வியாழன், 30 செப்டம்பர், 2010

பாபர் மசூதி வழக்கும் எந்திரன் சினிமாவும்

ஒரு வழியாக புலி வருது, புலி வருது கதையாக அயோத்தி, பாபர் மசூதி - ராம் ஜன்ம பூமி வழக்கில் இன்று (செப்டம்பர் 30-ம் தேதி) தீர்ப்பு வந்தாயிற்று. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ஏக்கர் நிலத்தை மூன்று துண்டாக கேக் மாதிரி வெட்டி ஆளுக்கொன்றாக எடுத்துக்கொள்ளச் சொல்லி விட்டார்கள். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை இந்த உத்தரவைப்பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் சுதிர் அகர்வால், தரம் வீர் சர்மா, எஸ்.யு.கான் ஆகியோர்.


சர்ச்சைக்குரிய இரண்டரை ஏக்கர் நிலத்தை மூன்றாக (எப்படி பிரிப்பாங்க?) பிரிக்க வேண்டும், ஆனால் தற்போதைக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தற்போதைய நிலை தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்படும். மற்றொரு பகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கு தர வேண்டும். எஞ்சிய இன்னொரு பகுதி இந்து மகா சபைக்கு தரப்பட வேண்டும். நிலத்திற்கு முழு உரிமை கோரிய சன்னி மத்திய வக்பு வாரியம் மற்றும் நிர்மோகி அகாரா அமைப்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவற்றிற்கு அல்வா தரப்பட்டது.

கூடவே சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தது உண்மைதான் என்றும் நீதிபதிகள் ஒரு பிட்டைப்போட்டிருக்கிறார்களாம். அப்போ ராமாயணம் நடந்தது உண்மைதானா? அணிலுக்குக்கோடு போட்டது அவர்தானா? பாம்பன் (?????) பாலத்தைக்கட்டியது அனுமார்தானா? என்றெல்லாம் என் மனதில் பிறந்த உப கேள்விகளுக்கு என்னிடம் பதில்கள் இல்லை. இதில் இன்னோரு முக்கியமான விஷயம் என்னவென்றால் வழக்கம் போல "மூன்று மாதத்திற்குள் மேல் முறையீடு செய்து கொள்ளலாமாம்". தீர்ப்பின் முழு விவரம் ஐயாயிரம் பக்கங்களுக்கு மேலாம். டைப் செய்யவே ஒரு மாதம் ஆகியிருக்குமே..

சுமார் அறுபது (நோட் தி பாயிண்ட்: ரஜினியின் வயது அறுபது - எப்படி லிங்க் கொடுத்தேன் பாத்தீங்களா?) வருடங்களாக இழுத்துக்கோ, பறிச்சுக்கோ என்றிருந்த இந்த வழக்கின் இந்தத்தீர்ப்புக்காக நாடே காத்திருந்தது. ஒரு வாரமாக இதோ, இதோ என்று ஊரெல்லாம் ஒரே பரபரப்பு, பந்தோபஸ்து, டாஸ்மாக்கெல்லாம் மூடிட்டாங்களாம், மசூதிங்களுக்கெல்லாம் போலீஸ் போட்டிருக்காங்களாம், இன்போஸிஸ் கம்பெனி லீவாம், இஸ்கூல் எல்லாம் அரை நாள் லீவாம், இன்டர்நெட்டை ஸ்லோ பண்ணிட்டாங்களாம், இந்தியாவுல எல்லார் போனும் ரெக்கார்ட் ஆவுதாம், பல்க் மெஸேஜ் அனுப்பக்கூடாதாம், மசூதி பத்தி மெஸேஜ் அனுப்பினா தானாவே டெலிட் ஆகிடுமாம், எந்திரன் ரிலீஸ் தள்ளிப்போயிடுச்சாம், என்றெல்லாம் பரபரப்புக்குத் திரி கிள்ளிப்போட்டிருந்தார்கள்.

இதில் ஹைலைட் (?) என்னவென்றால் இந்தத்தீர்ப்புக்காக அகில உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அகில உலக சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டூப்பர் டமால் டுமீல் ஹிட் எந்திரன் படமே ஒரு நாள் தள்ளி வைத்து ரிலீஸ் ஆகிறது. செப்டம்பர் 30-ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தத் தீர்ப்பு வெளியாக வேண்டியிருந்ததால் ஏதேனும் பிரச்சினை வந்தால் என்ன செய்வது, பாபா மாதிரி படம் பப்படம் ஆகிவிடக் கூடாதே என்று (பயந்து) ஒரு நாள் தள்ளி வெள்ளிக்கிழமையில் ரிலீஸ் ஆகிறது படம். ஒரு நாள் வசூல் போச்சே.


அவ்வளவு ஏன்? செப்டம்பர் 23-ம் தேதியே வெளியாக வேண்டியதாம். சென்ற வாரமே பாபர் மசூதி தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து தள்ளிப்போனதால் ஒரு வாரம் வீணாய்ப்போச்சு. (எந்திரன் டிக்கெட் புக் பண்ணியாச்சே!!!!!. பெரிய தியேட்டரில் ஐநூறு, ஆயிரத்திற்கெல்லாம் போவதாகச் சொன்னார்கள். எனக்கு சிம்பிளாக நூறு ரூபாய் பிளாட் ரேட்டில் கிடைத்தது. அது சரி, ஊரில் உள்ள சந்து, பொந்து, இண்டு, இடுக்கு, அது தவிர பிட்டு படம் போடும் தியேட்டர்களில் எல்லாம் எந்திரன் மட்டுமே வெளியானால்?) ஒரு வாரம் லேட். ஆனால் அத்தனை தியேட்டர்களிலும் ப்ளாட் ரேட் நூறு ரூபாய் மினிமமாம். அதற்கு மேலே என்றால் நோ ப்ராப்ளமாம்.

என்ன ஒரு அநியாயம்? இந்தியாவில் ஒரு மாபெரும் வசூல் சாதனை படைக்கப்போகும், புதிய புதிய ரெக்கார்டுகளை உருவாக்கப்போகும், சன் பிக்சர்ஸ் ஷேர் விலையை உயர்த்தப்போகும், 1000 கோடி ரூபாய் வசூல் செய்யப்போகும், ஹிந்தி பட ரெக்கார்டுகளை தாண்டப்போகும், எந்திரன் (மற்றும் ரோபாட்) படத்திற்கு ஒரு வாரம் தள்ளி வைத்து இப்படி ஒரு மாபெரும் தடையா?

சரி விடுங்கள். வழக்குக்குப்போவோம். நாட்டாமையில் கவுண்டமணி அலுமினியத்தட்டை ஓரே உடையாக உடைத்து சொத்தைப்பிரி என்பது போல், மூணு பீஸாப்பிரிச்சி எடுத்துக்கோங்கப்பா என்று அயோத்தி விவகாரத்தில் சொல்லி விட்டிருக்கிறார்கள். ஆனால் பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏதேனும் ஒரு சார்பாகத்தீர்ப்பு வந்து அதனால் பல கலவரங்கள் வருவதற்குப்பதில் இந்தத்தீர்ப்பு பரவாயில்லை. ஓரளவு வீரியம் குறைவாகத்தான் இருக்கிறது.

ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போகிறார்கள், செய்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் கசிய ஆரம்பித்து விட்டன். இந்த இடத்தில் ஒரு சாதாரண ஒரு பொது ஜனமாக “இந்தச்சண்டையில் கடந்த அறுபது வருடங்களாக சம்பந்தமே இல்லாமல் உயிர் துறந்து கொண்டிருக்கும் அப்பாவிகளுக்கு ஒரு நினைவுச்சின்னம் கட்டலாம்” என்பது எங்களின் தாழ்மையான கருத்து. அல்லது “ஒரு பள்ளிக்கூடமோ அல்லது மருத்துவமனையோ” அந்த இடத்தில் கட்ட உத்தரவிட்டிருக்கலாம்.

