு.. திருமணமானோர் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டி, குங்குமத்திற்குப்பதில் நெற்றி மேல் ஆரஞ்சு நிற செந்தூரம் வைத்திருப்பார்களாம்.. பெண்கள் இடது கையில் கட்டாயமாக ஒரு தாயத்து கட்டியிருப்பார்களாம்... கட்டுமானத் தொழிலுக்காக வந்திறங்கி அங்கங்கே செட்டிலாகிப்போன பெங்காலித்தொழிளாளர்களின் பீவிக்கள் அவர்கள்...

மற்றபடி......

போத்தீஸ், சரவணாஸ் போன்ற பெரும் துணிக்கடைகள் ஏதும் இல்லை... பீட்ஸா இன்னும் வரவில்லை... பதினைந்து ரூபாய்க்கு நல்ல மீன் துண்டு கிடைக்கிறது.. கூர்க்கா பத்து ரூபாய்க்கு இரண்டாக மடங்கி கும்பிடு போடுகிறான்... மூன்று பெரிய ஜூவல்லரிகள் சமீபமாக களம் இறங்கியிருக்கிறார்கள்.. தமிழ்நாடு என்பதற்கு ஆதாரமாக ஒவ்வொரு தெருவும் டாஸ்மாக் கொண்டிருக்கிறது... சன் க்ரூப் சேனல்கள் இந்த மாதத்தில் இருந்து வராது என முப்பது ரூபாய் குறைக்கிறார் கேபிள்காரர்,

(அங்கங்கு ஆந்திரா வாடை குறைந்த) ஒன்றிரண்டு ஆந்திரா மெஸ்கள் தட்டுப்படுகின்றன, தொண்ணூறு சதவீத ஓட்டல்கள் நான் வெஜ் விற்கின்றன, பெங்களூர் புறநகர் ஒன்றில் இருந்து டொனேஷன் கேட்டு கதவைத்தட்டுகிறாள் ஒரு அம்மா, ஹைவேஸ் வந்த பிறகு ஓல்டு பெங்களூர் ரோடு கடைகளாலும், டிராபிக்காலும் நிறைந்து போயிருக்கிறது.. எல்லா பெரிய ஊரிலும் இருக்கும் எம்.ஜி (மகாத்மா காந்தி) ரோடு இங்கும் ஒன்று உண்டு..
நகரைச்சுற்றியுள்ள தியேட்டர்களில் விஜய்யின் தமிழ் "நண்பன்", ப்ரின்ஸ் மகேஷ் பாபுவின் தெலுங்கு "பிஸினஸ்மேன்", ஹிந்தி வித்யா பாலனின் "டர்ட்டி பிக்சர்", ஹிந்தி கரன் ஜோகரின் "ஏக் து, ஔர் ஏக் மே", இங்கிலீஷ் ராக் நடித்த "ராட்சத பல்லி"யும் ஓடுகிறது அந்தந்த மொழிகளிலேயே... எல்லா தியேட்டர்களிலும் பேனர் கட்டுகிறார்கள், முதல் வாரம் ஹவுஸ்புல் ஷோக்கள், அதே தெருமுனைக்கடைகளில் அதே படத்தின் டி.வி.டி கிடைத்தாலுமே...

ஊரில் மிகப்பிரபலம் சந்திர சூடேஸ்வரர் ஆலயம், மலைக்கோவில். ஊரில் எங்கிருந்து பார்த்தாலும் அந்த மலையும், கோவிலும் தெரிகிறது.. கூகிள் மேப் தேவையே இல்லை.. கோபுரத்தைப்பார்த்தபடியே வழிகண்டுபிடித்துப்போய்விடலாம்.. அதற்கு முன்னால் இருந்த மலையில் தான் கொஞ்ச நாள் ஹோசூரின் டெம்பரவரி பஸ் ஸ்டாண்டு இருந்தது.. பழைய பேருந்து நிலையத்தை இடித்து, மராமத்து பார்த்து புதுப்பித்து சென்ற வருடம் ஸ்டாலின் அமைச்சராயிருந்த போது திறப்பித்தார்கள்.. பை தி வே, அவர் கலந்து கொண்ட கடைசி திறப்பு விழாவும் இதுதான் என்றார்கள்..

