வெள்ளி, 21 டிசம்பர், 2018

மின்னம்பலம் சிறப்புப் பார்வை: வகுப்பறையின் கரும்புள்ளிகள்!

மின்னம்பலம் மின்னிதழில் 04 டிசம்பர் 2018 அன்று வௌியான கட்டுரை

நான் இங்கே தந்திருப்பது எடிட் செய்யப்படாத என் கட்டுரை. மின்னம்பலம் டீம் அதை சின்னச்சின்ன திருத்தங்கள் செய்து மெருகேற்றி வெளியிட்டிருந்தார்கள். அந்தக் கட்டுரையைப் படிக்க இந்த லிங்க்


பள்ளிகளில் "க்ளாஸ்ரூம் அப்ஸர்வேஷன்" செய்வது என் வேலைகளில் ஒன்று. ஒரு வகுப்பில் கடைசி வரிசையில் அமர்ந்து அந்த வகுப்பு எப்படி இருக்கிறது, ஆசிரியர் (இருபால்) எப்படி நடத்துகிறார், நடத்தும் முறை (pedagogy), மாணவர்கள் கற்பது எப்படி? அவர்களுக்குப் புரிகிறதா? என்று முடிந்தவரை அவர்களை தொந்திரவு செய்யாமல் கவனிப்பது. அதே பாடத்தை இன்னும் சிறப்பாய் (நடத்தும் முறையை - teaching strategy மாற்றி) எப்படி நடத்தலாம்? என்றும் சொல்லித்தருவது. சில சமயம் ஆசிரியர் content error, pronunciation error, data error, information error செய்தால் மட்டும் உள்ளே புகுந்து திருத்த வேண்டும். சில ஆசிரியர்கள் அனுமதித்தால் (அவர்களது உடல்மொழியிலேயே தெரிந்து விடும்) அவருடன் சேர்ந்து co - teaching செய்வது.

அதில் சில ஆசிரியர்கள் ஆச்சரியப்படுத்துவார்கள். அவர்களிடம் செம கான்ஃபிடன்ஸ் இருக்கும். அவர்களது ஃப்ளோ ஆச்சரியப்படுத்தும். சிலர் மாணவர்களிடம் கேள்விகளாகவே கேட்டு, அவர்களுக்குத் தேவையான பதில்களை மாணவர்களிடமே வாங்கி (brainstorming) போர்டில் கொண்டுவருவார்கள். அது மிகவும் சிறந்த முறை. சிலர் கஷ்டப்பட்டு இரண்டு மூன்று மணி நேரம் உழைப்பைக் கோரும்அளவுக்கு மெட்டீரியல்கள் செய்து வருவார்கள்,  அட்டகாசமாக இருக்கும். சிலரது board usage அருமையாக இருக்கும், கோடு போட்டு, எல்லை பிரித்து, படம் வரைந்து, அம்புக்குறிகள், புல்லட் பாயிண்டுகள் என. வகுப்பு முடியும் போது கரும்பலகை தெளிவாக ஒரு PPT slide போல இருக்கும். சிலர் HOTS - Higher Order Thinking Skills வகையில் மாணவர்கள் சிந்திக்கும் விதத்தில் கேள்விகள் கேட்டு அவர்களது யோசனையைத் தூண்டுவார்கள். அது long term ல் பலன் தரும்.

ஆனால் இதை மீறிய சில திருஷ்டிப் பொட்டுகளும் உண்டு.

