ஷேர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஷேர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 மார்ச், 2020

"எதிர்பாராததை எதிர்பாருங்கள்" - கொரோனா எனும் பிக் பாஸ்

கொரோனா எனும் ஒற்றை உயிரி உலகம் முழுக்க எந்தெந்தத் துறைகளில் எத்தனை மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பது நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. நீங்கள் எதிர்பாராத மாற்றங்கள் வரலாம். அதை எதிர்பாருங்கள்.

உலக சினிமா எனும் புத்தகத்தில் படித்த ஒரு தகவலை என் வரிகளில் தருகிறேன் - சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் பரவிய கொள்ளை நோய் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு உயிராவது மடிந்த பிறகு கண்மூடித்தனமாக கடவுள் மேல் இருக்கும் நம்பிக்கை அற்றுப் போகிறது. விளைவாக "கடவுள் ஒரு கற்பிதம் தான்" என்ற நம்பிக்கை வேரூன்றி, "நம் இஷ்டத்துக்கு வாழ்வோம்" என்ற கருத்து வலுப்பெற்று, "ஹிப்பி கல்ச்சர்" உருவாகிறது. அது ஒரு பெரும் கலாச்சார மாற்றம். சயன்டிஸ்ட் ஆக வேண்டும், தொழிலதிபர் ஆக வேண்டும் என்று நினைத்தவன் ஹிப்பி ஆகி ஊர் சுற்றினால் அது உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு?

அது போல..... சில கேள்விகள்.
1.கடவுள் நம்பிக்கை இழப்பவர்கள் தமது கவனத்தை எதன் மேல் திருப்புவார்கள்? கோடிக்கணக்கான பேர் இவ்வாறு மாறினால் சமூகம் எதை நோக்கித் திரும்பும்?
2. விற்பனை இன்றி பல நிறுவனங்கள் மரண அடி வாங்கியிருக்கின்றன. அவற்றின் ஷேர்கள், அதன் ஃப்யூச்சர் கான்ட்ராக்டுகளை வைத்துள்ளவர்கள் நிலை என்ன? அதில் முடங்கிய கோடிக்கணக்கான பணம் காலியானதால் அது சமூகத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?
3. அத்தியாவசியமான "உணவும், அது சார்ந்த விஷயங்கள்" மட்டுமே முக்கியம் என மக்கள் நினைக்கும் பட்சத்தில் ஆடம்பரப்பொருட்களின் விற்பனை குறைந்தால் அத்துறைகள் என்ன ஆகும்? அதை நம்பி வாழ்வோர் கதி? உதா - ரெண்டாவது கார், பீன் பேக், டிசைனர் சோபா, அலங்காரப்பொருட்கள், சுற்றுலா, ரேண்டம் உதாரணங்கள்
4. சுமார் மூன்று மாதங்கள் கழித்து கையில் காசில்லாமல் வெளியே வரும் பொதுஜனம் சினிமா தியேட்டரை அத்தியாசியம் இல்லை என்று ஒதுக்கினால், "நாடகம் அழிந்தது போல்) தியேட்டர்கள் என்னாகும்?
5. உலகில் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் பல பெரிய மனிதர்கள் (இளவசர், இளவரசி, பெரும் தொழிலதிபர்கள், பெரும் சர்வாதிகார அரசியல்வாதிகள் போன்றோர்) இறந்தால் உலகம் என்னாகும்?
6. சைனா மேல் கோபம் கொண்டு இப்போது பெரும் இழப்பைச் சந்தித்துள்ள அமெரிக்கா போர் துவங்கினால் என்னாகும்?
7. சர்வர்கள், ஆன்லைன் போன்றவற்றை நிர்வகிக்கும் பல பேர் இறப்பைச் சந்தித்தால், ஷேர் மார்க்கெட் முதல் சேட்டிலைட் வரை இந்த உலகைக் கட்டமைத்திருக்கும் நெட்வொர்க் சிதைந்தால் என்னாகும்?
8. உலகம் முழுக்க உள்ள அணு உலைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகமிகப் பெரிய ப்ராஸஸ். ஒரு சாதாரண டிஸ்டில்டு வாட்டர் மாற்றுவது கூட அங்கே மிக மிக மிக மிக மிக முக்கியம். கொரோனாவின் பாதிப்பால் அவற்றை நிர்வகிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு ஒன்றிரண்டு அணு உலைகள் வெடித்தால் என்னாகும்?

தொடரும்........
.

சனி, 2 அக்டோபர், 2010

எந்திரன் - சில (பல) கேள்விகள் (ஐ... ஜாலி... ஜாலி... எந்திரன் பாத்தாச்சே.....)

வெறும் மூன்று ரூபாய் தரை டிக்கெட்டிலேயே சங்கீத்தில் வாரா வாரம் இங்கிலீஷ் படம் பார்த்து வளர்ந்தவன் நான். சுப்ரகீத்தில் ஆறு ரூபாய். அப்புறம் தரை டிக்கெட்டை பத்து ரூபாய் ஆக்கினார் கலைஞர். ஆக படம் பார்க்க பத்து ரூபாய் போதும். ஆனால் நான் அதிக பட்சம் செலவு செய்தது என்று பார்த்தால் "மேட்ரிக்ஸ் ரீலோடட்"-கு 17 ரூபாய் ஃபர்ஸ்ட் கிளாஸ், “கிளாடியேட்டர்” 20 ரூபாய், “மைட்டி ஜோ யங்”-குக்கு 22 ரூபாய் பால்கனி, பிறகு டிக்கெட் விலை ஏறிய பின் “கஸீனோ ராயல்”-கு 30 ரூபாய், “க்வான்டம் ஆஃப் சோலேஸ்” 35 ரூபாய், அப்புறம் சென்னையில் காசு கொடுத்து பார்த்த “போக்கிரி” 40 ரூபாய், ஆபீஸில் தவிர்க்க முடியாமல் டீமாகப்போன “சரோஜா” 85 ரூபாய்.

ஆசைப்பட்டு பார்த்த ஒரே படமான அவதார் 120 ரூபாய் (நூற்றியிருபது ரூபாய் - த்ரீ டி கண்ணாடி உட்பட சத்யம் தியேட்டரில் - அது விதிவிலக்கு). அது தவிர என் வாழ்க்கையிலேயே முதன் முறையாக ஒரு படத்துக்கு நூத்தி ஐந்து ரூபாய் கொடுத்து பார்த்திருக்கிறேன் என்றால் அது எந்திரனுக்குத்தான். அதே போல் முதல் நாளிலேயே பார்த்த ஒரே தமிழ் படமும் இது தான். மத்ததெல்லாம் நிதானமாக ஒரு மாதம் கழித்து பார்த்தாலே போதும். ஆனால் தமிழ்நாட்டின் இண்டு, இடுக்கு, மூலை, முடுக்கு மற்றும் பிட்டு படம் போடும் தியேட்டர்களில் எல்லாம் எந்திரன் மட்டுமே ஓடினால் டிக்கெட் ஈஸியாகக் கிடைக்காதா என்ன?