அல்லது இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார் காந்தித்தாத்தா. அவருக்கு ஒரு மணி மண்டபம் (!) கட்டலாம். யார் கேள்வி கேட்கப்போகிறார்கள்? ஒரு ஆலோசனைதான். அவருக்காக இடம் ஒதுக்கினால் இந்தியா முழுக்க யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. எந்தப்பிரச்சினையும் வரப்போவதில்லை. என்னடா ரொம்ப அட்வைஸா எனாதீர்கள். நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என்பார்கள். ஆனால் பிரதமரே "இந்தத் தீர்ப்பு இறுதித்தீர்ப்பு அல்ல" என்று சொன்ன பிறகு ஒரு சின்ன தைரியம் தான்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

திங்கள், 13 செப்டம்பர், 2010

சேலம் ஸ்பெஷல்

நேற்றைய (13 செப்டம்பர் 2010) உயிரோசை டாட் காமில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.
--------------------------------------------
நீண்ட நாட்களாகவே சேலம் பற்றி எழுத வேண்டும் என்று யோசனை, ஆசை. ஆனால் நம்ம ஊர்தானே, நாளைக்கு எழுதலாம், நாளன்னைக்கு எழுதலாம் என்று விட்டால் ஒரேயடியாகத் தள்ளிப்போகிறது. ஆஹா இப்படியே விட்டுப்போனால் நன்றாயிருக்காது. அது தாய் மண்ணுக்குச் செய்யும் துரோகம் இல்லையா? இதோ பிடியுங்கள் சேலம் ஸ்பெஷல். (இந்த வாரம் டிரான்ஸ்போர்ட் மட்டும்)

சேலத்தில் மிக முக்கியமான கேந்திரம் என்றால் அது சேலம் புதிய பஸ் நிலையம் தான். "பாரத ரத்னா எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையம்" என்ற பெயரை யாரும் வாசிப்பதே இல்லை. அனைத்து வெளியூர் பஸ்களும் வந்து புறப்பட்டுச் செல்லும் இடம் இதுதான். எந்நேரத்திலும் பஸ் உண்டு இங்கே. புதிய பஸ் நிலையம் இப்போது இருக்கும் இடத்தில் அந்தக் காலத்தில் ஒரு அழகான ஏரி இருந்ததாம். (past tense) அச்சுவான் ஏரி என்று அழைக்கப்பட்ட அந்த ஏரியைத் தூர்த்து தான் புதிய பஸ் நிலையம் ஆக்கப்பட்டதாம்... அதற்கு முன் அதெல்லாம் புறநகர்ப்பகுதியாம்.


இருபத்தைந்து ரூபாய் காசு வைத்திருந்தால் வழிப்பறி நடக்குமாம் (இருபது வருடங்களுக்கு முன்பு) ஐம்பது ரூபாய் வைத்திருந்தால் ஆள் காலி. இப்போது என்னடாவென்றால் அது சேலத்தின் மையப்பகுதி ஆகிவிட்டது. அங்கே நிலத்தின் மதிப்பும் கன்னா பின்னாவென்று ஏறிப்போய்விட்டது. இப்போது அங்கே நிலம் வைத்திருந்தால் நீங்கள் ஒரு வி.ஐ.பி. சுத்தி முத்தி விவசாயம் நடந்து கொண்டிருந்த ஏரியாக்கள் எல்லாம் விடாமல் விலைக்கு வாங்கப்பட்டு வரிசையாக அடுக்குமாடி வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

புதிய பஸ் நிலையத்தைத் தாண்டி எல்லா ஊர்களுக்குமான பை-பாஸ் சாலைகள் ஐந்தாகப் பிரியுமிடம் ஒன்று ஐந்து ரோடு என்ற பெயரில் உள்ளது. இதுவும் பயங்கர பிஸியான ஏரியா. இதனுடன் சேர்ந்து புதிய பஸ் நிலையம் மிக அதிக டிராஃபிக்கில் சிக்கித்திணறும். போதாக் குறைக்கு கல்யாண் ஜூவல்லர்ஸ், ஜாய் ஆலுக்காஸ், கஸானா, லோக்கல் ஏ.வி.ஆர் ஸ்வர்ண மகால், ஏ.என்.எஸ் என்ற ஐந்து பெரிய நகைக்கடைகளும், நான்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களும், இரண்டு பெரிய ஹோட்டல்களும், இரண்டு மிகப்பெரிய ஜவுளிக் கடைகளும் அந்த ஏரியாவில் வந்து சேர்ந்ததால் கார் பார்க்கிங் மிகப்பெரிய பிரச்சினை. அவர்களால் நம் போன்ற நார்மல் டூ வீலர் பார்ட்டிகளுக்கும் பிரச்சினை.

லோக்கல் பஸ்களுக்கென்று பழைய பஸ் நிலையம் உள்ளது. ஆனால் சென்னையிலும், கோவையிலும் இருப்பது போல ஆம்னி பஸ்களுக்கென்று தனி பஸ் நிலையம் கிடையாது. திருப்பாச்சி படம் வரை ஃபேமஸான கே.பி.என் டிராவல்ஸின் தலைமையிடம் எங்கள் ஊர்தான். புதிய பஸ் நிலையத்திற்கு நேரெதிரில் அதன் அலுவலகம். ஒன்றன் பின் ஒன்றாக ஷெட்யூல் போட்டு வண்டிகள் வரும், ஒன்று கிளம்பியவுடன் மற்றொன்று. ஏனென்றால் பார்க்கிங் பிரச்சினை...

பழைய பஸ் நிலையம் இருக்கும் இடத்தில் விக்டோரியா தியேட்டர் என்று ஒன்று இருந்ததாம். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் அது இடிக்கப்பட்டு விக்டோரியா மைதானம் என்ற பெயரில் இருந்தது. இப்போது அங்கே அரசு வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு கடைகள் இயங்கி வருகின்றன. பயங்கர பிஸி ஏரியா ஆகி விட்டது. நான் அங்கே போவது ஆங்கிலப்பட டிவிடிக்கள் வாங்க மட்டும் தான். அண்ணன் ஜாக்கியாரின் பதிவில் ஏற்றப்படும் படங்களையெல்லாம் அங்கே தான் வாங்குவது வழக்கம். டிவிடி ஒன்று முப்பது ரூபாய் (நான் ஒரே டிவிடியில் நான்கைந்து படங்கள் இருக்கும் காம்போ பேக் தான் வாங்குவேன்)

தற்போதைய மக்கள் தொகைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பழைய கட்டிடத்திலேயே பழைய பஸ் நிலையம் இயங்கி வருவதால் அங்கே எப்போதும் கூட்டம் பிதுங்கித் தள்ளும். சுற்றியிருக்கும் பதினெட்டு (சும்மா ஒரு ஃபுளோவில் சொன்னேன், உண்மையில் நிறைய) பட்டிகளில் இருந்து வரும் பட்டிக் காட்டான், ஸாரி, பட்டிக் காட்டு ஜென்டில் மேன் மற்றும் ஜென்டில் உமன்களின் கூட்டம் நெறித்துத் தள்ளும். அதுவும் எதிரில் உள்ள (நேதாஜி சுபாஷ் சந்திர) போஸ் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி போட்டு (கூடவே மழையும் வந்து) விட்டால் சூப்பராக இருக்கும்.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் சென்னையில் கலைஞர் சுமார் 800 புதிய லோக்கல் பேருந்துகளையும், சுமார் 20 ஏஸி பஸ்களையும், 21 டிரெயிலர்களையும் அறிமுகப்படுத்தினார் அல்லவா? (இரண்டு பஸ்களை வரிசையாக ரயில் போல இணைத்தால் எப்படி இருக்கும்? அதுதான் டிரெயிலர்) அந்த டிரெயிலர் வண்டிகள் இங்கே சேலத்தில் இப்போது தான் நுழைந்திருக்கின்றன.

அவையும் மண்புழு, மரவட்டை கணக்காக பழைய பஸ் நிலைத்தை சுற்றிச் சுற்றி ரிவர்ஸ் எடுத்து பொஸிஷனுக்கு வரும் அழகைக்காணக் கண்கோடி வேண்டும். மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை வர்ணணை செய்வதற்கு ஒப்பான திறமை வேண்டும் அவற்றை வர்ணிக்க. இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் சென்னை மாதிரி இல்லாமல் இங்கே லோக்கல் பஸ்களில் தனியாரும் உண்டு. இதுபோக மிகக் குறைந்த ஏரியாக்களை மட்டும் சுற்றி வரும் "களவாணி" ஸ்டைல் மினி பஸ்களும் உண்டு.

அம்பானி கணக்காக அதன் ஓனர்களும், அம்பானிகளின் அடிப்பொடிகளும் சேலத்தை சுற்றிச்சுற்றி வருவார்கள். அவர்களும், அரசு பஸ் ஊழியர்களும் கொஞ்சிக்கொள்ளும் அழகை நாள் முழுக்க ரசிக்கலாம். (டைமிங் மிஸ்ஸானால் ஒருத்தரையொருத்தர் கிழித்து தொங்கப்போடுவார்கள்). ஆனால் உண்மையாகவே அரசு டிரைவர்களுக்குப் பெருந்தன்மை கொஞ்சம் அதிகமே. எந்த ஏரியாவாக இருந்தாலும் தனியார் பஸ்ஸூக்கு வழி விட்டே போவார்கள். தன் பஸ்ஸில் கூட்டமே இல்லையென்றாலும் சரி.

