திங்கள், 30 மார்ச், 2020

எனது கின்டில் மின் புத்தகங்கள்


"எதிர்பாராததை எதிர்பாருங்கள்" - கொரோனா எனும் பிக் பாஸ்

கொரோனா எனும் ஒற்றை உயிரி உலகம் முழுக்க எந்தெந்தத் துறைகளில் எத்தனை மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பது நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. நீங்கள் எதிர்பாராத மாற்றங்கள் வரலாம். அதை எதிர்பாருங்கள்.

உலக சினிமா எனும் புத்தகத்தில் படித்த ஒரு தகவலை என் வரிகளில் தருகிறேன் - சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் பரவிய கொள்ளை நோய் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு உயிராவது மடிந்த பிறகு கண்மூடித்தனமாக கடவுள் மேல் இருக்கும் நம்பிக்கை அற்றுப் போகிறது. விளைவாக "கடவுள் ஒரு கற்பிதம் தான்" என்ற நம்பிக்கை வேரூன்றி, "நம் இஷ்டத்துக்கு வாழ்வோம்" என்ற கருத்து வலுப்பெற்று, "ஹிப்பி கல்ச்சர்" உருவாகிறது. அது ஒரு பெரும் கலாச்சார மாற்றம். சயன்டிஸ்ட் ஆக வேண்டும், தொழிலதிபர் ஆக வேண்டும் என்று நினைத்தவன் ஹிப்பி ஆகி ஊர் சுற்றினால் அது உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு?

அது போல..... சில கேள்விகள்.
1.கடவுள் நம்பிக்கை இழப்பவர்கள் தமது கவனத்தை எதன் மேல் திருப்புவார்கள்? கோடிக்கணக்கான பேர் இவ்வாறு மாறினால் சமூகம் எதை நோக்கித் திரும்பும்?
2. விற்பனை இன்றி பல நிறுவனங்கள் மரண அடி வாங்கியிருக்கின்றன. அவற்றின் ஷேர்கள், அதன் ஃப்யூச்சர் கான்ட்ராக்டுகளை வைத்துள்ளவர்கள் நிலை என்ன? அதில் முடங்கிய கோடிக்கணக்கான பணம் காலியானதால் அது சமூகத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?
3. அத்தியாவசியமான "உணவும், அது சார்ந்த விஷயங்கள்" மட்டுமே முக்கியம் என மக்கள் நினைக்கும் பட்சத்தில் ஆடம்பரப்பொருட்களின் விற்பனை குறைந்தால் அத்துறைகள் என்ன ஆகும்? அதை நம்பி வாழ்வோர் கதி? உதா - ரெண்டாவது கார், பீன் பேக், டிசைனர் சோபா, அலங்காரப்பொருட்கள், சுற்றுலா, ரேண்டம் உதாரணங்கள்
4. சுமார் மூன்று மாதங்கள் கழித்து கையில் காசில்லாமல் வெளியே வரும் பொதுஜனம் சினிமா தியேட்டரை அத்தியாசியம் இல்லை என்று ஒதுக்கினால், "நாடகம் அழிந்தது போல்) தியேட்டர்கள் என்னாகும்?
5. உலகில் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் பல பெரிய மனிதர்கள் (இளவசர், இளவரசி, பெரும் தொழிலதிபர்கள், பெரும் சர்வாதிகார அரசியல்வாதிகள் போன்றோர்) இறந்தால் உலகம் என்னாகும்?
6. சைனா மேல் கோபம் கொண்டு இப்போது பெரும் இழப்பைச் சந்தித்துள்ள அமெரிக்கா போர் துவங்கினால் என்னாகும்?
7. சர்வர்கள், ஆன்லைன் போன்றவற்றை நிர்வகிக்கும் பல பேர் இறப்பைச் சந்தித்தால், ஷேர் மார்க்கெட் முதல் சேட்டிலைட் வரை இந்த உலகைக் கட்டமைத்திருக்கும் நெட்வொர்க் சிதைந்தால் என்னாகும்?
8. உலகம் முழுக்க உள்ள அணு உலைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகமிகப் பெரிய ப்ராஸஸ். ஒரு சாதாரண டிஸ்டில்டு வாட்டர் மாற்றுவது கூட அங்கே மிக மிக மிக மிக மிக முக்கியம். கொரோனாவின் பாதிப்பால் அவற்றை நிர்வகிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு ஒன்றிரண்டு அணு உலைகள் வெடித்தால் என்னாகும்?