அதுவும் நைட் ஷோ இரண்டு டிக்கெட். எனக்கொன்று. எங்க நைனாவுக்கு ஒன்று. ப்ளஸ் ஒரு முறுக்கு பாக்கெட். இரண்டு பாப்கார்ன். மூன்று ஸ்பிரைட். இரண்டு ஸ்வீட் கார்ன். ஒரு வாட்டர் பாட்டில். (நைனாவை பக்கத்தில் வைத்துக்கொண்டே கத்தித் தீர்த்ததில் கட்டிப்போன தொண்டையை சரி செய்ய) ஒரு ஸ்ட்ரெப்சில்ஸ். ஆக மொத்தம் எந்திரனுக்காக இந்த மாத குடும்பச்செலவில் கை வைத்தது ரூபாய் முன்னூற்று முப்பத்து இரண்டு. அதுவும் சேலம் என்ற ஊரில் ஒரு சாதாரண ஒதுக்குப்புறமான தியேட்டரில், இதையே சத்யத்தில் பார்த்துத் தொலைத்திருந்தால் ஆயிரத்தைநூறு ரூபாய் மொய்யாகி இருக்கும். (நான் போயிருக்கவே மாட்டேன். அது வேற விஷயம்..)

அப்புறம் நேற்று எந்திரன் பார்த்து விட்டு இன்றைக்கு வேலைக்குப்போகாமல் எங்க நைனா கட்டடித்ததில் மார்ஜினல் லாஸ் தனி. அதையும் கூட்டிக் கொள்ளுங்கள். இனிமேல் அவரையெல்லாம் கூட்டிக்கொண்டு போகக்கூடாது என்று தோன்றினாலும் அந்த மனுஷனுக்கு ரஜினியும், ராமராஜனும் ரொம்பப்பிடிக்கும் என்பதால் மன்னித்து விட்டு விட்டேன். பாட்ஷாவும், கரகாட்டக்காரனும் அவரது ஃபேவரைட். டிவியில் அந்தப்படங்கள் போடும் அன்றைக்கு வேலைக்கு லீவு போட்டு விடுவார்.

சரி. சொந்தக் கதை எதுக்கு? போதும். எந்திரன் படம் பற்றிப்பேசுவோம். பயப்படாதீர்கள். நான் விமர்சனம் எழுதவில்லை. நெட்டில் நோண்டும் பலரும் படம் பார்த்திருப்பீர்கள் அல்லது உங்களுக்குக் கதை தெரிந்திருக்கும். அப்படியும் தெரியாதவர்கள் "எந்திரன்" என கூகுளிட்டோ, தமிழ்மணத்திலோ, இன்ட்லியிலோ கதையைப்படித்து விட்டு வாருங்கள். இரண்டே நாள்தான் ஆகியிருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட அனைத்து பதிவர்களும் "எந்திரன்" பற்றி பதிவு போட்டுள்ளார்கள். நாமளும் எதையாவது போடுவோம் என்று தோன்றியது...

பதிவாகப்போடுவதற்குப் பதில் கேள்வியாகக்கேட்டால்? (போட்ட காசுக்கு நாலு கேள்வியாவது கேட்கணும் இல்லையா?) இந்தக்கேள்விகளை பலரும் கேட்கிறார்கள்.. கேட்காவிட்டாலும் பலர் மனதில் இந்தக் கேள்விகள் உட்கார்ந்திருக்கின்றன.. காப்பி என்று சொல்லாதீர்கள். ரெடி.. விடு ஜூட்.. கதையை படித்துத் தெரிந்து கொண்டு விட்டு இந்தக் கேள்விகளை படியுங்கள்..

இதோ கேள்விகள்...

21-ம் நூற்றாண்டின் இம்மாம் பெரிய அச்சீவ்மெண்டைச் செய்யும் விஞ்ஞானிக்கு இருக்கும் உதவியாளர்கள் இவ்வளவு மொக்கையாக இருப்பார்களா?

டிரெயினில் முப்பது நாற்பது பேரை புரட்டியெடுக்கும் ஒருவரை போலீஸ் தேடவே தேடாதா?

நாடே பரபரக்கும் ஒரு பெரிய வழக்கில் ஒரு ரோபோவின் சாட்சியை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா?

இந்தியாவில் எந்தக் கேஸ் ஒரே நாளில் முடிகிறது?

ரோபோவை டிஸ்மேன்டில் பண்ணிடுங்க - என்று சிம்பிளாகச் சொன்னால் போதுமா? அதை உருவாக்கிய ஃபார்முலா வசீகரனின் மண்டையிலும் ஃபைலிலும் இருக்காதா? அதை என்ன செய்வதாம்?

அழிவு செய்யும் ரோபோவின் ஓனரான விஞ்ஞானியை அரெஸ்ட் செய்யாமல் அவரையே புராஜெக்டுக்கு தலைவராக்கும் மாங்கா போலீஸ் எந்த ஊரில் இருக்கிறது?

ரோபோவை உருவாக்கவே பத்து வருட ஆராய்ச்சி தேவைப்பட்டால், அதற்கு உணர்ச்சிகள் கொடுக்க சும்மா போர்டில் பாடம் நடத்தினால் போதுமா?

சர்வ வல்லமை உள்ள ஒரு ரோபோ தயாரானால் அந்த ஃபார்முலாவைக் கவர சர்வதேசத் தீவிரவாதிகளோ, காங்க்லோமெரேட் கம்பெனிகளோ முயற்சிக்க மாட்டார்களா?

நூற்றுக்கணக்கான போலீஸையும், ராணுவத்தையும், பொது மக்களையும் கொலை செய்யும் ரோபோவை தயாரித்த ஒரு விஞ்ஞானியை மனித உரிமை ஆர்வலர்கள் சும்மா விட்டு விடுவார்களா?
ரோபோவைத் துரத்தும் போலீஸ்காரர்கள் ஐஸ்வர்யா ராய் காருக்குள் இருக்கிறார் என்பதைப்பார்க்காமலே சுடுவார்களா?

ராணுவத்திற்கு கொடுக்க ரோபோவை உருவாக்கும் ஒரு விஞ்ஞானிக்கு அதற்கான கமாண்டு-களை யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்ற சின்ன விஷயம் தெரியாதா?

பத்து வருடம் உழைத்து தயாரித்த ஒரு ரோபோவை "நியூரோ சிப்"பை டெமாலிஷ் செய்யாமல் சும்மா தூக்கி குப்பையில் போடுவாரா ஒரு விஞ்ஞானி?

ரஜினியே இரண்டு அல்லக்கை அரைகுறை விஞ்ஞானிகளை வைத்திருக்கும் போது அயல்நாட்டு தீவிரவாதிகளுக்கு ரோபோ சப்ளை செய்யும் அளவுக்கு பெரியாளான அவரது விஞ்ஞானி புரபஸர் ஆள் பலம் இல்லாமல் தனியாகச் சுற்றுவாரா?