பழைய பஸ் நிலையத்திற்கு கொஞ்சம் தள்ளி…………. இரண்டு ஆட்சிகள் முன்பு, வட்ட வடிவத்தில் ஒரு பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அது எதற்காக அமைக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி வந்தவுடன் காட்சிகள் மாறிப்போய் விட்டன. இப்போது அந்த பஸ் நிலையம் மட்டும் பாழடைந்து எதிரே உள்ள ஒயின் ஷாப்புக்கு நிரந்தர கஸ்டமர்கள் பெற்றுத்தரும் இடமாக மாறிப்போயிருக்கிறது. கீழே கால் வைக்க முடியாத அளவு நிரந்தர சேறும், சகதியும், கோரைப்புற்களும் மண்டிப்போய்…………. வா என்கிறதா, வராதே என்கிறதா என்று பிரித்தறிய முடியாத இருட்டு நம்மை வெறித்துப்பார்க்கும். பூத் பங்களா மாதிரி இருக்கும்.

அப்புறம்..... சேலம் முழுக்க ஷேர் ஆட்டோக்கள் உண்டு. ஒன்றல்ல, இரண்டல்ல, நூறல்ல, ஆயிரமல்ல, பத்தாயிரம் ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. அடுத்த வருடம் எலக்ஷன் வரை இன்னும் ஒரு மூவாயிரத்தைநூறு ஆட்டோக்களை இறக்கப் போகிறார்களாம். எங்கேயாவது மாடியில் இருந்து கீழே பார்த்தீர்களானால் ஆட்டோக்கள் எல்லாம் சேர்ந்து தர்ணா, பேரணி நடத்துவது போலவே இருக்கும். ஊரே மஞ்ச மஞ்சேர் என்று. இத்தனை ஆட்டோக்கள் இருந்தால் பயணிகளிடம் எப்படி அதிக கட்டணம் வாங்க முடியும்? பயணிகளான நம்மிடமும் ஒரு தெனாவட்டு வருமல்லவா?

அதனால் அந்த வண்டிகள் திருவாளர் பேஸஞ்சர் சொல்லுகிற இடத்திலெல்லாம் நின்று இறக்கி விடும், கைகாட்டும் இடத்திலெல்லாம் பிரேக்கடித்து ஏற்றிக்கொள்ளும். நோ ஸ்டாப்பிங், நோ ரூல்ஸ். உங்களுக்கு ஒரு டிப்ஸ். வெளியூரில் இருந்து சேலத்திற்கு வந்தால் தனி ஆட்டோவுக்கு நூறு, நூற்றைம்பது என்று பைஸா அழுவாதீர்கள். அந்த ஏரியாவில் ஷேர் ஆட்டோ சர்வீஸ் உண்டா என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள். (பெரிய சைஸ் பியாஜ்ஜியோ ஆபே வண்டி) மூன்று ரூபாய் முதல் அதிகபட்சம் ஆறு ரூபாய் தான் கட்டணம்.

அந்த ஆட்டோ ஓட்டும் பசங்களைப்பார்க்க வேண்டுமே, அடா, அடா, அடா. ஒரு காக்கி பேன்ட்டும், பட்டன் திறந்து பறக்கும் காக்கி சட்டையும், முக்கா சீட்டை காலியாக விட்டு விட்டு கால் சீட்டில் உட்கார்ந்து, பான்பராக்கையும், குட்காவையும் போட்டு எச்சில் துப்பியபடி, அவர்கள் ஒருத்தருக்கொருத்தார் ரேஸ் விட்டு வண்டி ஓட்டும் அழகே அழகுதான். (நாற்பது வயதிற்கு மேற்பட்ட டிரைவர்களிடம் கேட்டால் வண்டி வண்டியாக அள்ளி விடுவார்கள்) எல்லாருமே ரஜினி தான், விஜய் தான், தனுஷ் தான். உள்ளே ஒரு ஹீரோ வந்து புகுந்து கொள்வான், அந்த சந்தோஷத்தில் லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்பதைப்பற்றியெல்லாம் யார் நினைத்துப்பார்க்கப்போகிறார்கள்?

கட்டணம் விஷயத்தில் (லோக்கல்) பஸ் மட்டும் என்னவாம்? பயங்கர சீப். சேலத்துக்குள் எங்கு ஏறி எங்கு இறங்கினாலும் அதிகபட்சமே மூன்று ரூபாய்தான் டிக்கெட். நான் சென்னையில் மூன்று வருடங்கள் கொட்டோ கொட்டென்று கொட்டிய போது (வேறென்ன? குப்பைதான்) மினிமம் டிக்கெட்டே அங்கு நான்கு ரூபாய். அதனால் எனக்கு எங்க ஊரைப்பற்றி பயங்கர பெருமைதான் எனக்கு.


அதே போல் எங்கே இருந்து சேலத்திற்கு வந்தாலும், சேலம் ரயில்வே ஜங்க்ஷன் தான் மையப்புள்ளி. தற்போது பாலக்காட்டில் இருந்து தனியாகப்பிரித்து சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் அதன் மெயின் ஆபீஸ் ஜங்க்ஷனில் அல்ல, உள்ளூர் டவுன் ரயில்வே ஸ்டேஷனில். கொஞ்சம் கொஞ்சமாய் ஹெடெக்காக மாறிக்கொண்டிருக்கிறது. டச் ஸ்கிரீன், வரிசையாய் நிற்கும் கம்ப்யூட்டர் புக்கிங் கவுண்டர்கள், அழகழகான வெளிக்கட்டிட அமைப்பு என்று இப்போது சில மாதங்களாய்த்தான் ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறது டவுன் ரயில்வே ஸ்டேஷன். ஆனாலும் முக்கிய டிரெயின்கள் அனைத்தும் ரயில்வே ஜங்க்ஷனுக்கே வருவதால் அங்கே தான் கூட்டம் அம்மும். சென்னையில் சென்ட்ரல் மாதிரி ஜங்க்ஷன், எக்மோர் மாதிரி இங்கே டவுன் ரயில்வே ஸ்டேஷன். புரிகிறதா?

அது போக சேலத்தில் ஏர்போர்ட்டும் ஒன்று உண்டு. அட்டெண்டென்ஸ் போட்டு ஒன்றிரண்டு விமானங்கள் போய் வருகின்றன. நிறைய விமானங்கள் கிடையாது. ஒரே பிரச்சினை என்னவென்றால் சென்னை போல் இங்கே பெரிய நிறுவனங்கள் ஏதும் கிடையாது. கோவை போல் சுற்றிச் சுற்றி முக்கியமான ஊர்களும் கிடையாது. சேலத்தில் உள்ள ஒரே பெரிய நிறுவனம் ஸ்டீல் பிளாண்ட் என்று பெருமையுடன் அழைக்கப்படும் SAIL நிறுவனம் தான். அதனால் பெரிய தலைகள் யாரும் வர, போக இருப்பதில்லை. ஸோ, நோ ரெகுலர் சர்வீஸ். திருச்சிக்கு BHEL மாதிரி எங்களுக்கும் ஒரு பெரிய்ய்ய்யய கம்பெனி இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். BHEL ஐ வைத்து திருச்சி வளர்ந்தா மாதிரி நாங்களும் பேர் சொல்லும் பிள்ளைகள் ஆயிருப்போம். (என்ன செய்ய? நாங்கள் சொல்லிக்கொள்ள மேட்டூர் அணைதான் உண்டு.)

தமிழ் கஜினி படத்தில் சூர்யா ஏர்போர்ட்டில் தனி விமானத்தில் இறங்கி நடந்து வருவார் அல்லவா? அது சேலம் ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட காட்சி தான். அதன் கஜினி தயாரிப்பாளர் சேலம் ஏ.சந்திரசேகரன் என்பதால் பர்மிஷன் வாங்கிக்கொடுத்தார் என்று கேள்வி. படத்தில் அந்தக் காட்சியைப்பாருங்களேன். சைடில் எல்லாம் ஒரே புதர் மயமாக இருக்கும். சென்னை அல்லது கோவை ஏர்போர்ட் சாயலே இருக்காது. அதை வைத்தே நீங்கள் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். ஆனால் ஏர்போர்ட் சர்வீஸ் நிறுத்தப்படவில்லை. நடுவில் கொஞ்சநாள் நிறுத்தப்பட்டு மீண்டும் துவக்கப்பட்டுவிட்டதாம்.