அங்கிருந்து தினசரி ஆந்திர பஸ் சர்வீஸில் திருப்பதிக்கு இரவு வண்டி உண்டு முன்பதிவு வசதியுடன், ஜிலேபி எழுத்துக்களுடன் நீண்ட மெட்டாடர் வேன் டைப்பிலான ஒரே ஒரு திறப்பு வைத்த பெங்களூர் பஸ்ஸூகள் சாரி, சாரியாக நகர்ந்து கொண்டே இருக்கின்றன, திருக்குறள் எழுதப்பட்ட நம்ம ஊர் தானா ஆனா (தமிழ்நாடு அரசு) தமிழ்நாட்டுவண்டிகள் அரசுப்பேருந்துகள் நிறைய..

ஓசூரில் இருந்து இடதுகைப்பக்கம் திரும்பி ஒரு பத்து கிலோ மீட்டர் போனால் கர்நாடகா வந்து விடுகிறது... சத்யஜித்ரே படத்தை விட சூப்பரான (ரோடே இல்லாத) கிராமங்களைப்பார்க்க முடிகிறது.. அப்படியே வலது கைப்பக்கம் திரும்பி ஒரு பதினந்து கிலோமீட்டர் போனால் ஆந்திரா... செமை மசாலா வாசனையுடன் கூடிய மக்களையும் பார்க்க முடிகிறது... இந்தப்பக்கம் ஆந்திரா பார்டர், அந்தப்பக்கம் கர்நாடகா பார்டர், நடுவில் ஓசூர்... பள்ளிகளில் தெலுங்கு டீச்சர், தமிழ் டீச்சர், கன்னடா டீச்சர், ஹிந்தி டீச்சர் கண்டிப்பாக உண்டு....

பணி நிமித்தமாக ஓசூரைச்சுற்றியுள்ள பள்ளிகளுக்குச்செல்லும் போது இப்போது நான் டீச்சர்களிடம் மறக்காமல் கேட்கும் முதல் கேள்வி...

"எல்லாருக்கும் தமிழ் தெரியுமா? அல்லது என் டிரெயினிங்கை ஆங்கிலத்திலேயே தொடரட்டுமா?"....

நேஷனல் இன்டக்ரிட்டி

சனி, 14 ஜனவரி, 2012

தி டார்க்கஸ்ட் ஹவர் (ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்)



நம்ம ஊர் தமிழ்ப்படங்களில் காதல், போலீஸ், நகைச்சுவை என எவர்கிரீன் ஃபார்முலாக்கள் பல உண்டு. அதுபோல ஹாலிவுட்டின் பணம் குவிக்கும் சக்ஸஸ் ஃபார்முலாக்களில் ஒன்று ஏலியன்கள்.. அவை எந்த உருவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். அவற்றை வைத்து எந்த காம்பினேஷனிலும் படத்தை எடுக்கலாம். கலெக்ஷ்ன் நிச்சயம்.

ஒரு ஊர்ல மக்களெல்லாம் சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருந்தாங்களாம். ஒருநாள் திடீர்னு வேற கிரகத்துல இருந்து ஜீவராசிங்கள்லாம் வந்து அந்த ஊர்ல வந்து இறங்குச்சாம். வந்து, திடீர் திடீர்னு ஊர் மக்களையெல்லாம் கொன்னு சாப்பிட ஆரம்பிச்சுச்சாம். அப்போ அர்னால்ட் மாதிரி, டாம் குரூஸ் மாதிரி ஒரு ஹீரோ தன்னோட நண்பர்களோட சேர்ந்து அதுங்களோட வீக்னஸை கண்டுபிடிச்சி, ஆயுதம் தயாரிச்சி அதுங்களையெல்லாம் அழிச்சானாம்.. அதோட கதை சரியாம். நம்மூர் பாட்டிகளைப்போல அமெரிக்க பாட்டிகள் கதை சொன்னால் இப்படித்தான் இருக்கும்.

ஹாலிவுட்டில் வெளியாகும் ஏலியன் திரைப்படங்களை பொதுவாக டிஸாஸ்டர் மூவி அல்லது ஹாரர் மூவி வகைகளில் சேர்க்கலாம். அவற்றில் எப்போதும் அமெரிக்கா மட்டுமே ஏலியன்களால் தாக்குதலுக்கு உள்ளாவது வழக்கம்.இந்த முறை ஒரு மாறுதலுக்கு "தி டார்க்கஸ்ட் ஹவர்" படத்தில் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வந்து இறங்குகின்றன ஏலியன்கள்..