ஒரு சாதாரண குடிமகனின் பத்து இலட்ச ரூபாய் டீலிங்கில் எல்லாம் தலையிடும் ரெளடிகள், அரசியல் வாதிகள் எல்லாம் இவ்ளோ பெரிய மேட்டர்களில் தலையிடவே மாட்டார்களா?

ரோபோ பற்றியே படம் எடுத்தாலும் கும்பல் கும்பலாகவே ஆட்கள் வரிசையாக நின்று ஆடும் டான்ஸ்களை எப்போது நிறுத்துவார்கள்?

சுஜாதா இருந்திருந்தால் படத்தைப்பார்த்து விட்டு என்ன சொல்லியிருப்பார்?

வில்லனாக ரகுவரன் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

----------------------------------------------------------------------------------

சரி போகட்டும். கொஞ்சம் பொது அறிவு கேள்விகள் கேட்கலாமா?...

இது ரஜினி படமா? ஷங்கர் படமா?

இந்தப்படத்தில் அஜீத் அல்லது கமல் நடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

கிளைமாக்ஸ் கதை விவாதத்தில் இராம.நாராயணன் கலந்து கொண்டாரா?

ஒரு சூப்பர் ஸ்டாரே சாதாரணமாக அறிமுகம் ஆவதைப்பார்த்தாவது சுமோ டாப்பைக்கிழித்து, ஏரோப்ளேனில் ஃபுட்போர்ட் அடித்து, ஆட்டோவைக்கையால் தூக்கியபடி அறிமுகமாகும் மற்ற ஹீரோக்கள் கொஞ்சமாவது திருந்துவார்களா?.

போட்ட காசுக்கு மேல் திரும்பி வந்தால் மீண்டும் இதே கூட்டணியில் படம் எடுப்பாரா கல்லா நிறைய நிதி வைத்திருக்கும் மாறன்?

எந்திரனில் எடுக்கும் காசை கலாநிதி மாறன் மருதநாயகம் தயாரிப்பில் விடுவாரா?

எந்திரனில் ரஜினியின் சம்பளம் எவ்வளவு இருக்கும்? சம்பளமாக இருக்குமா? பர்சன்டேஜாக இருக்குமா?

டிவியில் கலாநிதி மாறன் பேரை காண்பிக்கும் போதெல்லாம் பின்னணியில் கேட்கும் ஆய், ஊய், விசில் சத்தங்கள் தியேட்டரில் கேட்கவில்லையே ஏன்?

எதிர்பார்த்தபடி கலெக்ஷன் ஆகி இலாபம் வந்தால், சன் டி.வி ஷேர் விலை எவ்வளவு ஏறும்?

காமன் வெல்த் போட்டிக்கு வரும் வெளிநாட்டு வி.ஐ.பிக்களுக்கு எந்திரன் படத்தை போட்டுக்காண்பிப்பார்களா?

எந்திரன் படத்தைப்பார்த்து பாராட்டியதற்காக கலைஞர் ஐயா அவர்களுக்கு பாராட்டு விழா வைப்பார்களா? அப்படி வைத்தால் அது சன் டி.வியில் வருமா? கலைஞர் டி.வியில் வருமா?

எல்லா தியேட்டரிலும் எந்திரனே ஓடினால் மற்ற படங்களை பார்க்க விரும்புபவர்கள் எங்கே போவது?

ஷங்கர், "த்ரீ இடியட்ஸின்" பிரசவக் காட்சியை சுட்டு எந்திரனில் வைத்திருக்கிறாரே? தன் அடுத்த படமான த்ரீ இடியட்ஸ் தமிழ் ரீமேக்கில் அந்தக் காட்சியை என்ன செய்வார்?

அமரர் சுஜாதாவுக்கு ஒரு அஞ்சலி கார்டு போட்டிருக்கக் கூடாதா?

படம் பார்க்காதவர்களை படம் பார்த்தவர்கள் இன்னுமா (?) எந்திரன் பாக்கலை என்று துக்கம் விசாரிக்கிறார்களே, ஏன்?

ரஜினி அடுத்த படத்துக்கு என்ன செய்வார்? இந்த அளவுக்கு பில்டப் யார் கொடுப்பார்கள்?
ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிக்கப்போவது க்ளவுட் நைன் மூவீஸ் தயாநிதி அழகிரியா? ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலினா?
----------------------------------------------------------------------------------

ஓக்கே, படித்தாயிற்றா? கமர்ஷியல் படத்தில் லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது என்று அட்வைஸ் செய்ய வருவீர்களே? அல்லது என் மீது கோபப்பட்டாலும் படுவீர்களே? நோ டென்ஞன் பாஸ்.. எந்திரன் மேல் எனக்கொன்னும் கோவம் இல்லை. நானும் ரஜினி ரசிகன்தான். ஆனா சும்மா நாமளும் இருக்கோம்கிறதை காட்டிக்கணும் இல்லையா? அதுக்குத்தான்.. ஓக்கேவா? கூல்... (இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு. எல்லாத்தையும் கேட்டால் அடிக்க வருவீர்கள். பை பை..)

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

வியாழன், 30 செப்டம்பர், 2010

பாபர் மசூதி வழக்கும் எந்திரன் சினிமாவும்

ஒரு வழியாக புலி வருது, புலி வருது கதையாக அயோத்தி, பாபர் மசூதி - ராம் ஜன்ம பூமி வழக்கில் இன்று (செப்டம்பர் 30-ம் தேதி) தீர்ப்பு வந்தாயிற்று. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ஏக்கர் நிலத்தை மூன்று துண்டாக கேக் மாதிரி வெட்டி ஆளுக்கொன்றாக எடுத்துக்கொள்ளச் சொல்லி விட்டார்கள். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை இந்த உத்தரவைப்பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் சுதிர் அகர்வால், தரம் வீர் சர்மா, எஸ்.யு.கான் ஆகியோர்.


சர்ச்சைக்குரிய இரண்டரை ஏக்கர் நிலத்தை மூன்றாக (எப்படி பிரிப்பாங்க?) பிரிக்க வேண்டும், ஆனால் தற்போதைக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தற்போதைய நிலை தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்படும். மற்றொரு பகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கு தர வேண்டும். எஞ்சிய இன்னொரு பகுதி இந்து மகா சபைக்கு தரப்பட வேண்டும். நிலத்திற்கு முழு உரிமை கோரிய சன்னி மத்திய வக்பு வாரியம் மற்றும் நிர்மோகி அகாரா அமைப்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவற்றிற்கு அல்வா தரப்பட்டது.