சேலத்தின் ஆரம்ப கால ஒரே டிரான்ஸ்போர்ட்டாக இருந்தவை குதிரை வண்டிகள் தான். ஏமி ஜாக்ஸனை வைத்து ஆர்யா பாடிக்கொண்டே வரும் "வாம்மா துரையம்மா" வில் சில வண்டிகள் வருமே, அந்த சீனை நினைவு படுத்திக்கொள்ளுங்களேன். பத்து வருடங்கள் முன்பு வரை படு பிரபலமாக இருந்த அவை ஷேர் ஆட்டோக்கள், பிராணி வதை தடுப்புச் சங்கங்கள் உபயத்தில் காணாமல் போயின. அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் பாடல்கள் பாடியபடியேதான் ஓட்டுவார்கள் வண்டிக்காரர்கள். நாங்கள் சைக்கிளில் குரங்குப்பெடல் போட்டபடி ஸ்கூலுக்குப்போன காலத்தில் (மேனுவல்) சிக்னல்களில் கண்டிப்பாக ஒரு குதிரை வண்டியவாது நிற்கும். இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக டவுன் போலீஸ் ஸ்டேஷன், செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட் பஜார் போன்ற ஏரியாக்களில் மட்டும் தட்டுப்படுகின்றன. வண்டியோட்டிகள் ரிட்டையர் ஆகி விட்டார்கள் போலிருக்கிறது. செவ்வாய்ப்பேட்டையில் ஒரு இடத்திலும், பட்டைக் கோவில் ஏரியாவில் பெருமாள் கோவில் பின்புறம் குதிரைகள் தண்ணீர் குடிக்க கட்டி வைத்த (தெரு விளைக்கைச் சுற்றிய) தண்ணீர் தொட்டி அமைப்பு இன்றும் உள்ளது.

எனக்குத் தெரிந்து டாக்ஸி இங்கே கிடையாது. எங்கேயா ஒன்றிரண்டு பார்த்தது போல் ஞாபகம். இப்போது மெள்ள மெள்ள கால் டாக்ஸிக்கள் முளைக்கத் துவங்கியிருக்கின்றன. சைக்கிள் ரிக்ஷாக்களும் முழுக்க வழக்கொழிந்து போய் விட்டன. வேறென்ன டிரான்ஸ்போர்ட் மிச்சமிருக்கிறதுதுதுது???? யோசியுங்கள். வருகிறேன்...
------------------------------------------------------
இன்ட்லியில் அப்படியே ஒரு ஓட்டும் போடுங்களேன்... கைக்காசு ஒண்ணும் செலவில்லை..
------------------------------------------------------

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

விதையும் அரசு ஆசிரியர்களும்

(இக்கட்டுரை கடந்த செப்டம்பர் 6-ம் தேதி, உயிரோசை டாட் காமில் வெளியானது)

ஆசிரியர் தினம் ஸ்பெஷலாக நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பானது "விதை – சூர்யாவுடன் ஒரு வெற்றிப்பயணம்" நிகழ்ச்சி.

தன் தந்தை சிவகுமார் நடத்திவரும் கல்வி அறக்கட்டளையின் நீட்சியாக அகரம் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பைத் துவக்கி நடத்தி வருகிறார் நடிகர் சூர்யா. தேவை உள்ள ஏழை மாணவர்களை கண்டு பிடித்து அவர்களது உயர்கல்விக்கு உதவுவது அதன் நோக்கம் என்கிறார்கள். இதே விஜய் டிவியில் கடந்த பொங்கல் தினத்தன்று தனது அகரம் பவுண்டேஷன் சார்பில் மாணவர்களுக்கு ரூ.1 கோடி (தலா பத்து இலட்சம் வீதம் பத்து பேர் பங்களிப்பு) நிதி உதவி செய்யவிருப்பதாக சூர்யா தெரிவித்திருந்தார்.

இதற்கான சரியான மாணவர்களை (பல்வேறு டெஸ்ட்கள் வைத்து அதன் மூலம்) தேர்வு செய்து அவர்களை அடையாளம் காட்டும் நிகழ்ச்சியாக அகரம் ஃபவுண்டேஷன் மற்றும் விஜய் டிவியால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அது. இதற்கான தேர்வுக்குழுவில் இருக்கும் வாலன்டியர்ஸ் அனைவரும் பெரிய பெரிய எம்.என்.சி கம்பெனிக்களில் நல்ல பணியில் இருப்பவர்கள் என்று கூறினார்கள்.

சென்ற முறை "சூர்யாவுடன் ஒரு கோடி ஒரு தொடக்கம்" வெளியான நான்கு தினங்களுக்குப் பிறகு சூர்யா வீட்டில் வருமான வரித்துறையின் "நியாயமான அதிகாரிகளால்" ரெய்டு நடத்தப்பட்டது பலருக்கும் தெரிந்திருக்கும். இப்போது மறுபடி "விதை சூர்யாவுடன் ஒரு வெற்றிப்பயணம்" பாவம். பி கேர்ஃபுல் சூர்யா.

முதல்வன் திரைப்படத்தில் டிவி ரிப்போர்ட்டரும் முதல்வரும் பேசும் ஒரு காட்சி. உங்களுக்கு நினைவிருக்கும். "ஐயா, அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி நீங்க எந்த மாதிரி குடும்பம்?", "சாதாரண ஏழ விவசாயக் குடும்பம் தம்பி", "உங்க சம்பளம் எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கலாமா?", "பிடித்தம் போக பதினெட்டாயிரம் வரும்", "ஆக கூட்டிக் கழிச்சுப்பாத்தா வருடத்துக்கு இரண்டு இலட்சம் ரூபாய்", "ஆமாம் தம்பி", "ஆக, மொத்தமா உங்ககிட்ட சுமாரா ஒரு இருபது இலட்சம் ரூபாய் இருக்கலாம், ஆனா இன்னைக்கு உங்ககிட்ட இருக்கிற சொத்தோட மதிப்பு பல நூறு கோடி ரூபாய், இந்தப் பணம் எல்லாம் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்கலாமா?"

முதல்வர் கதாபாத்திரம் பதில் இல்லாமல் முழிக்கும். இப்போது இதே கேள்விதான் எங்களுக்கும். இவர்களுக்கு எல்லாம் வருமானம் எப்படி வருகிறது, வரும் வருமானத்திற்கு சரியாக கணக்குக் காட்டுகிறார்களா? என்றெல்லாம் நாம் இந்த வருமான வரி்த்துறையிடம் கேட்க முடியுமா? அவர்களுக்குப் பயந்தே “மாணவர்கள் அனைவரும் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்” என்று (ரெய்டுக்குப் பயந்தே) திரும்பத் திரும்ப டி.வியிலேயே சொல்லிக்கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டார்கள்.

கல்வி உதவிக்காக தேர்வு செய்யப்பட்ட உங்கள் பிள்ளை என்னவாக ஆக வேண்டும் என்று கேட்ட போது "டாக்டர் ஆகணும், (கம்ப்யூட்டர்) என்ஜினியர் ஆகணும்" என்றே சொல்லிக் கொண்டிருந்த வெகுளிப்பெற்றோர்களை, அவை மட்டுமே படிப்புகள் அல்ல, அவற்றைத் தாண்டியும் பல்வேறு படிப்புகள் உள்ளன என்று "ஞாநி"யை வைத்து கவுன்சிலிங் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எல்லாம் கிராமப்புற பெற்றோர்கள். எத்தனை பேர் கன்வின்ஸ் ஆனார்களோ தெரியவில்லை.

இதைவிட முக்கியமான நம்மையெல்லாம் கொதிக்க வைக்கும் ஒரு செய்தி. தங்கள் பள்ளியில் உயர்கல்வி உதவி பெறத் தகுதியான ஏழை மாணவர்கள் இருந்தால் அடையாளம் காட்டுங்கள் என்று கல்வி அதிகாரியின் ஒப்புதலின் பேரில் அகரம் ஃபவுண்டேஷனால் 827 பள்ளிகளுக்கு பரிந்துரைக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. (இதில் எல்லா கடிதங்களும் நமது சூப்பர் போஸ்டல் டிபார்ட்மெண்டினால் சரியாக டெலிவரி செய்யப்பட்டு விட்டன என்று வைத்துக்கொள்வோம்)

அதில் எத்தனை பள்ளிகள் தமது மாணவர்களை பரிந்துரை செய்து பதில் அனுப்பின என்று மாவட்ட வாரியாக லிஸ்ட் வாசித்தார் பேராசிரியர் கல்யாணி. 827 பள்ளிகளில் 143 பள்ளிகள் மட்டுமே பரிந்துரையுடன் பதில் அனுப்பியிருக்கிறார்கள். வெறும் 17 சதவீதம். இதன் மூலம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சமூக அக்கறை அதிகமாக இருக்கிறது என்று தெரிய வருகிறது என்று சாட்டையால் சுழற்றி அடித்தார் கல்யாணி. பேராசிரியர் கல்யாணி பேசும் போது செருப்பால் அடித்தது போல் இருந்தது.