இந்த வாரம் ஒரு பள்ளிக்குப் போயிருந்தேன். ஒரு ஆசிரியை "கதவைத்திறந்து வைக்கிறேன். அப்டியே ஓடிரு" எனும் தோன்றும் அளவு அட்டகாசமாக வகுப்பெடுத்தார். அவர் அன்றைக்கு நடத்தியது ஒரு ஆங்கில போயம். ஆரம்பமே அசத்தல். "(உதா) ரொஸாரியோ ரேமண்ட் ஈஸ் ஆத்தர். ஓக்கே? அண்டர்ஸ்டுட்?" என்றார். பிள்ளைகள் எல்லாரும் "பே" என்று அவர் முகத்தையே பார்த்தார்கள். மூன்றாம் வகுப்புப்பிள்ளைகள். (மை மைண்ட் வாய்ஸ் - ஏம்மா? யாரும்மா அந்த ரொஸாரியோ ரேமண்ட்? ரஜினியா? அப்துல் கலாமா? .பி.எஸ் ஸா? பேரைச்சொன்னவுடன் தெரிய?) அவ்வளவு தான். அந்தப் போயம் - படிக்கத் துவங்கி விட்டார். அதிலும் உச்சரிப்புப்பிழைகள் வேறு. மாணவர்களைத் திருப்பிச் சொல்லச் சொல்லவில்லை. படிக்க வைக்கவில்லை. ப்ரிப்பரேஷன் இல்லை. குறைந்த பட்சம் (தனக்குப்) புரியாத வார்த்தைகளைக்கூட பொருள் எழுதி வைத்துக் கொள்ளவில்லை. எந்த வித teaching aids யும் உபயோகிக்கவில்லை. ப்ளாக் போர்டைத் தொடவே இல்லை. இன்னும் எத்தனையோ இல்லைகள்.

கிட்டத்தட்ட இருபது நிமிடம் கவனித்தேன். ஒரு ப்ளானிங்கும் இல்லை. ஒரு ஆசிரியரிடம் அன்றைக்கான Teaching Plan இருக்க வேண்டும். அதாவது, இந்த 40 நிமிடம் நான் என்ன செய்யப் போகிறேன். உதா - மாணவர்களை இரண்டு பாரா படிக்கவைப்பேன், pronunciation error வரவாய்ப்புண்டு, அதைத் திருத்துவேன். போர்டில் rhyming words எழுதிப்போடுவேன். அதை க்ரூப்பாக அவர்களை சத்தமாக படிக்க வைப்பேன். ஒரு ரெண்டு நிமிட வீடியோ காண்பிப்பேன் (அதைத் தேடி எடுத்து வைத்துக் கொள்வேன்), அதை pause செய்து விளக்குவேன். Author பற்றி குறிப்பு சொல்வேன். அவரது ஃபோட்டோவை பிரிண்ட் எடுத்துக் காண்பிப்பேன், பிறகு ஒரு க்ரூப் ஆக்டிவிடி, பிறகு நோட்டில் எழுத வைப்பேன், வகுப்பறையைச் சுற்றி வந்து அவர்கள் செய்யும் தவறுகளைத் திருத்துவேன், இப்படி இப்படி என்று ஒரு ப்ளான் வேண்டும். எதுவும் இல்லை. புத்தகத்தில் இருப்பதை அப்படியே படிக்கிறார். அதை மீண்டும் மாணவர்களிடம் சொல்கிறார். தவறுகளுடன். இதுக்கு எதுக்கு நீ? அவனே படிச்சுக்குவானே?

இது போன்ற சில மந்தி (இவ்வார்த்தையை உபயோகப்படுத்தியதற்கு மன்னிக்க) களால் தான் ஆசிரியர் ப்ரொஃபஷனை சிலர் கிண்டலடிக்கிறார்கள். ஒன்றுமே தெரியாது, படித்த டிகிரியிலும் 15 அரியர் வைத்துப் படித்தேன். வீட்டில் சும்மா இருப்பதற்கு வேலைக்கு வருகிறேன். புதிதாய் எதையும் கற்றுக்கொள்ள மாட்டேன். குறைந்த பட்சம் அந்த பாடத்திற்கான ப்ரிப்பரேஷன் கூட செய்யமாட்டேன் என்பவர்கள். தாம் செய்யும் ஒரு தவறு மாணவர்கள் மனதில் பதிந்து அது 30 ஆக, 40 ஆக பல்கிப் பெருகி வெளியே போகிறது என்பது இவர்களுக்கு உறைப்பதில்லை. மேலும் ஒருவேளை அந்தக்காலத்து வாத்தியார்கள் இப்படி இருந்திருக்கலாம். ஆனால் அப்போதும் எத்தனையோ சிறந்த ஆசிரியர்கள் இருந்தார்கள்.