கூடவே சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தது உண்மைதான் என்றும் நீதிபதிகள் ஒரு பிட்டைப்போட்டிருக்கிறார்களாம். அப்போ ராமாயணம் நடந்தது உண்மைதானா? அணிலுக்குக்கோடு போட்டது அவர்தானா? பாம்பன் (?????) பாலத்தைக்கட்டியது அனுமார்தானா? என்றெல்லாம் என் மனதில் பிறந்த உப கேள்விகளுக்கு என்னிடம் பதில்கள் இல்லை. இதில் இன்னோரு முக்கியமான விஷயம் என்னவென்றால் வழக்கம் போல "மூன்று மாதத்திற்குள் மேல் முறையீடு செய்து கொள்ளலாமாம்". தீர்ப்பின் முழு விவரம் ஐயாயிரம் பக்கங்களுக்கு மேலாம். டைப் செய்யவே ஒரு மாதம் ஆகியிருக்குமே..

சுமார் அறுபது (நோட் தி பாயிண்ட்: ரஜினியின் வயது அறுபது - எப்படி லிங்க் கொடுத்தேன் பாத்தீங்களா?) வருடங்களாக இழுத்துக்கோ, பறிச்சுக்கோ என்றிருந்த இந்த வழக்கின் இந்தத்தீர்ப்புக்காக நாடே காத்திருந்தது. ஒரு வாரமாக இதோ, இதோ என்று ஊரெல்லாம் ஒரே பரபரப்பு, பந்தோபஸ்து, டாஸ்மாக்கெல்லாம் மூடிட்டாங்களாம், மசூதிங்களுக்கெல்லாம் போலீஸ் போட்டிருக்காங்களாம், இன்போஸிஸ் கம்பெனி லீவாம், இஸ்கூல் எல்லாம் அரை நாள் லீவாம், இன்டர்நெட்டை ஸ்லோ பண்ணிட்டாங்களாம், இந்தியாவுல எல்லார் போனும் ரெக்கார்ட் ஆவுதாம், பல்க் மெஸேஜ் அனுப்பக்கூடாதாம், மசூதி பத்தி மெஸேஜ் அனுப்பினா தானாவே டெலிட் ஆகிடுமாம், எந்திரன் ரிலீஸ் தள்ளிப்போயிடுச்சாம், என்றெல்லாம் பரபரப்புக்குத் திரி கிள்ளிப்போட்டிருந்தார்கள்.

இதில் ஹைலைட் (?) என்னவென்றால் இந்தத்தீர்ப்புக்காக அகில உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அகில உலக சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டூப்பர் டமால் டுமீல் ஹிட் எந்திரன் படமே ஒரு நாள் தள்ளி வைத்து ரிலீஸ் ஆகிறது. செப்டம்பர் 30-ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தத் தீர்ப்பு வெளியாக வேண்டியிருந்ததால் ஏதேனும் பிரச்சினை வந்தால் என்ன செய்வது, பாபா மாதிரி படம் பப்படம் ஆகிவிடக் கூடாதே என்று (பயந்து) ஒரு நாள் தள்ளி வெள்ளிக்கிழமையில் ரிலீஸ் ஆகிறது படம். ஒரு நாள் வசூல் போச்சே.


அவ்வளவு ஏன்? செப்டம்பர் 23-ம் தேதியே வெளியாக வேண்டியதாம். சென்ற வாரமே பாபர் மசூதி தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து தள்ளிப்போனதால் ஒரு வாரம் வீணாய்ப்போச்சு. (எந்திரன் டிக்கெட் புக் பண்ணியாச்சே!!!!!. பெரிய தியேட்டரில் ஐநூறு, ஆயிரத்திற்கெல்லாம் போவதாகச் சொன்னார்கள். எனக்கு சிம்பிளாக நூறு ரூபாய் பிளாட் ரேட்டில் கிடைத்தது. அது சரி, ஊரில் உள்ள சந்து, பொந்து, இண்டு, இடுக்கு, அது தவிர பிட்டு படம் போடும் தியேட்டர்களில் எல்லாம் எந்திரன் மட்டுமே வெளியானால்?) ஒரு வாரம் லேட். ஆனால் அத்தனை தியேட்டர்களிலும் ப்ளாட் ரேட் நூறு ரூபாய் மினிமமாம். அதற்கு மேலே என்றால் நோ ப்ராப்ளமாம்.

என்ன ஒரு அநியாயம்? இந்தியாவில் ஒரு மாபெரும் வசூல் சாதனை படைக்கப்போகும், புதிய புதிய ரெக்கார்டுகளை உருவாக்கப்போகும், சன் பிக்சர்ஸ் ஷேர் விலையை உயர்த்தப்போகும், 1000 கோடி ரூபாய் வசூல் செய்யப்போகும், ஹிந்தி பட ரெக்கார்டுகளை தாண்டப்போகும், எந்திரன் (மற்றும் ரோபாட்) படத்திற்கு ஒரு வாரம் தள்ளி வைத்து இப்படி ஒரு மாபெரும் தடையா?

சரி விடுங்கள். வழக்குக்குப்போவோம். நாட்டாமையில் கவுண்டமணி அலுமினியத்தட்டை ஓரே உடையாக உடைத்து சொத்தைப்பிரி என்பது போல், மூணு பீஸாப்பிரிச்சி எடுத்துக்கோங்கப்பா என்று அயோத்தி விவகாரத்தில் சொல்லி விட்டிருக்கிறார்கள். ஆனால் பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏதேனும் ஒரு சார்பாகத்தீர்ப்பு வந்து அதனால் பல கலவரங்கள் வருவதற்குப்பதில் இந்தத்தீர்ப்பு பரவாயில்லை. ஓரளவு வீரியம் குறைவாகத்தான் இருக்கிறது.

ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போகிறார்கள், செய்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் கசிய ஆரம்பித்து விட்டன். இந்த இடத்தில் ஒரு சாதாரண ஒரு பொது ஜனமாக “இந்தச்சண்டையில் கடந்த அறுபது வருடங்களாக சம்பந்தமே இல்லாமல் உயிர் துறந்து கொண்டிருக்கும் அப்பாவிகளுக்கு ஒரு நினைவுச்சின்னம் கட்டலாம்” என்பது எங்களின் தாழ்மையான கருத்து. அல்லது “ஒரு பள்ளிக்கூடமோ அல்லது மருத்துவமனையோ” அந்த இடத்தில் கட்ட உத்தரவிட்டிருக்கலாம்.

அல்லது இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார் காந்தித்தாத்தா. அவருக்கு ஒரு மணி மண்டபம் (!) கட்டலாம். யார் கேள்வி கேட்கப்போகிறார்கள்? ஒரு ஆலோசனைதான். அவருக்காக இடம் ஒதுக்கினால் இந்தியா முழுக்க யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. எந்தப்பிரச்சினையும் வரப்போவதில்லை. என்னடா ரொம்ப அட்வைஸா எனாதீர்கள். நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என்பார்கள். ஆனால் பிரதமரே "இந்தத் தீர்ப்பு இறுதித்தீர்ப்பு அல்ல" என்று சொன்ன பிறகு ஒரு சின்ன தைரியம் தான்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

பங்குச்சந்தை ... ஏன் பயம்?

