ஞாயிறு, 12 ஜனவரி, 2014

ஏன் அஜீத் ஏன்?

கருந்தேளின் ஃபேஸ்புக் பக்கத்தில் வீரம் படம் பற்றிய ஒரு ஸ்டேட்டஸ் மெஸேஜை பார்த்தவுடன் அதற்கு நான் போட்ட கமெண்ட் இது. பெரியதாக வந்து விட்டதால் ஒரு போஸ்ட் ஆக போட்டு விட்டேன்.

கருந்தேள் ராஜேஷ் எழுதியதின் சாராம்சம் இது

(அஜீத்துக்கு மற்றுமொரு வெள்ளைமுடித் திரைப்படம்.
இந்தப்படம், ஆயிரத்தி தொளாயிரத்தி எழுபதுகளில் ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கவேண்டியது. இத்தனை வருடங்களாக கதையை விவாதித்து முன்னேற்றியிருக்கிறார்கள் போல.
ஒரு அடிப்படை மசாலா படத்துக்குத் தேவையான தக்கினியூண்டு கதை கூட படத்தில் முற்றிலுமாக இல்லை.
இந்தக் ‘கதையை’ அஜீத்திடம் எப்படி விவரித்திருப்பார்கள் என்பது கடைசிவரை புரிபடாத மர்மம்.
அஜீத்தை வைத்து எக்கச்சக்கமாக விளையாடலாம். பாவம் அஜீத். இவ்வளவு அப்பாவியாக இருக்கிறார். சிவாவுக்கு பிரியாணி செய்து பறிமாறியதாக எதிலேயோ படித்தேன்)




கீழே உள்ளது என்னுடைய பின்னூட்டம்.

இயக்கம் சிறுத்தை சிவா என்ற பெயரை பட அறிவிப்பின் போது பார்த்தபோதே நான் என் நண்பர் ஒருவரிடம் சொன்னேன் இந்தப் படம் ஃபிளாப் அல்லது செம மொக்கை கதையாக இருக்கும் என்று. ஏனென்றால் சிறுத்தை என்பது ரீமேக் படம். ரீமேக்-குக்காக வேறு மொழிப்படத்தை சீன் மாறாமல் எடுக்கும் ஒரு இயக்குனர் தன் அடுத்த படத்தை படு மொக்கையாகத் தான் இயக்குவார். பிரபுதேவா ஓர் உதாரணம். அவர் இயக்கிய "போக்கிரி" (தெலுங்கு ரீமேக்) ஹிட்டை பார்த்து விட்டு வில்லு பார்த்தவர்கள் எல்லாம் நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பார்கள். அவர் இயக்கிய சிரஞ்சீவியின் ஹிட் படமான சங்கர் தாதா ஜிந்தாபாத் கூட ரீமேக்கே. அப்புறம் வந்த எங்கேயும் காதல், வெடி ஆகிய படங்கள் எவ்ளோ பெரிய பல்புகளை ரசிகனுக்கு கொடுத்தன?

அஜீத்தின் ரசனை வேறு மாதிரி போலும். ஒரு ரசிகன் என்ற முறையில் அஜீத்துக்கு பிடிக்கும் படங்கள் நம்மைப் போன்றவர்களுக்குப்பிடிப்பதில்லை. அஜீத் ஆர்மி சோல்ஜராக நடித்த "உன்னைக்கொடு என்னைத் தருவேன்" படம் முடிந்தவுடன் படம் சூப்பர் என்று சொல்லி அதன் இயக்குனருக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் என்று ஒரு துணுக்குச் செய்தி வந்தது. ஆனால் படம் ரிலீஸாகி அட்டர் ஃபிளாப்.

குங்குமம் புத்தகத்தில் அஜீத் எழுதிய தொடர் ஒன்றில் ஆஹா, ஓஹோ என்று (உதவி ஆசிரியர்கள் மூலம்) பில்டப் கொடுக்கப்பட்ட ரெட் படத்தின் இயக்கம் பற்றிய கட்டுரைகளைப்படித்து விட்டு படத்திற்குப் போனால் செத்தீர்கள். அதன் இயக்குனர் சிங்கம்புலி இன்றைக்கு என்ன செய்கிறார் என்று எல்லாருக்கும் தெரியும். சிங்கம் புலி கதை எழுதிய உன்னைத் தேடி படம் ஹிட் ஆனால் நாம் சேர்ந்து படம் செய்வோம் என்று வாக்கு கொடுத்து அஜீத் ஏமாந்து போன கதை அது.