ஆனால் இன்று? எந்தக் காலத்தில் இருக்கிறோம்? "எதற்காகப் பாடம் நடத்துகிறோம்?" என்பதே இவர்களுக்கு உறைப்பதில்லை. வெறுமனே போர்ஷன் கவர் செய்தால் ஆச்சா? "அந்தப்பாடங்களைப் படித்து விட்டு வெளியே நிஜ வாழ்க்கையில் அவன் அதை எங்கே உபயோகிக்கப் போகிறான், இன்றைய உலகத்தின் போட்டிகளை சமாளித்து வெற்றி பெற அவனுக்கு இது எந்த வகையில் உதவும்?" போன்ற எந்த சிந்தனையும் இவர்களிடம் இல்லை. சரி, எங்களைப்போன்றவர்கள் training வகுப்பெடுத்தால் அதிலாவது கற்றுக்கொள்வோம் என்ற எண்ணமும் இல்லை. அனைத்து ஆசிரியர்களும் இப்படி இல்லை. ஆனால் ஒரு 20 சதவீதம் பேர் இன்றும் இப்படி உண்டு.

மாதத்திற்கு ஒன்றிரண்டு பேராவது இப்படி கண்ணில் பட்டு பீ.பி யை எகிற வைக்கிறார்கள். இவர்கள் மாறாததற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. அது இந்த industry. கல்வித்துறையில் வேலை வாய்ப்புகள் மிகமிக அதிகம். ஒவ்வொரு வருடமும் பலப்பல புதிய பள்ளிகள் துவங்கப்படுகின்றன. இப்பள்ளியில் துரத்தினால் அடுத்த வாரமே வேறு எங்காவது தேவை இருக்கும் இடத்தில் போய் சேர்ந்து கொள்வது. அவர்களும் வேறு ஆள் கிடைக்கும் வரை இந்தம்மா இருக்கட்டும் என்று வைத்துக் கொள்வது. இது ஒரு cycle. இது போன்ற சிலரை மாற்றுவது மிகக் கடினம்.

இதில் கொடுமை என்னவென்றால், சில பள்ளிகளில் அடிக்காத குறையாய் துரத்தப்பட்ட ஆசிரியர்கள் (இருபால்) சிலர் வேறு வேறு பள்ளிகள் மாறி, நான்கைந்து வருடத்தில் ஏதேனும் ஒரு ஊரில் ஒரு சிறு பள்ளியில் ப்ரின்ஸிபலாகவே அமர்ந்து இருப்பார்கள். நாம் இந்த industry யில் இருப்பதால் அவர்களைத் திரும்ப சந்திக்க வேண்டிய நிலை கூட வரலாம். வருத்தமாக இருக்கும்.


எம்.ஜி.ஆர் பாடியது போல "திருடனாய்ப்பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது". அவர்கள் தான் மாற வேண்டும்.


புதன், 5 செப்டம்பர், 2018

சிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்?