(இக்கட்டுரை கடந்த வருடம் நவம்பர் 2-ம் தேதி நண்பர் செல்வமுரளியுடைய தமிழ்வணிகம் டாட் காமில் வெளியானது)

-எஸ்கா


பங்குச் சந்தை எனப்படும் ஷேர் மார்க்கெட் பற்றிப் பேச்செடுத்தாலே ஒரு சாராருக்கு உற்சாகம் ஊற்றெடுக்கும். ஆனால் அதில் ஆர்வமுள்ளவர்கள் தவிர மற்ற பலரும் காட்டும் ஒரே எதிர்வினை "ஷேர் மார்க்கெட்டா? அது சூதாட்டம் மாதிரியில்ல".. உண்மையைச் சொன்னால்... அப்படி இல்லை...., (ஆனால் கிட்டத்தட்ட அப்படித்தான்). பங்குச் சந்தை பற்றி ஏன் இந்தக் குழப்பம்? பயம்? இது தேவையா? நியாயமாகச் சொன்னால் இந்தப் பயம் தேவையே இல்லை.

பங்குச் சந்தை எனப்படும் ஷேர் மார்க்கெட்டில் எத்தனை பேர் வர்த்தகம் புரிகிறார்கள்? சொல்ல முடியுமா? நூற்றுக்கணக்கில்?, ஆயிரக் கணக்கில்?, இலட்சக்கணக்கில்?, கோடிக்கணக்கில்? யெஸ். யூ ஆர் ரைட். கோடிக்கணக்கில் தான். இந்தியாவில் கிட்டத்தட்ட இரண்டரை கோடி பேர் ஷேர் மார்க்கெட்டில் வர்த்தகம் புரிகிறார்கள். இத்தனை பேர் வியாபாரம் செய்யும் இடத்தில் கொஞ்சம் கூச்சல் குழப்பம் இருக்கத்தான் செய்யும். ஆனால் பதற்றம் வேண்டாம். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் இருப்பது போல இங்கும் உண்டு. ரெகுலேட்டரி என்று பெயர். அவர்கள் முடிந்த வரை கூச்சல், குழப்பம், பிரச்சினைகள் வராமல் தடுக்கப் பார்ப்பார்கள்.

பொதுவாக ஷேர் மார்க்கெட்டில் மூன்று வகையான ஆசாமிகள் (நிறுவனங்கள் கூட) உண்டு. Investor, Trader, Speculator என்று. இதில் Investor என்பவர் முதலீட்டாளர், Trader என்பவர் வியாபாரி, வர்த்தகம் செய்பவர், Speculator என்பவர் ஊக (யூகம் - Guess) வணிகம் செய்பவர். பச்சையாகச் சொன்னால் சூதாடி. Traderகள், Investorகளின் எண்ணிக்கையை விட இப்படிப்பட்ட ஸ்பெகுலேட்டர்கள் கூட்டம் அதிகமாகிப்போனதால்தான் சந்தையில் இத்தனை கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது, இத்தனை நிறுவனங்கள் இருக்கின்றன, இந்தியப் பொருளாதாரம் அசைத்துப்பார்க்கப் படுகிறது. சிறு அளவில் வர்த்தகம் செய்யும் நம்மைப் போன்றோருக்கும் லிக்விடிட்டி (வேண்டிய நேரத்தில், வேண்டிய அளவில், கிட்டத்தட்ட வேண்டிய விலையில்) கிடைக்கிறது.

ஸ்பெகுலேஷன் செய்யும் விருப்பம் உள்ளவர்களுக்காகவே ஃபியூச்சர்ஸ் (எதிர்காலம்) & ஆப்ஷன்ஸ் என்ற வர்த்தகங்களையும் பங்குச் சந்தைகள் அறிமுகப்படுத்தின. அதிலும் தினசரி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. அதனால் சிறு முதலீட்டாளர்கள் மட்டும் சற்று நிதானமாக, எச்சரிக்கையாக அடி எடுத்து வைக்க வேண்டும். கரணம் தப்பினால்..

நண்பர் ஒருவரிடம் இன்வெஸ்ட்மெண்ட் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது அவரையும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யச் சொன்னேன். அவருக்கும் இதில் விருப்பம் இருந்தது. ஆனால் ஷேர்களில் இன்வெஸ்ட் செய்வதால் மாதா மாதம் எவ்வளவு கிடைக்கும் என்றார்.. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். ஷேர் மார்க்கெட் என்பது போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸோ அல்லது மாதா மாதம் வட்டி வரும் பேங்க் முதலீடோ அல்ல.

மற்ற முதலீடுகளுக்கும் இதற்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால், ஷேர்கள் மூலம் நீங்கள் நேரடியாக கம்பெனிகளில் முதலீடு செய்கிறீர்கள். அந்தக் கம்பெனியின் வியாபாரத்தில் நடக்கும் லாப நஷ்டங்கள், ஏற்ற இறக்கங்கள் ஷேரில் எதிரொலிக்கும். நீங்களும் அந்தக் கம்பெனியின் ஒரு (சிறிய) முதலாளி என்பதால் அதன் பலன் உங்களுக்கும் தான்.

ஆனால் வங்கிகளிலோ போஸ்ட் ஆபீஸிலோ முதலீடு செய்யப் படும் பணத்திற்கான பொறுப்பை அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். அந்தப்பணத்தை பல்வேறு வகைகளில் முதலீடு செய்கிறார்கள். வரும் வருமானத்தில் உங்களுக்கு வட்டியாக ஒரு மிகச் சிறு (8% - 10%) தொகையைக் கொடுத்து விட்டு மீதி (எவ்வளவு வந்தாலும்) அவர்களுக்கு. ஆனால் ஷேரில் செய்யப்படும் முதலீடுகளுக்கு.. லாபமோ, நஷ்டமோ... அது உங்களுக்கே உங்களுக்கு. கொஞ்சம் ரிஸ்க் மாதிரி தெரிந்தாலும் லாபம் அதிகம் வர வாய்ப்புண்டு. 8% என்ன 10% என்ன 100% கூட இலாபமாகக் கிடைக்கலாம். அதாவது போட்ட பணம் டபுள். அவ்வளவு ஏன்? சில நிறுவனங்களின் ஷேர்கள் அதைவிட அதிகமான இலாபமெல்லாம் கொடுத்திருக்கின்றன - ஒரே வருடத்தில்.