ஒரு இயக்குனரின் முதல் பட ஹிட்டை நம்பி அடுத்த படத்தை கொடுத்து அஜீத் ஏமாந்ததில் பில்லா டூ வும் ஒன்று. "உன்னைப்போல் ஒருவன்" ஹிட் படத்தை நம்பி சக்ரி டோலேட்டி-யை (அவரை எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் பப்ளிமாஸாக சின்ன வீடு படத்தில் பாக்யராஜ் காட்டியதில் ஏதேனும் குறியீடு இருக்குமோ?) பில்லா டூ இயக்கக் கொடுத்தார் அஜீத். என்னவாயிற்று? அதில் டைட்டில்ஸின் பின்னணியில் சுருக்கமாக வரும் இலங்கை பின்னணியிலான பில்லாவின் முன்கதையும், காமிக்ஸ் ஸ்டைலில் வரும் கேங் கேங் கேங்ஸ்டர் பாடலும் மட்டும் தான் தேறும். "உன்னைப்போல் ஒருவன்" படமே ஹிந்தி "எ வெட்னஸ்டே"-வின் ரீமேக். மேலும் அது லொக்கேஷன் முதல், டயலாக், ஸ்கிரீன்ப்ளே, மேக்கப் வரை கமல் என்ற ஒரு மிகப் பெரிய ஆளுமையால் பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட ரீமேக். அதில் சக்ரியின் பங்கு என்ன? வெறும் கால்ஷீட் அரேன்ஜ்மெண்ட் தான்.

இதேபோல் அஜீத் ஏமாந்த இன்னோரு பப்படம் "பரமசிவன்". சந்திரமுகியின் படா ஹிட்டுக்குப்பிறகு பி.வாசுவை நம்பி அஜீத் ஏற்ற படம். பட்டாஸ் ஹிட்டான "சந்திரமுகி" மலையாள "மணிசித்ரதாழு" வின் ரீமேக் என்று எல்லாருக்கும் தெரியும். மேலும் பி.வாசு-வின் மேஜிக்கெல்லாம் பத்து இருபது வருடங்களுக்கு முந்தைய ஆட்களிடம் தான் ஒர்க் அவுட் ஆகும். லவ் பேர்ட்ஸூக்குப் பிறகு அவர் இயக்கிய எல்லா படங்களுமே இந்தத் தலைமுறையால் நிராகரிக்கப்பட்ட ஃபிளாப்புகளே.. சின்னதம்பி, வால்டர் வெற்றிவேல் எல்லாம் போன தலைமுறை.

இது போக தனக்குப் பிடித்ததாக அஜீத் சொல்லி ரசிகர்கள் நிராகரித்த படங்கள் வரிசை மிகப்பெரியது. ஏகன், அசல், திருப்பதி, ஜனா, மகா, ஆழ்வார், ஜி, ஆஞ்சநேயா, ராஜா என எல்லா ஃபிளாப்புகளையும் தாண்டி இன்னமும் அஜீத் நிற்கிறார் என்றால் அவரிடம் என்னமோ இருக்கிறது.


பின் குறிப்பு - "மகா எப்போ வந்தது?" என்று அடுத்த கமெண்டில் கணேசன் அன்பு கேட்டிருந்தார். நான் "ஸாரி, மகா படம் டிராப் ஆகிவிட்டது. மகா பட துவக்க விழாவின் போது எழுதப்பட்ட ஒரு ரசிகர் மன்ற போர்டு பல வருடங்களாக எங்கள் வீட்டருகில் இருந்ததை பார்த்திருந்ததால் ஒரு ஃப்ளோவில் எழுதி விட்டேன்"

புதன், 8 ஜனவரி, 2014

பீட்ஸா - 3


சுற்றி ஃபேமிலிக்கள் இருக்கும் இடத்தில் தங்கியிருக்கும் பேச்சுலர்கள் பாடு கொஞ்சம் கஷ்டம் தான்.