தொடரும்........
.

கொரோனா விபரீதமும் அறிவுறுத்தலும்


உலகம் முழுக்க இன்றைய தேதிக்கு கொரோனாவுக்கு 35000 பேர் பலி. எவ்வளவு பெரிய எண்ணிக்கை? ஸ்பெயினிலும், இத்தாலியிலும் கொத்துக் கொத்தாக சாகிறார்கள். எரியூட்ட நேரமின்றி பிணங்கள் காத்திருக்கின்றன. அவற்றில் பலர் நேற்று வரை நம்மைப் போல் மிகச் சாதாரணமாக சுற்றித் திரிந்தவர்கள். அதே சமயம், எச்சரிக்கையின்றி கவனக்குறைவாக இருந்தவர்கள். விபரம் தெரியாமல் மாண்டு போகிறவர்களும் அடக்கம்.

அதுபோல, நம் நாட்டிலும் சுமார் 30 - 40 சதம் மக்கள், நிலைமையின் விபரீதம் புரியாமல் இன்னமும் சுற்றித் திரிந்து கொண்டே இருக்கிறார்கள். அரசுகள் எடுக்கும் நடவடிக்கையால் இன்று வரை நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் ஒருவருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு வெளியில் தெரிய 14 நாட்கள் ஆகும் என்ற நிலையில் 5 நாட்கள் "உள்ளிருத்தல்" நிலையைக் கடந்துள்ள நாம், அடுத்த நிலையைத்தெரிந்து கொள்ள 7 முதல் 9 நாட்கள் ஆகலாம்.

A என்ற ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவர் வீட்டிலுள்ள C, D, E என்றவர்களுக்குப் பரவலாம். அதைக் கண்டுபிடிப்பது எளிது. ஆனால் வெளியே போய் நபர் A சந்திக்கும் மக்களை B என்று கொண்டால் அந்த B - யார் யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? B என்பது ஒருவராகவும் இருக்கலாம், 400 ஆகவும் இருக்கலாம். ஆக, வெளியே போகாமல், முடிந்தவரை அடுத்தவர்களிடம் தொடர்பு இல்லாமல் இருப்பதே நல்லது.

கொரோனாவின் மற்றோர் ஆபத்து என்னவெனில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அதன் அறிகுறிகள் வெளியே தெரியுமுன்பே மற்றவர்களுக்குப் பரவிவிடும். நான் நன்றாயிருக்கிறேன் என்று நினைத்து அவர் வெளியே சுற்றினால் அது அறியாமை.

"வெளியே போகாதே" என நாம் பேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலும் கூவுவது, பெரும்பாலும் நம்மைப் போன்ற ஒத்த கருத்துள்ளவர்களிடமே போய்ச் சேர்கிறது. அல்காரிதமும், லாஜிக்கும் அப்படி.

நிலைமையின் தீவிரம் புரிந்த நீங்கள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் இல்லாத, ஆனால் உங்களுக்குத் தெரிந்த சிலருக்கு, உங்கள் பேச்சைக் கேட்கும் சிலருக்கு, அக்கம் பக்கத்தினரோ, உறவினரோ அடிக்கடி வெளியே செல்வோருக்குப் போன் செய்து அறிவுறுத்துங்கள்.

நான் சிலருக்கு அழுத்தமாக அறிவுறுத்தியிருக்கிறேன்.
.