ஆனால் இதே விஷயத்தில் மற்றொரு நண்பர் ஒரு படி மேலேயே போய்விட்டார். அவர் "நான் இன்று ஐயாயிரம் ரூபாய் ஷேரில் போடுகிறேன். அடுத்தமாதம் எனக்கு ஏழாயிரத்தைநூறு ரூபாய் ஆக வேண்டும். அப்படி ஏதாவது ஷேர் சொல்லுங்கள்" என்று அசர வைத்துவிட்டார். ஐயாயிரம் ரூபாய் முதலீட்டுக்கு ஒரு மாதத்தில் இரண்டாயிரத்தைநூறு ரூபாயா? அதாவது 50 சதவீதம் ஒரு மாதத்தில். அப்படியானால் 12 மாதத்தில் 600 சதவீதமா? கொள்ளையடிக்கத்தான் போக வேண்டும். அதிலும் கூட ரிஸ்க் உண்டு.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 600% வருமானம் வங்கி வட்டி மூலம் வர வேண்டுமானால் எத்தனை வருடம் காத்திருக்க வேண்டும்? 60 வருடம். ஒரு மனிதனின் வாழ்நாள். ஒரு முழு வாழ்நாளில் வங்கி மூலம் வரும் வருமானத்தை விட அதிகமாக ஒரே வருடத்தில் வர வேண்டும் என்றால் எப்படி? இதைத்தான் பேராசை என்று சொல்வது.

ரொம்பவும் ஆசைப்படாதீர்கள். அப்படி ஆசைப்பட்டு அவசரமாய் பணப் பெட்டியோடு (அதாவது செக் புக்கோடு) உள்ளே வருபவர்களால் தான் ஷேர் மார்க்கெட் இப்படிக் கெட்டுப் போய்க் கிடக்கிறது. நியாயமாக பேங்க் வட்டியை விட சில விழுக்காடுகள், அல்லது இருமடங்கு இருக்குமா என்று பாருங்கள். இந்தியாவில் கடந்த 1985-2006 க்கு இடைப்பட்ட 20 வருடங்களி்ல் ஷேர்களில் செய்யப்பட்ட முதலீடு சுமார் 17.9% (வருடந்தோறும் - CAGR கணக்கீடு) வருமானத்தை அளித்துள்ளது. இது மற்ற உலக நாடுகளின் சந்தைகள் அளித்துள்ள இலாபத்தின் சராசரியை விட அதிகம்.

இதில் நூற்றுக்கணக்கான விழுக்காடுகள் இலாபம் தந்த பங்குகளும் உண்டு. நஷ்டப்பட்டு அதலபாதாளத்தில் விழுந்த பங்குகளும் உண்டு. கடையை மூடிய கம்பெனிகளும் உண்டு. இவை எல்லாவற்றின் சராசரி தான் இந்த 17.9% வருமானம். ஆக, நாம் கவனம் செலுத்த வேண்டியது சரியான பங்குகள் தேர்வில் தான். நல்ல, மிக நல்ல பங்குகளாகப் பார்த்து தேர்ந்தெடுங்கள். முதலீடு செய்யுங்கள். ஜாலியாக இருங்கள்.


மோனோபலி என்று ஒரு ஆங்கிலப் பதம் உண்டு. ஏகபோக உரிமை, தனியுரிமை என்று சொல்லலாம். அதாகப்பட்டது, தான் இருக்கும் துறையில் தான்தான் வல்லவன். சிங்கம் மாதிரி... மற்ற நிறுவனங்கள் எல்லாம் பொடி, அல்லது போட்டிக்கு நிறுவனமே இல்லை என்ற நிலை.. அம்மாதிரி நிறுவனங்களைக் கண்டுபிடித்து முதலீடு செய்யலாம்.. முதலீடு மட்டும் செய்யுங்கள், காத்திருங்கள்,.. ஒரு நியாயமான காலம் வரை. அப்படிக் காத்திருந்தால் நல்ல அறுவடைதான். காத்திருக்கும் கொக்குக்குத்தான் பெரு மீன்கள் கிடைக்கும்.

மோனோபலி நிறுவனங்களைக் கண்டுபிடிப்பது எப்படி? மிகவும் சிம்பிள். இன்டர்நெட் என்கிற ஒரு உன்னதமான ஒரு விஷயம் உங்களுக்கு உதவவே காத்திருக்கிறது. அது ஒரு அலாவுதீன் பூதம். சரியாகப் பயன்படுத்தினால் உங்களுக்கு ஜாக்பாட் தான். மோனோபலியில் உதாரணமாக மின்சாரத்தை எடுத்துக்கொள்வோம். இன்றைக்கு நீர் மின்சாரத்துக்கு மாற்றாக விளங்குவது காற்றாலை மின்சாரம். காற்றாலை மின்சாரத்திற்கான துறையில் ஒரே நிறுவனமாக, ஜாம்பவானாக இருப்பது சுஸ்லான் எனர்ஜி என்ற நிறுவனம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு யாரும் இல்லை.

அதே போல பார் ட்ரானிக்ஸ் என்று ஒன்று. நீங்கள் வாங்கும் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் கருப்பு வெள்ளை பார் கோடுகளைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? ஷாப்பிங் மால்களில் அவற்றை பில் போடாமல் வெளியில் எடுத்துப் போனால் ஊய்.. ஊய்.. ஊய்.. என்று சைரன் அலறுமே, அதே கோட்தான். அவற்றை அச்சடித்துத் தரும் நிறுவனம் அது. இத் துறையிலேயே ஒன்றுதான். இது போன்று பல நிறுவனங்கள். அப்படிப்பட்ட நல்ல நிறுவனங்களாகப் பார்த்து முதலீடு (கவனிக்கவும், முதலீடு) செய்யுங்கள். பலன்? பழம்தான்.

ஷேர் மார்க்கெட்டைப் பார்த்து அச்சம் வேண்டாம். உங்கள் முதலீட்டுத் தொகை கையைக்கடிக்காத தொகையா என்று மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். திருமணம், மருத்துவம், கல்வி முதலிய முக்கியச் செலவினங்களுக்காக வைத்திருக்கும் தொகைகளில் கை வைக்காதீர்கள். உபரித்தொகை மட்டுமே பங்குச் சந்தைக்கு என்று முடிவு செய்து இறங்குங்கள். ஜெயம் தான். மீண்டும் சந்திப்போம்.
------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
-------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
-------
அப்டியே பட்டனை அமுக்கி ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க. கைக்காசு ஒண்ணும் செலவில்லை.
------------

சனி, 5 ஜூன், 2010

டீமேட். ஏன்? எதற்கு?

ஷேர் மார்க்கெட்டில் அடிக்கடி டீ-மேட் ஷேர், டீ-மேட் அக்கவுண்ட் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அப்படி என்றால் என்னவென்று பல பேருக்குப் புரிவதில்லை. கேட்கவும் கூச்சமாக இருக்கும். என்னய்யா? இலட்சங்களில் டிரேடிங் செய்கிறீர்? டீ-மேட் தெரியாதா என்று கேட்டு விட்டால் அசிங்கமாகப் போகுமே என்று பொத்தாம் பொதுவாக தலையாட்டி விட்டுப் போவார்கள். ஷேர் வாங்கினோமா, விற்றோமா? இலாபமோ நஷ்டமோ வந்ததா? புலம்பி விட்டு வீட்டுக்குப் போனோமா என்றே இருப்பார்கள் பலர். ஆனால் இது ரொம்ப சிம்பிள் விஷயம். புரிந்து கொள்வதும் சுலபம் தான். ஒரு சிம்பிள் உதாரணத்தோடு பார்த்தால் இன்னும் தெளிவாகப் புரியும்.