மின்னம்பலம் மின்னிதழில் 27 ஆகஸ்ட் 2018 அன்று வௌியான கட்டுரை
- எஸ்கா
அனைவரும் சென்னையைப் பற்றிப் பெருமையாகப் பதிவிட்டுக் கொண்டிரும் அதே வேளையில் சென்னையைப் பற்றி எனக்கு ஒரு மாற்றுக்கருத்து இருக்கிறது. பிறந்த ஊரோ, புகுந்த ஊரோ, வந்த ஊரோ, வாழ்ந்த ஊரோ, எதுவாயினும் அது நாம் செய்யும் வேலை, நமது குடும்பம், தங்குமிடம், நமக்கு வாய்த்த உறவுகள், தினசரிப் பயணம் போன்ற பல சூழ்நிலைகளைப் பொறுத்தே நமக்குப் பிடிக்கும் என்பது என் கருத்து.
2007 முதல் 2010 வரை மூன்று வருடங்கள் சென்னையில் இருந்தேன். ஹிக்கின் பாதம்ஸ், கன்னிமாரா லைப்ரரி புத்தகங்கள், எப்போதாவது செல்லும் மெரினா, பெசன்ட் நகர் பீச்சுகள், சில சின்ன இலக்கியக் கூட்டங்கள், புத்தகக் கண்காட்சியில் கண்ணில் பட்ட சினிமாப் பிரபலங்கள், சத்யம் தியேட்டரில் அசரடிக்கும் த்ரீ டி.யில் அவதாரும், 2012 ருத்ரமும், நோவாவும், பலவித, பலரக ஹோட்டல்களில் ருசியான விதவித உணவுகள் ருசிக்கும் வாய்ப்புகள் என சின்னச்சின்ன சந்தோஷத்தருணங்கள் கிடைக்கவே செய்தன.
ஆனால், ஊர் முழுக்கக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பாலங்கள், அதனால் ஏற்பட்ட பெரும் டிராஃபிக், உஷ்ணமான மாலை பஸ் பயணத்தில் உடல் முழுதும் ஊறும் வியர்வை, பேச்சிலர் ரூம், வேலை விட்டு வந்ததும் அடுத்தவனுக்கு இருக்கிறதா என்று யோசிக்காமல் சட்டியைக் கழுவித்தின்னும் ஒருத்தன், உடல் நாற்றத்துடன் ஜட்டியோடு அமர்ந்து சோறு தின்றுகொண்டே டி.வி பார்க்கும் ஒருத்தன், காற்றே இல்லாத ஏரியாக்கள் (இத்தனைக்கும் நான் இருந்தது குரோம்பேட்டைக்கு உள்ளே ஒரு பகுதி) அறையில் மொய்க்கும் கொசுக்கள், காற்றில்லாமல் பிசுபிசுக்கும் உடலில் ஓடோமாஸ் தேய்க்கக்கூட முடியாத நிலை என ஒரு வாழ்க்கை.
சிறு தெருக்களில் ரோட்டிலேயே கொட்டப்படும் குப்பைகள், சின்ன விஷயத்துக்காக கன்னாபின்னாவென்று அடித்துக் கொள்ளும் கூட்டம், எங்கே போகவேண்டும் என்றாலும் இரண்டு மணிநேரப்பயணம், கடும் டிராஃபிக், அடுத்தவனை மதிக்கத் தெரியாத (அப்போதைய பீக்-கில் இருந்த) ஐ.டிக்காரர்கள் என பாதி ஊர் அப்படித்தான் இருக்கிறது. ஊரில் படம் பார்க்க 10 ரூபாய் டிக்கெட் என்றால் இங்கே ஒரு படம் பார்க்கக் குறைந்தது 80 ரூபாய் 120 ரூபாய் டிக்கெட், ஒரு பக்கம் அனைத்து வசதிகளுடன் அல்ட்ரா மாடர்ன் இளசுகள், ஒரு பக்கம் அவர்களை வெறித்து மட்டுமே பார்க்கும் கீழ்மட்ட இளசுகள், இரண்டிலும் சேரமுடியாத எம்மைப் போன்ற ஒரு கூட்டம், என சென்னை எனக்கு வேறு முகம் காட்டியது.
7000 மும் 10000 மும் சம்பளம் வாங்கும் எத்தனை பேரால் அடிக்கடி சத்யம் போக முடியும்? ஸ்பென்சரிலும், அல்சா மாலிலும் வெறுமனே சுற்றிப்பார்க்கத்தான் முடியும். பொருள் வாங்காமல் எத்தனை முறை சுற்றிப்பார்ப்பது? 14 மாடி எல்.ஐ.சி பில்டிங் சென்னையின் பெருமை தான். இருக்கட்டும். சரி அதனால் நமக்கு என்ன? நம் வாழ்க்கையில் அதன் விளைவு என்ன? ஒன்றுமில்லையே. கூட குடும்பமும் இல்லாமல், நண்பர்களும், கேர்ள் ஃபிரண்ட்டும் இல்லாத வெறுமை வாழ்க்கை, அம்மா இறந்ததால் லீவு நாட்களில் ஊருக்கும் போக முடியாமல் என்னடா இப்படி ஒரு வாழ்க்கை என வெறுத்து இருந்திருக்கிறேன்.