பெரும்பாலான ஆசிரியர்கள் சமூகத்தின் மேல் ஒரு துளியும் அக்கறை இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்றார் எழுத்தாளர் பவா செல்லத்துரை. ஒரு சிற்றூர் பள்ளியின் தலைமை ஆசிரியர், புதுக் கட்டிடம் கட்டுவதற்கு வந்துள்ள சிமெண்டு மூட்டைகள், கம்பிகளை மாணவர்களின் அறையில் போட்டுவைத்து மழை வந்தபோது ஒதுங்கக் கூட முடியாத சிதிலமடைந்து வகுப்பறைகளில் மாணவர்களை வைத்திருக்கிறார் என்ற தகவலை பவா சொன்ன போது மிகவும் அதிர்ச்சியளித்தது.

சம்பளத்துக்கு சண்டை போடவே சரியாக இருக்கிறது இவர்களுக்கு. என் நண்பன் ஒருவன். ஆங்கில இலக்கியம் முடித்ததால் பி.எட் முடித்தால் சீனியாரிட்டியில் உடனடியாக அரசுப்பள்ளி ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று படித்து முடித்து தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பட்டிகளில் ஏதோ ஒரு பட்டியில் உள்ள சிறு பள்ளியில் முடங்கிப்போனான் அவன். இருமாதங்களுக்கு முன் அவனைப்பார்த்த போது கவர்மெண்ட் ஸ்டாஃப் கார்த்தி என்று பெருமையாகச் சொன்னான் அவன்.

சமீபத்தில் பேப்பர் வேல்யூவேஷன் பணியின் போது மாணவனின் பேப்பரை கிழித்து கழிவறையில் போட்ட ஒரு ஆசிரியையின் செய்தியைப்படித்திருப்பீர்கள். அவனிடம் அதைப்பற்றிய பேச்சு வந்த போது, கொடுத்த காசு போதவில்லை, வேலையும் எங்களுக்கு அதிகம், அதனால் அந்த ஆசிரியை செய்தது சரி தான் என்கிறது இந்த மூதேவி. அய்யா, அந்த விவாதத்திற்குள் நான் போகவே இல்லை, சிம்பிளாகக் கேட்கிறேன். கிழித்துப்போடப்பட்ட அந்தப்பேப்பர் என் பையனுடைய பேப்பராக இருந்தால் எனக்கு எவ்வளவு கோபம் வரும். அல்லது அது அந்த ஆசிரியையின் பத்தாம் வகுப்பு மகனின் பேப்பராக இருந்தால்?

என்னை மாதிரி, உங்களை மாதிரி சாதாரண வேலைக்குப்போய் சாதாரண சம்பளம் வாங்கி, ரேஷன் போய், சினிமா பார்த்து, டிவி பார்த்து, சாதாரணமாக சைட் அடித்து என்று மிகச் சாதாரண இளைஞனாக இருந்த ஒருவனை "அரசு ஊழியன்" ஆக்கியது எது? மற்ற துறை அரசு ஊழியர்களை விடுங்கள். ஆசிரியர்கள் எனும் அரசு ஊழியர்கள்? இங்கே ஒரு ஊரில் அரசுக்கல்லூரியின் முதல்வருக்கு மாத வருமானம் எவ்வளவு தெரியுமா? எண்பத்து இரண்டாயிரம் ரூபாயாம், கேட்டால் சீனியாரிட்டி. இதுதவிர அவர் சொல்லும் எந்த வேலையையும் பார்க்க நாலைந்து அல்லக்கைகள் கூடவே சுற்றிக்கொண்டிருக்கும்.

இது பரவாயில்லை போல் இருக்கிறது, ஒரு யுனிவர்சிடியில் லெக்சரருக்கு ஆரம்பச்சம்பளமே முப்பதாயிரத்தைத் தாண்டுகிறது என்று கேள்வி. அதிலும் மூன்று நான்கு வருடம் அனுபவம் உள்ள ஒரு (இருபத்தேழு வயது) லெக்சரருக்கு நாற்பதாயிரம் சம்பளமாம் (இது முழுக்க உண்மையாக இருந்தால்? யம்மோவ்?) இதில் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் வகுப்பு எடுக்க மாட்டார்களாம். மூளை டயர்டாகி விடுமாம், ஜூனியர்கள் செய்ய வேண்டுமாம். அப்புறம் ஏன் "மக்களுக்காக சேவை செய்யும்" எம்.எல்.ஏக்கள் தங்கள் சம்பளத்தை அறுபதாயிரமாக உயர்த்த வேண்டும் என்று கேட்க மாட்டார்கள்?

ஒரு ஊரில் சொறி பிடித்த நாய் ஒன்று இருந்ததாம், அது வைக்கோல் போரில் போய் படுத்துக்கொண்டதாம். முதலில் இதமாக இருந்தாலும் நேரமாக நேரமாக எரிச்சல் எடுத்ததாம், அதனால் புரண்டு புரண்டு படுத்த அந்த சொறிநாய் வைக்கோல் தின்ன வந்த மாட்டை தின்னவும் விடவில்லையாம். தானும் படுக்காது தள்ளியும் படுக்காது என்ற இந்தக் கதைதான் நினைவுக்கு வந்தது பேராசிரியர் கல்யாணி மற்றும் பவா செல்லத்துரையின் ஆதங்கங்களைப்பார்த்த போது.

ஆனால் அதற்காக ஒரேயடியாக ஆசிரியர்களை குற்றம் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இதே நிகழ்ச்சியில் சில நல்ல உதாரணங்களும் கிடைத்தன. தனது முன்னாள் மாணவனுக்காக அலைந்து திரிந்து அவனை கண்டுபிடித்து அப்ளிகேஷன் ஃபில் அப் செய்து அனுப்பியிருக்கிறார் ஒரு ஆசிரியை. தனது டீச்சர்தான் தனக்காக அப்ளிகேஷன் எழுதி அனுப்பினார் என்று தேர்வான மாணவர்களில் பல பேர் குறிப்பிட்டார்கள். அந்த நல்ல மனம் கொண்ட, ஆக்டிவ்வான டீச்சர்ஸூக்கு ஒரு ராயல் சல்யூட் வைத்தே ஆகவேண்டும்.

இன்றைக்கும் தமிழகத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள் தான். அங்கே பத்தாம் வகுப்பு படித்து முடித்தவுடனே பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள் என்ற அவலத்தை தமது கருத்தாக பதிவு செய்தார்கள் அம்மாவட்டங்களைச் சேர்ந்த இருதாய்மார்கள். அதனால் தமக்குக் கிடைக்காத படிக்கும் வாய்ப்பு தன் குழந்தைகளுக்காவது கிடைக்க வேண்டும் என்று முயற்சித்து இந்த வாய்ப்பைப் பெற்றதாகச் சொன்னார்கள்.

சென்ற வாரம் தர்மபுரியில் நான் சந்தித்த பள்ளியின் தாளாளர் ஒருவரும் இதே கருத்தைச்சொன்னார். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தைகளை படிக்க வைக்கவே மாட்டார்கள். மீறிப்போனால் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் பெண் குழந்தைகள் படித்து முடித்தவுடன் திருமணம் தான். இப்போது பனிரெண்டாம் வகுப்பு வந்து விட்டதால் அதை முடித்தவுடன் திருமணம். வெகு சமீபமாக இப்போது தான் பெண்களை டி.டி.எட் படிக்க வைக்கிறார்கள். படித்தவுடன் ஆசிரியை வேலை. இதற்குச் சரியான உதாரணமாய் அதே பள்ளியில் நான் சந்தித்த ஒரு ஆசிரியையும் இருக்கிறார். இருபத்தைந்து வயதில் ஏழு வயதுக் குழந்தைக்குத் தாய்.

இதே தர்மபுரியில் மற்றொரு தனியார் பள்ளியில் வேறு ஒரு பிரச்சினை. உடன் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருடன் பேசினார் (பள்ளியில் தான்) என்று ஒரு ஆசிரியையை போட்டு வறுத்தெடுத்திருக்கிறது அவரது குடும்பம். வேலைக்கே போக வேண்டாம் என்று சொல்லியதை மீறி கெஞ்சிக் கூத்தாடி வேலைக்கு வருகிறார் அவர்..

சரி விடுங்கள் நிகழ்ச்சிக்குப்போவோம். இந்த இடத்தில் சமூகத்திற்கு ஒரு வேண்டுகோள். வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டப்பட்டு, படித்தே ஆக வேண்டும் என்று மற்றவர் உதவியுடனாவது மேலேறி வர முயற்சி செய்யும் இந்தக் குழந்தைகளை போதை, ராகிங் என்ற இரண்டு சனியன்களிடம் இருந்து காப்பாற்றித்தாருங்கள். தயவுசெய்து இவர்களை மீண்டும் ஒரு நாவரசு லிஸ்டுகளில் சேர்த்து விடாதீர்கள்.