சனி, 28 மார்ச், 2020

DC Extended Universe




Opinion differs என்றொரு சொலவடை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? "ஒருவரது கருத்து மற்றொருவரது கருத்துடன் ஒத்துப்போக வேண்டிய அவசியமே இல்லை. மாறுபட்டு இருக்கலாம்" என்பார்கள்.
சில சமயம் என் டிரெயினிங் வகுப்புகளில் இதைச் சொல்லி விட்டு, இதற்கு வேறொரு கோணமும் சொல்லலாம். Opinion differs மற்றவர்களுடன் தான் இருக்க வேண்டும் என்றில்லை. நமக்குள்ளே கூட இருக்கலாம். அதாகப்பட்டது 5 வருடங்களுக்கு முன் நான் சொன்ன ஒரு கருத்தை, பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக இன்று நான் கம்ப்ளீட்டாக மாற்றிக்கொண்டிருக்கலாம். தவறொன்றுமில்லை.
சொல்லி விட்டோமே என்ற காரணத்துக்காக அதே கருத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது யாருக்குப் புரிந்ததோ, நம்மூர் அரசியல் வாதிகள் இதை "நன்கு" புரிந்து கொண்டிருக்கிறார்கள், அண்ணன் வடிவேலு சொன்னது போல "அது போன மாசம். நாஞ்சொன்னது இந்த மாசம்" என்பது போல.
சிம்பிள் உதாரணம் - நீங்கள் 10 வருடத்துக்கு முன்பு அப்பாவிடம் சண்டை போட்டு, தீபாவளிக்கு எடுத்த சட்டையின் போட்டோவை எடுத்துப் பாருங்கள். "ச்சை, இதெல்லாம் ஒரு டிசைன்னு இதுக்கா சண்டை போட்டு எடுத்தோம்" என்று தோன்றலாம். 5 வருடம் முன்பு உங்கள் தங்கையிடம் ஏதோ சப்பை மேட்டருக்கு சண்டை கட்டியிருப்பீர்கள். பல வருடம் முன்பு விஜய்க்காகவோ, அஜீத்துக்காகவோ உயிர் நண்பனிடம் சண்டை போட்டிருக்கலாம். அதே விஜய் பற்றி இன்று உங்கள் கருத்து மாறியிருக்கலாம். இவையும் Opinion differs ஏ....
திரைப்படங்கள் விஷயத்தில் எனக்குச் சில சமயம் இவ்வாறு நடப்பதுண்டு. அதுவும் குறிப்பாக ஆங்கிலப் படங்கள் விஷயத்தில். சில சமயம் படங்கள் வெளியான சமயத்தில் அவை பிடிக்காமல் கடுப்பாகி, திட்டியிருப்பேன். ஏன் பதிவு கூடப் போட்டிருப்பேன். ஆனால் சில காலம் கழித்து, அந்தப் படங்களின் பின்னணி தெரிந்தோ, பிற விபரங்கள் அறிந்தோ, அல்லது சப் டைட்டில்கள் உபாயத்திலோ அந்தப் படத்தை மீண்டும் பார்க்கையில் அது வேறு ஒரு கலரில் மனதில் பதியும். தவறொன்றுமில்லை. ஒரு ரசிக்கும் படியான படைப்பு காலம் கடந்தாலும் ஒரு புதிய ரசிகனை உருவாக்கவே செய்யும்.
"சீரிஸ்" விஷயத்தில் நானெல்லாம் "மார்வல்" ரசிகன். Marvel Cinematic Universe - ன் வரிசைக்கிரமப் படி 23 படங்களையும் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் தியேட்டரில். அதிலும் 3 டி யில். ஒரு படத்தைப் பார்க்காமல் விட்டுவிட்டால் "ஈஸ்டர் எக்ஸ்" புரியாது, கோர்வை விட்டு விடக் கூடாது என்று தடாபுடாவென yts ல் டவுன்லோடிப் ("என்ட் கேம்" வந்தபோது அவசர அவசரமாக "கேப்டன் மார்வல்" டவுன்லோடிப்) பார்த்துவிட்டுத் தான் "என்ட் கேம்" போனேன். அந்த அளவு ரசிகன், ப்ரியன், வெறியன்.
இவற்றையெல்லாம் புரிந்து கொள்ள உதவியாகக் பல பதிவுகள், சினிமா ஆர்வலர்கள் எழுதிய கட்டுரைகள், விக்கி, ஐ.எம்.டி.பி, எச்சட்ரா. மேற்கொண்டு விரிவாக விவாதிக்க இருக்கவே இருக்கு நம்ம டான் தலைமையிலான MFC குரூப். எனக்குள் மார்வல் விதைத்த ஒரு பேட்டர்ன், கலர் டோன், படங்களுக்குள்ளான இன்டர் கனெக்ஷன்ஸ், ஸாஃப்ட்டான, குழந்தைகளையும் உள்ளிழுக்கும் வகையான சில விஷயங்கள் பிடித்துப் போய் "மார்வல்" வெறியன் ஆகிப்போனேன்.