மெட்டீரியல் என்றால் பொருள். டீ-மெட்டீரியல் என்றால் அந்தப் பொருளை இல்லாமல் ஆக்குவது. உங்களிடம் பணம் இருந்தால் எங்கே கொண்டு போய் வைப்பீர்கள். கொஞ்சமாக இருந்தால் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் கையில் இருந்தால் பாக்கெட்டில் வைத்துக்கொண்டா திரிய முடியும். பேங்கில் போட்டு வைப்பீர்கள் அல்லவா? அதற்கு என்ன அத்தாட்சி? வங்கிக் கணக்குப் புத்தகம். அதையும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திரிய முடியாது. பணம் பரிவர்த்தனை செய்ய என்ன வழி? அதற்குத்தான் செக் புத்தகம் கொடுத்தார்கள். சரி. ஓக்கே! ஆனால் அவசரமாக அகால நேரத்தில் பணம் தேவைப்பட்டால்? என்ன வழி? அதற்கும் ரொம்ப நாள் யோசித்து டெபிட் கம் ஏடிஎம் கார்டு கொண்டு வந்தார்கள். அதாவது, பொருளாக / மெட்டீரியலாக, அதாவது நாணயங்களாக இருந்த பணத்தை டீ-மெட்டீரியலாக ஆக்கினார்கள். இப்போது உங்களிடம் இருப்பவை வெறும் எண்களே!

இன்னோரு விஷயம். ஏடிஎம் கார்டு மூலம் நம் காசை, நம் கைக்காசை மட்டும் தான் செலவு செய்ய முடியும். நூறு இருநூறு, அல்லது அதற்கு மேலே, சேர்த்து செலவு செய்ய வேண்டுமென்றால்? அப்போ கடன் அட்டை ஒன்று உருவாக்கினால் நன்றாக இருக்குமல்லவா? ....க்கினார்கள். இந்தா வைத்துக்கொள் என்று கொடுத்தார்கள். எவ்ளோ வேணா செலவு செய் என்றார்கள். முப்பது நாளோ ஐம்பது நாளோ கழித்து கட்டு. போதும். (கட்ட முடியவில்லையா? அப்படி வா வழிக்கு. அதுதான் வேணும் எனக்கு என்று வட்டிக்குட்டியை பெற்றுப்போடுகின்றது நாம் செய்த கடன்) இன்னும் ஒன்றே ஒன்று தான் பாக்கி. கைரேகையை வைத்தே ஏ.டி.எம் மில் பணம் எடுக்கவோ, பணம் செலவு செய்யவோ வசதி வந்தால் நன்றாக இருக்கும்.. ஃபோர்ஜரி (ஏமாற்றம்) நடக்க வாய்ப்புண்டு என்றால் ரெட்டினா ஸ்கேன் (கண் பாப்பா) வசதி கொண்டு வரப் பாருங்களேன். இன்னும் வேலை சுலபமாகிப் போகுமே..

சரி. அதை விடுங்கள். பண விஷயத்துக்கு வருவோம். அதாவது நான் சொல்ல வந்தது என்னவென்றால் நாம் உபயோகப் படுத்தும் ரூபாய் நோட்டுக்களே கிட்டத்தட்ட டீ-மெட்டீரியல் தான். ஆதி காலத்தில் பொருளுக்குப் பொருள், அதாவது உப்பு, புளி, பருப்பு, புளியாங்கொட்டை போன்றவை பணமாக செயல்பட்டு பரிமாற்றம் செய்யப் பட்டன. நீண்ட நாள் கழித்து ஷெர்ஷா சூரி காலத்தில் தான் நாணயங்கள் என்று ஒரு வடிவத்தை உருவாக்கி அவை அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டன. ஆரம்பத்தில் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் நாணயங்களை உபயோகித்தவர்கள் நாளாக நாளாக இவ்வளவு எடையாக இருக்கிறதே இதைத் தூக்கித் திரிய முடியாது என்று புலம்ப ஆரம்பித்தார்கள். ஆக வேறு என்ன செய்யலாம்?

இங்கே தான் நமக்கு உதவினான் நம் பக்கத்து வீட்டு சைனாக்காரன். பேப்பர் / காகிதம் என்ற ஒன்றை உருவாக்கிக் காண்பித்தான் அவன். நம்மாட்களும் நாமும் ஏன் அதை உபயோகித்துப் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தார்கள். பணம் காகிதத்தில் அச்சிடப்பட்டது. காகிதமா? காகிதத்தில் அச்சடித்தால் அது பணம் தான் என்று என்ன ருசு? மக்கள் பயந்தார்கள். மக்கள் பயத்தைப் போக்க அவற்றில் ஒரு ஒழுங்கு முறை ஏற்படுத்தப் பட்டது. மேலும் மேலும் ரூபாய் நோட்டுக்கள் மேம்படுத்தப் பட்டன. மக்களிடையே பிரபலப் படுத்தப் பட்டன.

அதை விடப் பெரிய பிரச்சினை... காகிதத்தில் அச்சடித்தால் யார் பொறுப்பேற்பது? நீங்களோ நானோ கோடி வீட்டு காமேஸ்வரனோ பொறுப்பேற்க முடியுமா? அதற்கு ஒரு ஆள் வேண்டாமா? யார்? கவர்னர் என்று முடிவானது. எந்த ஊரு கவர்னர்? உங்க ஊரா? எங்க ஊரா? பணத்தைக் கையாள்கிற பெரிய தலை யாரு? ரிஸர்வ் பேங்க் தானே. அப்போ அதோட கவர்னரை போடச் சொல்லு.. என்று முடிவாகியது. உங்கள் பாக்கெட்டில் இருந்து ஒரு நூறு ரூபாயை உருவிப் பாருங்கள். அதில் "இந்தக் காகிதத்தை வைத்திருப்பருக்கு நூறு ரூபாய் மதிப்புள்ள பொருளைத்தர நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று கவர்னர் கையெழுத்துப் போட்டிருப்பார். ஆக நாம் வைத்திருப்பது நூறு ரூபாய் இல்லை. நூறு ரூபாய் மதிப்புள்ள நோட்டு, வெறும் பேப்பர். இதுதான் டீ-மெட்டீரியல். சுருக்கமாக டீ-மேட்.