ராணுவமும், போலீஸூம், ஆசிரியனும், மருத்துவனும் சமூகத்திற்கு சேவை செய்பவர்கள். ஆனால் அனைத்து துறைகளையும் "தன்னலம் பாராத" என்று மட்டும் சொல்ல முடியவில்லை. இன்றைய நிலையில் ராணுவம் மட்டுமே அந்த வரிசையில் ஒற்றையாக நிற்கிறது. மற்ற அனைத்துப்பிரிவுகளிலும் வேலை செய்யும் நாமெல்லாம் செய்யும் வேலைக்குச் சம்பளம் வாங்கும் சாமானியர்கள். ஆனால் கேளிக்கைச் சாதனங்களாக இருக்கும் திரைப்படங்களின் பல்வேறு தளங்களில் இயங்குபவர்கள் சமூகத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியில் பங்களிப்பில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வைக்கப்படுகிறது.

அவர்களின் மேல் சுற்றியிருக்கும் புகழ் வெளிச்சம் சாமானியன் தந்தது. தான் சம்பாதித்ததை தனக்குக் கொடுத்த சமூகத்திற்கு தான் சம்பாதித்ததில் கொஞ்சம் திருப்பித்தரும் ஒரு நடிகனின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. அவன் இதைச்செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை என்று கூற முடியாது. செய்தால் நல்லது. அங்கொருவர், இங்கொருவர் என்று திரைத்துறையில் சிலர் செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அனைத்து மாணவர்களின் பேரைச் சொல்லி விபரம் சொல்லும் அளவுக்கு அனைவரையும் பற்றித் தெரிந்து வைத்திருந்தார் சூர்யா. இந்த விஷயத்தில் ஒரு ரியல் ஹீரோ என்று கூட தாராளமாகப் பாராட்டலாம் அவரை. டிரஸ்டுகள், ஃபவுண்டேஷன்கள் மூலம் பெரிய தொழிலதிபர்கள் தமது கறுப்புப்பணத்தை வெள்ளையாக்குகிறார்கள் என்றெல்லாம் கருத்துக்கள் கிளம்பவும் செய்கின்றன. அது ஒரு வேளை உண்மையாகவே இருந்தாலும், நம் நாட்டு அரசியல்வாதிகளின் ஸ்விஸ் பேங்க் கணக்குகளில் முடங்கிக்கிடக்கும் பல்லாயிரம் கோடிகளில் (ஸ்வேர்டு தெரியாமல் முடங்கிக் கிடப்பவை அதில் எண்பது சதவீதமாம்) நம் பணம் நாசமாய்ப் போவதற்கு இது பரவாயில்லை.

அகரத்திற்காக தங்களது கல்லூரியில் சில மேனேஜ்மெண்ட் சீட்களை ஒதுக்கிக் கொடுத்திருக்கின்றன சில தனியார் கல்லூரிகள். டாக்டர், இன்ஜினியர் படிப்பு மட்டும் தான் படிப்பா என்றுநாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, மாற்றுக்கருத்தாக "சார்ட்டட் அக்கவுண்டன்ட் போன்ற மற்ற படிப்புகளையும் தேர்ந்தெடுத்தால், குறைந்த செலவில் நிறைய படிக்க வைக்கலாம்" என்று சூர்யாவிடம் சொல்லி இன்னும் சில மாணவர்களை தேர்ந்தெடுத்ததாகவும், அதில் ஒரு மாணவியை தான் தத்தெடுத்திருப்பதாகவும் சொன்னார் ஒரு வி.ஐ.பி.

தனக்குக் கிடைத்த ஒரு இலட்ச ரூபாய் கல்வி உதவிப்பரிசை அகரம் ஃபவுண்டேஷனுக்கு கொடுத்த மாணவரும் கலந்து கொண்டிருந்தார். குடியுரிமைப்பிரச்சினையால் அரசுக்கல்லூரியில் படிக்க முடியாத நிலையில் இருந்த இலங்கை மாணவர் ஒருவருக்கும் உதவி வழங்கப்பட்டிருந்தது. தனியார் கல்லூரியில் பணம் அதிகமாக செலவாகும் என்றாலும், இந்த வாய்ப்பை விட்டால் அந்தப்பையனால் வேறெங்குமே படிக்க முடியாமல் போய்விடும் என்று அந்த மாணவனையும் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

சக்தி மசாலா துரைசாமி, சாந்தி துரைசாமி. மாஃபா பாண்டியராஜன், பாரதி சிமெண்ட் உரிமையாளர் போன்ற இன்னும் பலர் இதற்கு உதவியதாக அமர்ந்திருந்தார்கள். மேலும் ஞானவேல், ஜெயஸ்ரீ, நாகலக்ஷ்மி, என்று சில பேரின் பெயர்களைச் சொல்லிப்பாராட்டினார் சூர்யா. ஆசிரியர் தினத்தின் சிறப்புகள் கூறி, ஆசிரியருக்கு நன்றி சொல்லும் வேளையில் சூர்யாவையும் சேர்த்துக்கொள்ளத்தோன்றியது. நெகிழ்ச்சியாகத்தான் நிறைவடைந்தது விதை.

----------------------------------------

உயிரோசை டாட் காமில் இந்தக் கட்டுரையை படித்து விட்டு, கிருஷ்ணா என்ற புதிய நண்பர் ஈ.மெயில் மூலம் இந்தக்கடிதத்தை அனுப்பியிருந்தார். அன்புக்கு நன்றி கிருஷ்ணா..

--------------------------------------------------

வணக்கம் திரு எஸ்கா,

தங்களது "விதையும் அரசு ஆசிரியர்களும் " உயிர்ம்மையில் படித்தேன். சமூக மாற்றத்திற்கான புதிய வழிகளை நோக்கி செல்லும் நடிகர் சூர்யா போன்றவர்கள் போற்றப்பட வேண்டியவர்களே. அதே சமயம் தாங்கள் குறிப்பிட்ட "ராணுவமும், போலீஸும், ஆசிரியனும், மருத்துவனும் சமூகத்திற்கு சேவை செய்பவர்கள். ஆனால் அனைத்து துறைகளையும் "தன்னலம் பாராத" என்று மட்டும் சொல்ல முடியவில்லை. இன்றைய நிலையில் ராணுவம் மட்டுமே அந்த வரிசையில் ஒற்றையாக நிற்கிறது."

இந்த வரியில் வரும் ராணுவமும் கூட ""தன்னலம் பாராத" என்ற வாசகத்திற்கு ஏற்புடயதுதானா என்பதை நீங்கள் சற்று உள்நோக்கி பார்க்க வேண்டுகிறேன். இன்றைய நடப்பில் எனக்கு தெரிந்து நாட்டு பற்று கொண்டு சேவை செய்வதாக நினைத்து யாரும் ராணுவத்தில் சேருவதில்லை. வேலை இல்லாத காரணமாகவே சேருகின்றனர். நூறில் நாற்பது சதவீதம் பேர் குறுக்கு வழியில் அதிகாரிகளுக்கு ஐம்பது ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை லஞ்சம் கொடுத்தே சேருகின்றனர் (அடிப்படை சிப்பாய் வேலைக்கே இந்தth தொகை). இப்படி சேர்பவர்களிடம் எந்த தேச பற்றை எதிர்பார்ப்பது?? ராணுவத்திலும் கீழ் நிலா முதல் மேல் நிலை வரை கொள்ளை நடை பெறுகின்றது. எனக்கு தெரிந்த பல ராணுவ நண்பர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.

இதில் நீங்கள் வேறு " தன்னலம் பாராத" என்று போட்டு விட்டீர்கள்.

தங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன் நல்ல பல கட்டுரைகளை எழுதி இருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதவும்.. வாழ்த்துக்கள்....

கிருஷ்ணா..
--------------------------------------------------

திங்கள், 6 செப்டம்பர், 2010

ஒன் செகண்ட் ஒன் பைசா... என்னதான் நடக்குது?

(இக்கட்டுரை நண்பர் செல்வமுரளியுடைய தமிழ்வணிகம் டாட் காமில் கடந்த 2009 நவம்பர் 20ம் தேதி வெளியானது)

கோவிலுக்குப் போனால் செருப்பைப் பாதுகாக்க இரண்டு ரூபாய் தந்து விட்டு வரும் நம்மை, பிச்சைக்காரர்கள் கேட்டால் கூட ஒரு முழு ரூபாயை அநாயாசமாக தூக்கி எறியும் நம்மை, பஸ் கண்டக்டரிடம் கீப் த சேஞ்ச் என்று ஐம்பது பைசாவை விட்டு விட்டு வரும் நம்மை, ஒற்றை பைசாவையே கண்ணில் பார்த்தறியாத நம்மை, அதன் மதிப்பு தெரியாமல் வாழ்ந்து வந்த நம்மை இன்றைய மொபைல் நிறுவனங்கள் மீண்டும் பைசாக்களின் காலத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். சமீப காலமாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஒன் செகண்ட் ஒன் பைசா திட்டங்களைத்தான் சொல்கிறேன். இதை ஆரம்பித்து வைத்த பெருமை தொழில்துறை ஜாம்பவான் டாட்டா (டோக்கோமோ) வுக்கே உரியது.