ஆகவே obviously, DC படங்கள் அவ்வளவாகப் பிடிக்காமல் போயின. Man of steel போய்விட்டு வந்து (கொஞ்சம் பிடித்திருந்தாலும்) "என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?" என்று தான் விமர்சனம் போட்டேன். மார்வல் போல கலர்ஃபுல் ஆக இருக்கும் என நம்பி 6 வயசு மருமகனை "Batman Vs Superman" அழைத்துப்போய் அவன் காண்டாகி, அவனால் நான் காண்டாகி, கடுப்பேறிப் பதிவு போட்டேன். ரிலீஸ் ஆன காலகட்டத்தில் எனக்குப் பிடித்த DC யின் ஒரே படம் Wonder Woman மட்டுமே (காரணம்? அதையெல்லாம் கேக்கப்படாது. நீங்களா எதையாவது யோசிச்சிக்கணும்).
ஆனால் காலம் மாறமாற என்னுள் அந்த "Opinion differs" வேலைகாட்ட ஆரம்பித்தது. அதன் ஆரம்பப்புள்ளி Wonder Woman ஆக இருக்கலாம். அது பிடித்ததும், ஒவ்வொரு சூப்பர் ஹீரோவைப் பற்றியும் கொஞ்சம் கொஞ்சம் கூகிளண்ணனைப் பீறாய்ந்து படித்தேன். காமிக்ஸ்களில் சித்தரிக்கப்பட்ட சூப்பர்மேன், க்ரிப்டன், டூம்ஸ் டே எனத் துவங்கி ஒரு மாற்று எண்ணம் வரத் துவங்கியது. அடுத்து வந்த "சூசைட் ஸ்குவாட்" மிகவும் பிடித்திருந்தது. நான்கைந்து முறை பார்த்தேன். "ஹார்லி க்வின் - மார்கோ ராபி - க்காகவும்", "என்சான்ட்ரஸ் - காரா டெலவேனி - க்காகவும்".
இப்படியே கிட்டத்தட்ட DC Extended Universe - ன் ஐந்து படங்களைப் பார்த்துவிட்டேன். "ஜஸ்டிஸ் லீக்" அங்கங்கே யூடியூபில் பிச்சுப்பிச்சுப் பார்த்திருந்தேன். "ஆக்வாமேன்" பார்க்கவில்லை. சமீபத்தில் ரிலீஸ் ஆனதே தெரியாமல், வந்த வேகத்தில் காணாமல் போன "பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே"வையும் மிஸ் செய்திருந்தேன். அப்போது தான் கொரோனா வேலையைக் காட்டியது.
"வொர்க் ஃப்ரம் ஹோம்" போட்டார்கள். வேலை அதே அளவு இருந்தாலும், கிட்டத்தட்ட ஒரு வாரமாக வீட்டிலேயே இருந்ததால், டிரெயின், பஸ் பயணங்களிலும், ஏர்போர்ட் செக்யூரிட்டி செக் இன்களிலும் வீணான நேரங்கள் அப்படியே மிச்சமாயின. அப்போது ஒரு எண்ணம் - DC Extended Universe ஐ வரிசையாகப் பார்க்கலாமே? என்ற எண்ணத்தைத் தூசு தட்டி ஆரம்பித்தேன். நான்கே நாட்கள். கிட்டத்தட்ட ஆறு படங்கள் அமேசான் ப்ரைமிலேயே கிடைத்தது. "ஆக்வாமேன்" மற்றும் "Birds of Prey" வை மட்டும் YTS ல் டவுன்லோட் போட்டு உட்கார்ந்தேன்.
பொடுசுகள் தொந்திரவு, "வொர்க் ஃப்ரம் ஹோம்" மற்றும் "வொர்க் ஃபார் ஹோம்" ஆகிய எல்லாத்தடைகளையும் தாண்டி DC வெளியிட்ட அதே வரிசைக் கிரமத்தில் 8 படங்களையும் நான்கே நாட்களில் பார்த்து முடித்தாயிற்று. ஒரு ஹாலிவுட் சினிமா ரசிகனாக, ஆக்ஷன் பட விரும்பியாக, ஒரு முழுத் திருப்தியான வாரம் இது எனக்கு. சக "பட விரும்பிகள்" முயற்சிக்கலாம். Unlimited Entertainment guarantee.
இதோ அந்த லிஸ்ட்.....
1. Man of Steel
2. Batman Vs Superman
3. Suicide Squad
4. Wonder Woman
5. Justice League
6. Aquaman
7. Shazam
8. Birds of Prey.
பின்கு - கொரோனா பிரச்சினை முடிந்ததும், சம்பந்தப்பட்ட எல்லோரும் பிழைத்திருந்தால் (நானு, தியேட்டர்கள், படாதிபதிகள்) கண்டிப்பாக Wonder Woman 1984 உட்பட அனைத்து எதிர்காலப் படங்களும் தியேட்டரில் 3 டியில் பார்க்கப்படும்.
.