ஹிக்கின் பாதம்ஸ் போய்விட்டு எல்.ஐ.சிக்கு அருகில் உள்ள இரவு நேர சாலையோரக் கடையில் தின்னப்போனால் அங்கே உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள், சாப்பாட்டு வண்டிக்கு அருகிலேயே பொங்கி வழியும் சாக்கடை, கணிகையரிடம் ரேட் பேசி அங்கேயே இருட்டில் ஒதுங்கும் சிறுமக்கள் எனக் கிடைக்கும் புது வித அனுபவம். வேறு வேலை கிடைத்ததும் விட்டால் போதும் என்று சென்னையை விட்டு ஓடி வந்தேன். இது சென்னையை திட்டும் பதிவு அல்ல. சென்னையை லவ்வும் நண்பர்கள் பொங்க வேண்டாம். சென்னைக்கு பல முகங்கள் உண்டு (நம்மைப் போன்றவர்களுக்கு தெரியாத பெரும் பணக்கார உலகங்களும், போதை மாஃபியா உலகங்களும் சேர்த்தே உண்டு) என்பதையும் அதில் இதுவும் ஒன்று என்பதையும் பதிவு செய்ய விரும்பினேன்.
மேலும் இது வெறும் சென்னையைப் பற்றிய பதிவும் அல்ல. பெங்களூரில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து போதும் இதேபோன்று எண்ணங்கள் தான் என்னுள். மனைவியார் மும்பைக்காரர். அங்கேயே வேலை பார்த்து வாழலாம் என்ற அவரது அழைப்பையும் என்னால் ஏற்க முடியவில்லை. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி எனப்பல பெருநகரங்களுக்கும் இது போலப் பல முகங்கள் உண்டு. வாய்ப்புக்கிடைத்தவன் வாழ்கிறான். கிடைக்காமல் தடம் மாறுகிறவன் குற்றவாளியாகிறான். இரண்டிலும் சேராதவன் தன் வழியைத் தேடுகிறான். நாளைக்கு ஒரு நல்ல வாய்ப்புக்கிடைத்து மீண்டும் சென்னைக்குப் போக வாய்ப்புக்கிடைத்தால்? யாருக்குத் தெரியும்? மீண்டும் போகலாம்.
"படிச்சவனுக்கு ஐடி கம்பெனி, படிக்காதவனுக்கு நைட்டி கம்பெனி" என ஆரம்பித்து சந்தானம் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" படத்தில் சென்னையின் பெருமைகளைச் சொல்வது போல, "வந்தாரை வாழவைக்கும் சென்னை" என்ற கூற்றுக்கு இணையாக சென்னை எப்படியும் உங்களை வாழ வைத்து விடும். சந்தேகமே இல்லை. ஏதோ ஒரு வேலையோ, சிறு வியாபாரமோ, பெரு வியாபாரமோ சென்னை எப்படியும் நீங்கள் வாழ ஒரு வழி தரும். சோற்றுக்குப்பிரச்சினை இல்லை. ஆனால் சோறு மட்டுமே வாழ்க்கை இல்லை. திரைக் கனவுகள், தொழிலதிபர் கனவுகளுடன் சென்னைக்குச் சென்று ஏழெட்டு ஆண்டுகள் போராடி சொந்த ஊருக்குத் திரும்பிப்போன பலரை எனக்குத் தெரியும்.
முகமூடிகளைக் கழற்றி உண்மை விளம்பும் மனசிடம் கேட்டால் அதன் பதில் பொட்டில் அறையும். பொங்கி வழிந்து பெருகி வெடிக்க காத்திருக்கும் ஒரு பெரும் மாநகரத்தில் பொருந்தி வாழ இயலாத ஒரு சாதாரண சிம்பிள் மனிதனின் வாழ்க்கைப் பதிவு இது.