அதே கான்செப்ட் தான் இங்கு ஷேர் மார்க்கெட்டிலும். பொருளாக / மெட்டீரியலாக, அதாவது பேப்பர் பத்திரங்களாக பரிவர்த்தனை செய்யப் பட்டுக்கொண்டிருந்த ஷேர் டாக்குமெண்டுகளை டீ-மெட்டீரியலாக அதாவது பேப்பர் இல்லாமல் எலக்ட்ரானிக் முறையில் நம்பர் சிஸ்டத்துக்கு மாற்றினார்கள். NSE (தேசிய பங்குச் சந்தை) இதற்கு பெரும் பங்களித்தது. இம்முறையில் ஏற்பட்ட வெற்றி மற்றும் தெளிவுத்தன்மை (transperency) காரணமாக வேறு வழியின்றி BSE யும் பின் தொடர வேண்டியதாயிற்று. பங்கு பத்திரங்கள் மூலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த மோசடிகள் குறைக்கப் பட்டு டூப்ளிகேட் பிரச்சினைகளுக்கு முழுதாக ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது.

இப்போது ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் கம்பெனியின் பேப்பர் பத்திரங்களை எங்கும் தூக்கிச் சுமக்க வேண்டாம். அவற்றை எலக்ட்ரானிக்கில் மாற்றி நம்பராக உங்களிடம் சொல்லி விடுவார்கள். அந்த நம்பரை நினைவு வைத்திருந்தால் போதும். இந்தியாவில் எங்கு போனாலும் அதைச்சொல்லி உங்கள் ஹோல்டிங் (கையிருப்பு)கை பார்த்துக்கொள்ளலாம். திருடு போகவோ, தொலைந்து போகவோ, எரிந்து போகவோ, எலி கடிக்கவோ வாய்ப்பில்லை. என்ன ஒன்று? அவற்றை விற்று பணமாக்க வேண்டுமென்றால் அது உங்கள் எண்தான் என்பதற்கான சான்று தர வேண்டும். (அது ஏற்கனவே உங்களிடம் கொடுக்கப் பட்டிருக்கும்) பின்னே? உங்கள் நம்பரைச்சொல்லி வேறு யாராவது விற்று விட்டால்? அதற்குத்தான் இந்த ஏற்பாடு.

டீ-மேட் கணக்கு துவங்குவது எப்படி?

ரொம்ப சிம்பிள். பதிவு பெற்ற ஏதேனும் ஒரு புரோக்கரிடம் செல்லுங்கள். இன்றைய தினம் எல்லா பெரிய நிறுவனங்களும் புரோக்கிங் நிறுவனங்கள் துவங்கி நடத்தி வருகின்றன. ரிலையன்ஸ், பிர்லா முதல் ஏபிசி பிரைவேட் லிமிடெட் வரை பல நூறு நிறுவனங்கள். எல்லா ஊரிலும் இன்று பல நிறுவனங்களின் கிளைகள் இருக்கின்றன. சந்தோஷமாகச் செய்து தருவார்கள். அதுதானே அவர்கள் வேலை. அவர்கள் கேட்கும் சில ஆவணங்கள் மட்டும் தர வேண்டியிருக்கும். பான் கார்டு கட்டாயம் தேவை. இருப்பிடத்தை நிரூபிக்க இருப்பிடச் சான்று. உங்கள் முகத்தை அவர்கள் நினைவு வைத்துக்கொள்ள இரு புகைப்படங்கள். பணப்பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்கு கண்டிப்பாக வேண்டுமே. அதன் சான்று. பணம் கொடுக்க செக் லீஃப். அவ்வளவுதான்.

கூடுதலாக மார்க்கெட் ரிஸ்க்(சந்தை அபாயம்)கை விளக்கும் பத்திரங்கள் புத்தகத்தில் பிரிண்ட் அடிக்கப் பட்டிருக்கும். (முடிந்தால் படித்துப் பார்த்து விட்டு) கையெழுத்துப் போட வேண்டும். சுமாராக இருபது, இருபத்தைந்து (புரோக்கரைப் பொறுத்து) கையெழுத்துக்கள் போட வேண்டியிருக்கும். மாட்டுக்கு ஒரு கையெழுத்தா? எத்தன..............? விட்டா மடுவுக்கு ஒண்ணு கேப்பீங்க போலருக்கு? என்று வடிவேல் புலம்புவது போல புலம்ப வேண்டியிருந்தாலும் வேறு வழயில்லை. கையெழுத்துப் போட முடியாது என்று சொல்லி வேறு புரோக்கரிடம் போனால் அவரும் ஒரு கட்டு டாக்குமெண்டுகளை நீட்டுவார். ஒன்றிரண்டு க்ளாஸ் (முக்கியமான வரிகள்) மாறியிருக்கும், அவ்வளவுதான்.

ஆக பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி வைக்க டீ-மேட் கணக்கு தேவை என்று புரிந்து கொண்டீர்களா? டீ-மேட் அக்கவுண்ட் என்பது ஒரு பெட்டி போல, லாக்கர் போல. ஷேர்களை வாங்கி அவற்றில் டெபாஸிட் செய்து வைக்கலாம். விற்க வேண்டுமென்றால் எடுத்து விற்றுக்கொள்ளலாம். அந்த அக்கவுண்டை உங்களுக்கு வழங்கும் நிறுவனங்களை டெபாஸிட்டரி என்பார்கள். இந்தியாவில் NSDL, CDSL என்று இரு டெபாஸிட்டரிகள் உள்ளன. இவற்றிற்கு கிளைகள் கிடையாது. ஆகவே DP - Depository Participant எனத் தன்னிடம் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் (புரோக்கர்களும் உண்டு) மூலம் இந்த வசதியை வழங்குவார்கள். எப்படி உங்களுக்கு விருப்பப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்குகிறீர்களோ அது மாதிரி இவை இரண்டில் எவற்றில் வேண்டுமானாலும் கணக்கு துவங்கிக் கொள்ளலாம். பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. நீங்கள் சந்தித்த புரோக்கரிடம் அந்த வசதி உள்ளதா என்று மட்டும் பார்த்துக்கொள்ளவும்.

ஆனால் டீ-மேட் அக்கவுண்டில் டிரேடிங் (பரிவர்த்தனை) செய்ய இயலாது. அப்படி என்றால்? குழம்பாதீர்கள். இதுவும் சிம்பிள் தான். அதே புரோக்கரிடம் ஒரு (பரிவர்த்தனை) டிரேடிங் அக்கவுண்டும் ஆரம்பிக்க வேண்டும். இந்த டிரேடிங் அக்கவுண்ட் மூலம் NSE, BSE என்ற இரண்டு சந்தைகளிலும் ஷேர் பரிவர்த்தனை செய்ய முடியும. டீ-மேட் அக்கவுண்டும் டிரேடிங் அக்கவுண்டும் அக்கா தங்கை (உடன்பிறவா சகோதரிகள்) போல. இரண்டும் இருந்தால் தான் ஷேர் பரிவர்த்தனை செய்ய முடியும். வாங்கும் போது டிரேடிங் அக்கவுண்ட் மூலம் வாங்கி டீ-மேட்டில் அக்கவுண்டில் வைத்துக் கொள்கிறீர்கள். விற்கையில் டீ-மேட்டில் அக்கவுண்டில் இருந்து எடுத்து டிரேடிங் அக்கவுண்ட் மூலம் விற்கிறீர்கள்.

-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------