வைஸ் வெர்சா-வாக சுற்றிலும் பேச்சுலர்கள் இருக்கும் இடத்தில் ஃபேமிலிக்கள் பாடும் கஷ்டம் தான். பெரிய பெரிய கம்பெனிகள், ஜூவல்லரிகளின் பணியாளர்கள் நிறைய பேர் தங்கியிருக்கும் இடங்களில் ஃபேமிலிக்கள் பாடுதான் கஷ்டம். அட்டகாசம் செய்வான்கள்.

எங்க வீட்டுக் காம்பவுண்டிலும் சுமார் ஒன்பது பத்து வீடுகள். அதில் ஒரு வீடு மட்டும் பேச்சுலருக்கு. மற்றதெல்லாம் குடும்பிகள், இப்போதைய நிலையில் என்னையும் குடும்பியாகச் சேர்த்து. நான் இங்கே வரும்போது பேச்சுலர்தான். எனக்கு முந்தைய வரலாற்றில் ஒரு சின்னப்பையன் இஸ்கோல் போவதற்காக பேச்சுலராக வந்தவன் நாளடைவில் மெள்ள மெள்ள அப்பா அம்மாவையும் கூட்டி வந்து விட்டான். அவன் ஒழுங்காக இருந்தமையால் அதற்குப்பிறகு பேச்சுலராக வந்து வீடு கேட்ட எனக்கு வீடு கிடைத்தது. ஒரே கண்டிஷன் "அசைவம் சமைக்கக் கூடாது" நான் ஓக்கே சொல்லிவிட்டேன். சமைக்கத் தானே கூடாது? வாங்கி வந்து சாப்பிடலாமுல்ல?

நானும் ரொம்பவே ஒழுங்கான பையனாக இருந்ததால் (வந்த உடனே கதவை சாத்தி விடுவேன். பூட்டிய கதவுக்குள் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், உனக்கென்ன போச்சு?) அடுத்து வரப்போகும் பேச்சுலர் பசங்களுக்கும் பிரச்சினையில்லாத ஒரு ராஜபாட்டை கம்பளம் போட்டு விரித்து வைக்கப்பட்டது. அவ்வப்போது நெட்டில் டிக்கெட் புக்கிங் செய்து தருவது, ஈ.பி பில் ஆன்லைன் பேமெண்ட் கட்டுவது, குமுதம் விகடனில் இருந்து நமக்கு அடிக்கடி வரும் மணியார்டர், மேனேஜர் என்று வீட்டு வாசலில் மொபைல் எண்ணுடன் நான் ஒட்டிய பேப்பர் எல்லாமாகச் சேர்ந்து நமக்கு சினேகப் புன்னகைகளை வாங்கித்தரவே செய்தது.

இரு சம்பவங்களை மட்டும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. இங்கே நான் என்னையும் ஒரு பேச்சுலராக நினைத்துக்கொண்டு எழுதுகிறேன். நான் இன்னும் என்னை குடும்பஸ்தனாக முழுமையாக ஸ்வீகரித்துக் கொள்ளவில்லை. அவ்வப்போது கதறியழுது ஊரைக்கூட்டும் என் ஜூனியர் தான் நான் குடும்பஸ்தன் என கொஞ்சம் நினைவு"படுத்திக்" கொண்டிருக்கிறான்.

பேச்சுலர்களின் முதல் பிரச்சினை புவ்வா. அதைப்பற்றிய எனது ஒரு கட்டுரையை ஒரு மெட்ராஸ் பேச்சுலரின் (சாப்பாட்டு) டைரி என்ற பதிவில் படித்துக்கொள்ளலாம்.