மாஸ்கோவின் சனிக்கிழமை டிஸ்கோ பப் ஒன்றில் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஜோடிகளின் பார்வையில் ஆரம்பிக்கிறது படம்.. இரவில் அவ்வப்போது மினுக்கும் ஆரஞ்சு பூ நிறத்தில் வந்து இறங்கும் கண்ணுக்குத் தெரியாத ஏலியன்கள் மனிதர்களை விபூதிச் சாம்பல் போல பீஸ் பீஸாக்கி உண்ணத் துவங்குன்றன. அவற்றின் தாக்குதலில் இருந்து இரண்டு ஜோடிகள் உள்ளிட்ட ஐந்து பேர் தப்பிக்க வழி தேடுவதே கதை.

படத்தின் காட்சிகள், ஸ்பீல்பெர்க்கின் "வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ்" படத்தின் காட்சிகளைப்போல அமைந்திருப்பது ஒரு மெகா பலவீனம். தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் தட்டையான திரைக்கதை.. ஹாலிவுட்டிலும் மொக்கை படங்கள் எடுப்பார்கள் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். த்ரில் கூட்டும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் 3 டி டெக்னாலஜி மட்டும் அருமையாக அமைந்திருக்கிறது. ஓரளவு போரடிக்காமல் சீட்டில் அமர வைப்பவை அவை மட்டுமே.

டைரக்டர் க்ரிஸ் கோரக் இதற்கு முன் எட்டுப்படங்களில் ஆர்ட் டைரக்டராக இருந்த திறமை இதில் பளிச்சென்று தெரிகிறது.. ஹீரோ, ஹீரோயின்கள் ஒளிந்திருக்கும் பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மாஸ்கோவின் பில்டிங்குகள், அவற்றின் உட்புறங்கள் ஆகியவற்றின் பளிச்சென்ற ஆர்ட் டைரக்ஷன் கண்ணைக்கவர்கிறது. பிராட் பிட்-டின் ஃபைட் கிளப், டாம் குரூஸ் நடித்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-கின் மைனாரிட்டி ரிப்போர்ட் படங்களுக்கு தலைவர்தான் ஆர்ட் டைரக்டர்.



பொதுவாக இந்த மாதிரியான ஹாரர் திரைப்படங்களை ஏதேனும் ஒரு பிரபல ஹிட் நாவலை பின்னணியாகக் கொண்டு எடுப்பது ஹாலிவுட்டின் வழக்கம். ஆனால் இந்தப்படத்தை எந்த நாவலில் இருந்தும் எடுக்காமல் நாலு பேர் ரூம்போட்டு யோசித்து மாமி மெஸ் இட்லி, கெட்டிச்சட்னியுடன் நாள் கடத்தி திரைக்கதை எழுதி எடுத்திருக்கிறார்கள். அவ்வளவு கற்பனை வறட்சி. எங்கிருந்து ஏலியன்கள் வருகின்றன, ஆரம்பத்தில் இரண்டிரண்டாக பிரியும் அவை பின் ஏன் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றன, ஏன் இரும்புக்கூண்டு ரூமுக்குள் வர முடியவில்லை, எலக்ட்ரானிக், மைக்ரோவேவினால் எப்படி பாதிக்கப்படுகின்றன, கடைசியில் வரும் சப்மெரின் எப்படி தப்பித்தது, அது எங்கே போகின்றது, பூமிக்குள் ஓட்டை போடும் காரணம் என்ன, சப்மெரினில் காணாமல் போன ஹீரோயின் அடுத்த நிமிஷமே நடு சிட்டியில் ஒரு பில்டிங்கிற்குள் போனது எப்படி என ஒரு லாஜிக்கும் இல்லாத காட்சிகள்.

போட்ட காசை வசூலில் எடுத்து விட்டாலும், இது மிகவும் சுமாரான படமே என உலகம் முழுக்க விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டு, அனைத்து விதமான சினிமா ரேட்டிங்குகளிலும் மிகவும் ஆவரேஜான ரேட்டிங்கை மட்டுமே வாங்கியுள்ளது "தி டார்க்கஸ்ட் ஹவர்".

சுக்கு காபி குடித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு மடக்காக குடிக்க குடிக்க அடுத்து மடக்கில் என்னவோ பெரிய டேஸ்டுடன் வரப்போகிறது என்று தோன்றும். ஆனால் கடைசி வரை பெரிதாக ஏதுமின்றி அப்படியே முடிந்து போகும்.. அப்படி இருக்கிறது படம். எப்படா முடிப்பீங்க நொண்ணைகளா? என்று கத்தும் ரசிகக்கூட்டதை தியேட்டரில் காண முடிகிறது.

படமும் நீளம் ஒன்றுமில்லை. வெறும் ஒன்றரை மணிநேரம் மட்டுமே. தவிர்க்கலாம்.