கிரிக்கெட் பஞ்சாயத்துகள்

28 மார்ச் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

கிரிக்கெட் ஆர்வலர்கள் கோபிக்க வேண்டாம். எனது மனதில் பட்டதைப் பதிவிடுகிறேன்.

1. கிரிக்கெட்டை பிஸினஸாக்கி வருஷம் பூரா ஆடுறாங்களே. ஆடுறவங்களை விடுங்க. பார்க்கிறவங்களுக்கு போரடிக்காதா? இது கேஷூவலாகக் கேட்டது. யாரையும் கேலி செய்ய அல்ல.

2. கிரிக்கெட்டை சூதாட்டம் என்று சொல்லவில்லை. பிஸினஸ் என்கிறேன். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஒவ்வொரு பொருளுக்கு பிராண்ட் அம்பாஸிடராகி கோடியில் வாங்கும் சம்பளம் அந்தப் பொருளின் விலையில் தானே ஏறுகிறது? பூஸ்ட் - க்கு சச்சின் ஓக்கே. ஆமரான் பேட்டரிக்கு எதற்கு சச்சின்?

3. ஒரு மிடில் கிளாஸ் குடும்பஸ்தன் என்ற முறையில் பல பொருட்களின் விலைகளை கவனித்து வருகிறேன். எப்போது ஒரு வி.ஐ.பி அதன் பிராண்ட் அம்பாஸிடராக ஆகிறாரோ அதன் விலை கன்னாபின்னாவென்று ஏறுகிறது. 15 ரூபாய் பொருள் 20 ரூபாய் ஆகிறது. 33 சதம் திடீர் உயர்வு. விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் தந்திரம் தெரியாமல் வாங்குகிறார்கள். சிறிய தொகை தானே என்று. 15 இலட்ச ரூபாய் கார் திடீரென 20 இலட்சம் ஆனால்? அப்போது அது பெரிய தொகையாக வித்தியாசம் தெரிகிறது.

4. நான் ஒரு கோக் குடிகாரன். கோக் 600 மி.லி 25 ரூபாயில் இருந்து திடீரென ஒரு ஓவர் நைட்டில் 10 ரூ ஏறியது. 40 சதம் விலை உயர்வு. (அந்த அளவுக்கு நம் வருமானம் ஏறுகிறதா? நோ) கன்ஸ்யூமர்கள் யாரும் கேள்வி கேட்கவில்லை. கேட்க முடியாது. மே பி, சில விநியோகஸ்தர்கள் கேட்டிருக்கலாம். ஆனால் முறைப்பு தான் பதிலாகக் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். எந்த தைரியத்தில் ஏற்றுகிறார்கள்?

5. நிஜமாகவே (கேஷூவலாக) கேட்கிறேன். வருடம் ஒருமுறை அல்லது மூன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வேர்ல்டு கப் நடந்த போது இருந்த த்ரில் வருடத்துக்கு இரண்டு மூன்று முறை நடக்கும் போது இருக்கிறதா?

6. எனக்கு குழம்பி விடுகிறது. மாதம் ஒரு முறை அக்கம் பக்கத்தில் கொண்டாட்டச் சத்தங்கள் கேட்கிறது. என்னவென்று கேட்டால் ஏதோ ஒரு வேர்ல்டு கப் என்கிறார்கள். அப்போ போன மாதம் வந்தது என்னவென்றால், அது வேற கப், இது வேற கப் என்கிறார்கள். எனக்கு நிஜமாகவே குழம்பி விடுகிறது.

7. இப்போது கூட ஒரு 2020 வேர்ல்டு கப் நடக்கிறது. அடுத்த மாதம் விவோ ஐ.பி.எல் துவங்குகிறது என்று விளம்பரம் போடுகிறார்கள். ஙேஙேஙேஙேஙேஙேஙேஙேஙே?
.