நம்மூரில் எதற்கெடுத்தாலும் நீ என்ன பெரிய டாட்டா பிர்லாவா? என்று கேட்பது வழக்கம். அதிலும் பல விஷயங்களுக்கு முன்னோடியாக இருப்பதில் டாட்டா தான் நம்பர் ஒன். டாட்டாவுடன் ஒப்பிடும் போது பிர்லா எல்லாம் சும்மா. காங்லோமெரேட் என்று சொல்வார்கள் அவற்றை. பல்துறை நிறுவனங்களின் கூட்டம். அதாவது எந்தத் துறையில் முதலீடு செய்கிறார்கள் என்பதையே கணக்கெடுக்க முடியாது. காராகட்டும், துணியாகட்டும், குளிர்பானமாகட்டும், வீடாகட்டும், தொலைபேசியாகட்டும்... நுழையும் இடத்தில் எல்லாம் பட்டாசு கிளப்புவதே அவர்களது வழக்கம். இவற்றின் தொடர்ச்சியாக மொபைல் சேவைத் துறையில் இந்தியாவின் டாடா குழுமமும் ஜப்பானின் என்.டி.டி டோக்கோமோ நிறுவனமும் இணைந்து டாடா டோக்கோமோ என்ற சேவையை கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் ஆரம்பித்தன. ஒரு செகண்டுக்கு ஒரு பைசா பில்லிங் என்பதையே அவர்கள் தமது தாரக மந்திரமாகக் கொண்டு களம் இறங்கினார்கள்.

அறிமுகமான வேகத்திலேயே டாப் கியரில் வேகமெடுத்த இந்த திட்டத்தின் திடீர் ஹிட் மற்ற மொபைல் நிறுவனங்களை நிலைகுலையச் செய்தது. முதல் சில வாரங்களிலேயே டோக்கோமோ சந்தாதாரர்களின் எண்ணிக்கை அறுபது இலட்சம், எழுபது இலட்சம் என எகிறத் தொடங்கியது. எந்த மொபைல் வைத்திருந்தாலும் சப்ஸ்டிட்யூட்டாக டோக்கோமோ சிம் ஒன்று வாங்கி வைக்கத் துவங்கினார்கள் மக்கள். விளைவு... கடந்த இருவாரங்களுக்கு முன்பு ஒன் செகண்ட் ஒன் பைசா டாரிஃப்பை, எல்லா மொபைல் நிறுவனங்களும் அறிமுகப் படுத்த வேண்டும் என்று ட்ராய் (பங்குச் சந்தைக்கு செபி போல டெலிகம்யூனிகேஷனைக் கட்டுப்படுத்தும் அமைப்பு) அறிவித்தது. இதன் பிரதிபலிப்பு அன்றைய பங்குச் சந்தையில் கூட எதிரொலித்தது. அறிவிப்பு வந்த நாளன்றே டெலி கம்யூனிகேஷன் துறை பங்குகள் மடமடவென்று சரிந்தன.

ஒரே நாளில் அத்துறையில் எல்லா பங்குகளுமே கிட்டத்தட்ட 10% வீழ்ச்சி. ஏனென்றால் பெரும்பாலான, அதாவது சுமார் 60% க்கும் மேற்பட்ட செல்போன் பயனாளர்கள், தமது முதல் செல்போன் அழைப்பை துண்டிப்பது சில வினாடிகளிலேயே. ஆனால் பணம் கட்டுவது என்னவோ முழு நிமிடத்திற்கு. இது விநாடிக்கு என்று மாற்றப் பட்டால் செல்போன் சர்வீஸ் புரொவைடர்களின் தலையில் ஒரு பெரிய துண்டுதான். பேலன்ஸ் ஷீட் எனும் ஆண்டறிக்கையில் இலட்சங்களில், கோடிகளில் நஷ்டமாக எதிரொலிக்கும் அது.

சமீபத்தில் இந்தியா முழுவதும் தகவல் தொடர்புக் கோபுரங்களின் எண்ணிக்கையில் நம்பர் ஒன் என்று விருது வாங்கியிருக்கிறது டாடா இன்டிகாம். அதனால் தான் தன்னுடையது துல்லியமான நெட்வொர்க் என்று விளம்பரமும் செய்து வருகிறது. எண்ணற்ற இந்த டவர் கோபுரங்களின் மூலம் அது தனது டாடா இன்டிகாம், விர்ஜின் மொபைல், டாட்டா டோக்கோமோ ஆகிய நிறுவனங்களை பயனடையச் செய்ய முடியும். அதன் மூன்று நிறுவனங்களைக் கணக்கில் கொள்ளும் போது அதன் இலாப விகிதம் கூடவே செய்யும். ஒன் செகண்ட் ஒன் பைசா என்றில்லை.. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்கு இலாபம் இருக்கவே செய்யும்.

ட்ராயின் தலையீடு வந்தவுடன் வேறு வழியில்லாமல் அனைத்து நிறுவனங்களும் இதே போன்ற திட்டங்களை வழங்கும்படி ஆனது. அது மட்டுமின்றி ஒவ்வொரு நிறுவனமும் தனக்குத்தோதாய் நிமிடத்திற்கு ஐம்பது பைசா, நிமிடத்திற்கு நாற்பது பைசா, மூன்று நிமிடத்திற்கு ஒரு ரூபாய், மூன்றாவது நிமிடத்தில் இருந்து எஸ்.டி.டி கட்டணம் குறைவு என கூடுதலாக பலப்பல புதிய திட்டங்களையும் சேர்த்து அறிமுகப்படுத்தின. இவற்றால் அவற்றிற்கு நஷ்டம் ஏற்படுமா? இல்லை. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். பெட்டிக்கடை பெருமாள்சாமி முதல், அம்பானி வரை யாருமே நஷ்டத்திற்கு வியாபாரம் செய்ய மாட்டார்கள். முந்தைய இலாபத்தைக் கணக்கிடும் போது, இத்தகைய திட்டங்களால் ஒருவேளை அவர்களின் புதிய இலாபம் குறைய வாய்ப்புள்ளதே தவிர கண்டிப்பாக நஷ்டம் வரப்போவதில்லை. இதில் விட்டாலும் வேறொன்றில் பிடித்து விடுவார்கள்.

இந்தியா முழுவதும் 11 கோடி சந்தாதாரர்களை வைத்துக்கொண்டு இந்தியாவிலேயே நம்பர் ஒன் நெட்வொர்க்காக உள்ளது பார்தி ஏர்டெல். தென்னிந்தியாவில் (பிராண்ட் அம்பாஸிடர் சூர்யா, கூடவே ஜோவும்) நம்பர் ஒன் என்று அறிவித்துக்கொண்டு வட இந்தியாவை (பி.அ. தோனி) நோக்கி முன்னேறுகிறது ஏர்செல். டவர்கள் எண்ணிக்கையில் முதலிடம் டாட்டாவிற்கு. அம்பானிகளின் ரிலையன்ஸ் போவது எப்போதுமே தனி ரூட்டு. இவ்வாறாக தற்போது டாட்டா டோக்கோமோ, பார்தி ஏர்டெல் உட்பட, வோடஃபோன் எஸ்ஸார், ரிலையன்ஸ், பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல், வி.எஸ்.என்.எல், டாடா இன்டிகாம், விர்ஜின் மொபைல், ஐடியா, ஏர்செல், ஸ்பைஸ் டெலிகாம், கடைசியாக வந்த எம்.டி.எஸ் என்று மொத்தம் பதினைந்து பேர் உள்ளனர். இப்போது சில வாரங்களுக்கு முன் புதிதாய் ஒருத்தர் லைசென்ஸ் வாங்கி்க்கொண்டு உள்ளே வந்திருக்கிறாராம். ஆக மொத்தம் இன்றைய தேதிக்கு மொத்தம் பதினாறு மொபைல் சர்வீஸ் புரொவைடர்கள் இந்தியாவில்.

ஆனால் இன்றைக்கும் அமெரிக்காவில் ஒரு சிம் கார்டு அல்லது டெலிபோன் கனெக்ஷ்ன் வாங்க வேண்டுமென்றால் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும் இரட்டை கோபுர தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு ரொம்பக்கஷ்டம். தீவிரவாதிகள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்று பயப் படுகிறார்கள். ஆனால் அநியாயம். இன்றைய நிலையில் இந்தியாவில் சிம் கார்டுகள் இப்போது இலவசமாகவே வழங்கப் படுகின்றன. எந்த ஒரு மொபைல் அலுவலகத்திற்கும் அலைந்து கொண்டிருக்கத் தேவையில்லை. இந்தக் கட்டுரையை அப்படியே மினிமைஸ் செய்து விட்டு வெளியே போய்ப் எட்டிப் பாருங்கள். ஒவ்வொரு பெட்டிக் கடையிலும் கிடைக்கிறது சிம் கார்டு. இல்லையா, ஒரு குடையையும், சேரையும் போட்டுக் கொண்டு எக்ஸிகியூட்டிவ்கள் அமர்ந்து சுண்டல் மாதிரி சிம் வினியோகம் செய்து கொண்டிருப்பார்கள். அதிலும் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை இலவச டாக் வேல்யூ வேறு.

அப்படியென்றால் அவர்களுக்கு எங்கிருந்துதான் வருமானம் வருகிறது? ரொம்பக் கவலைப் படாதீர்கள். அதுவும் உங்களிடமிருந்து தான். டி.வி முன்னால் உட்கார்ந்து கொண்டு சூப்பர் சிங்கர், ஸ்டார் கிரிக்கெட், மானாட மயிலாட என்று பார்த்தபடி அவர்கள் சொல்லும் ஐந்து எண்களுக்கு (சில சமயம் ஆறு, ஏழு - ஃபேன்ஸி எண்கள்) எஸ்.எம்.எஸ் அனுப்பி ஓட்டு போடுகிறீர்கள் அல்லவா? எஃப். எம் நிகழ்ச்சிகளில் கேட்கப் படும் மொக்கை கேள்விகளுக்கு பதில் அனுப்புகிறீர்கள் அல்லவா? தலைவலி தைலம் முதல் இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் பண்டுகள் வரை வாங்கச் சொல்லி உங்களுக்கு எஸ்.எம்.எஸ் வருகிறதல்லவா? அவை மூலம் தான் மொபைல் கம்பெனிகளுக்கு அட்டகாசமான வருமானம் வருகிறது. நீங்கள் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் உங்களிடம் ரூபாய் 1.20 முதல் 2 ரூபாய், 3 ரூபாய் (உங்கள் செல்ஃபோன் கனெக்ஷ்னைப் பொறுத்து) என்று வசூலிக்கப்படும். அதை அவர்களுக்குள் பங்கு பிரித்துக் கொள்வார்கள். ACL வயர்லெஸ், ஆன்மொபைல் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தச் சேவையை (அவர்களுக்கும் நமக்கும் இடையில்) வழங்குகின்றன.

இவை தவிர காசு பார்க்க வேல்யூ ஆடட் சர்வீஸஸ் எனப்படும் பல ஐட்டங்களை ஒவ்வொரு நிறுவனமும் வைத்திருக்கிறார்கள். இன்கமிங், அவுட் கோயிங் வருமானம் எல்லாம் சும்மா. காலர் டியூன் (அதில் நம்பர் ஒன் - சுற்றும் விழிச் சுடரே), ரிங் டோன், சாங் டெடிகேஷன் (இதில் எப்போதும் நம்பர் ஒன் ஹாரிஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்), மிஸ்டு கால் அலர்ட்ஸ், நியூஸ் அலர்ட்ஸ், ஹெல்த் டிப்ஸ், லவ் டிப்ஸ், டெய்லி ஜோக்ஸ், புதிய படங்களின் செய்திகள், ஸ்கிரீன் பிக்சர் / வால் பேப்பர் டவுன்லோட் (நம்பர் ஒன் - பெண்களிடம் சூர்யா, ஆண்களுக்கு நமீதா), விளையாட்டு, வீடியோ, இவைதவிர தினமலர் போன்றோர் வழங்கும் மொபைல் நியூஸ் பேப்பர், எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ் என நாம் பொழுது போக்கும் வசதிகள் எல்லாமே அவர்களுக்கு காசு. இங்கே வருமானம் வரும் தெம்பில் தான் அங்கே ஒன் செகண்ட் ஒன் பைசா என்று வாரி வழங்குகிறார்கள்.

அது மட்டுமல்ல மக்களே.. மொபைல் சேவைத் துறை இப்போதுதான் பிறந்த டைனோசர் குட்டி போன்றது. பார்ப்பதற்கு என்னவோ இப்போதைக்கு புதிதாய்ப் பிறந்த ஆட்டுக்குட்டி போல இத்துணூண்டு தான் இருக்கும். ஆனால் வளரும் போதுதான் அதன் சைஸூம், வேகமும், வலிமையும் தெரிய வரும். ஆட்டுக் குட்டிக்கும் டைனோசர் குட்டிக்கும் உள்ள வித்தியாசம் மாதிரி. அவர்களுக்குத் தேவை நெட்வொர்க், பெரிய நெட்வொர்க், இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் கொண்ட மிகப்பெரிய நெட்வொர்க். அது இருந்தால்தான் அவர்கள் தனது மற்ற சேவைகள் எல்லாவற்றையும் உங்கள் தலையில் கட்டி காசு பார்க்கலாம். அவ்வளவு ஏன்? செல்ஃபோன் மூலம் ஷேர் டிரேடிங்கே செய்ய முடியும். இது தென்னை மரம், தேக்கு மரம் மாதிரி. கொஞ்சம் வெயிட் பண்ணிணாலும் பியூச்சரில் விளைச்சல் அதிகம். அதற்குத்தான் இந்த இலவச சிம் கார்டு, ஒன் செகண்ட் ஒன் பைசா விளையாட்டுக்கள் எல்லாம்.

ஆனால் ஒன் செகண்ட் ஒன் பைசா பற்றி இன்னொரு சாராரின் கணக்கு வேறு மாதிரி இருக்கிறது. இத்தகைய திட்டங்களில், கால் செய்யப்பட்டு சில வினாடிகளிலேயே துண்டிக்கப் படும் முதல் அழைப்பு மட்டுமே வாடிக்கையாளருக்கு இலாபம் தரும். ஆனால் இரண்டாவது, மூன்றாவது என அழைப்பு தொடரும் போது அதன் கணக்கு நிமிடத்திற்கு 60 பைசா என்றாகி விடுகிறது. இது சாதாரண கட்டணமான 50 பைசாவை விட அதிகம் என்பது அவர்கள் சொல்லும் கணக்கு. இந்தியாவில் செல்ஃபோன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 65 கோடி. ஆளுக்கு இரண்டு, மூன்று சிம்கள் வைத்திருப்பதைக் கழித்து விட்டுப் பார்த்தால் சுமார் 45 கோடிப்பேர் செல்ஃபோன் உபயோகிக்கிறார்கள். அப்படியென்றால் மொத்த வருமானத்தைக் கணக்குப் போட்டுப் பாருங்கள்.

ஆனால் நிறுவனங்களுக்குப் பாதகமான, செல்போன் சந்தாதாரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய இன்னொரு விஷயத்தைக் கையில் வைத்துக் கொண்டு காலம் கனிவதற்காகக் காத்திருக்கிறது ட்ராய். செல்ஃபோன் பயனாளர்கள் தங்களிடம் தற்போது உள்ள அதே நம்பரை வைத்துக் கொண்டு தான் விருப்பப்பட்ட எந்த நெட்வொர்க்குக்கு (அ) சர்வீஸ் புரொவைடருக்கு மாறிக் கொள்ளலாம், புதிய நம்பர் / சிம் வாங்கத் தேவையில்லை என்பது தான் அந்தப் புதிய திட்டம். அனைவருக்கும் கொடுத்து விட்ட நம்பரை மாற்ற முடியாத ஒரே காரணத்திற்காக பல ஆண்டுகளாக ஒரே நெட்வொர்க்கின் அட்டகாசங்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் (என்னைப் போன்ற) பலருக்கும் ஒரு பெரிய நல்ல செய்தி இது. ஆனால் டெலிகம்யூனிகேஷன் நிறுவனங்களுக்கு? ஒரு பெரிய ஆப்புதான். கஸ்டமர் சர்வீஸ் சரியில்லையென்றால் உடனே வேறு நெட்வொர்க்குக்கு மாறி விடுவார் வாடிக்கையாளர். அப்புறம்? துண்டு தான் தலையில்... அதற்குத்தான் ட்ராயின் வாயையே பார்த்துக் கொண்டு காத்திருக்கிறார்கள் அனைவரும். அது வரை ஒன் செகண்ட் ஒன் பைசா என்ன? ஒன் செகண்ட் அரை பைசா ஆஃபர் வந்தாலும் ஆச்சரியப் படாதீர்கள்.