ஒருநாள் பீட்ஸா வாங்கி வரலாம் எனப் போனபோது சிப்பந்தியார் "மீடியம் மேஜிக் பேன் பீ்ட்ஸா வாங்கினால் இன்னோரு சாதா மீடியம் பீட்ஸா ஃப்ரீ சார்" என்றார். மேஜிக் பேன் பீட்ஸா. க்ரஸ்ட் நன்றாக மெத்து மெத்தென்று இருக்கும். சரி, ஒன்று வாங்குவோம் என்று ஆசையில் ஃப்ரீ-யையும் சேர்த்து வாங்கி வந்து விட்டேன். நானும் தங்கமணியும் வீட்டுக்குள்ளேயே கடைபரப்பி பீட்ஸாவை காலி செய்ய ஆசைப்பட்டோம். மூன்று பேருக்காகத்தான் வாங்கியது. ஆனால் மாமியார் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

போச்சு. ஒரு பீட்ஸா அப்படியே மிச்சம். மிஞ்சிமிஞ்சிப்போனால் ரெண்டு சிலைஸ் சாப்பிடலாம். மீதி நான்கு? சரி தானம் கொடுத்து விடலாம் என்றால் அங்கே தான் வந்தது ட்விஸ்ட். ஏதோ சுண்டல், பொங்கல் என்றால் கூச்சமின்றி அக்கம் பக்கத்து கதவை தட்டி கொடுத்து விடலாம். பீட்ஸா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், செரிமானம் ஆகாத பெரியவர்கள், லேசாக முறைத்துக்கொள்ளும் மேல் வீட்டு அங்கிள், கோயில் பூசாரி, பீட்ஸா பிடித்து தின்னத் தெரியாத நான்கு, ஆறு வயதுக் குழந்தைகள், லேட் ஷிஃப்டில் நடு ராத்திரி வரும் சொட்டை அங்கிள் என யாருக்கும் பீட்ஸா தானம் செய்ய முடியாதே?

"ஆடம்பரப்பொருளை இலவசமாகக் கூட கொடுப்பது கஷ்டமே" என்று எழுத்தாளர் என்.சொக்கன் ஒருமுறை டெல்லியில் இருந்து வந்து கொண்டிருந்த "வடக்கு வாசல்" என்ற அச்சிதழில் ஒரு கதையில் எழுதியிருந்தார். (இப்போது வடக்கு வாசல் மின்னிதழாக மாறி விட்டது) அது எனக்கு இப்போது புரிந்தது. என்னடா இது சோதனை. தூக்கிக் குப்பையில் போடவும் மனமில்லை. சுமார் 200 ஓவா அந்தப் பீட்ஸா.

அப்போது தான் சோத்துக்கு சிங்கி அடிக்கிற பேச்சுலர் குரூப்பு ஒண்ணு இருக்கே என்று நினைவு வந்ததும் போய்க் கேட்டேன். அந்த பேச்சுலர்கள் அறையில் நான்கைந்து பேர் இருக்கிறார்கள்.

ஓசூரில் பவர்கட் அதிகம். அப்போது பவர்கட். கதவைத்தட்டினால் திறக்கவே பயந்து ஒருவருக்கொருவர் நீ போ, நீ போ என்று பத்து நிமிடம் கழித்து வந்துதான் கேட்டார்கள். சொன்னேன். நாலு சிலைஸ் இருக்குப்பா, எத்தனை பேர் இருக்கீங்க? என்றதற்கு இன்னைக்கு நாலு பேர்தான் என்று பதில் வந்தது. ரொம்ப யோசித்து வாங்கிக் கொண்டார்கள். இருளில் யார் வந்து வாங்கினார்கள் என்று கூட நினைவில்லை. அந்த இருட்டில் பீட்ஸா வேண்டுமா என்றதும் அவர்களுக்கு பீட்ஸா படத்தின் ஷாட் கூட நினைவுக்கு வந்திருக்கலாம்.

ஆனாலும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டார்கள். லேப்டாப்பில் ஏதோ படம் போல. பார்த்துக்கொண்டே சாப்பிட்டு விட்டார்கள். இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருந்திருந்தால் கோக் கூட கொஞ்சம் ஊற்றிக்கொடுத்திருக்கலாம்.

அவர்களின் அடுத்த பிரச்சினை பிரைவஸி.
சுதந்திரமாக, சந்தோஷமாக இஷ்டப்படி திரிய முடியாதல்லவா?

ஒரு நாள் மாலை. அவர்களில் எவனோ ஒருவன் மொபைலில் வெகு ஜூவாராஸ்யமாக பேசிக் கொண்டிருந்தான். அந்தப்பக்கம் அவன் ஆள் போல.. வராண்டா முழுக்க நடந்தபடி. மேலே சட்டை, பனியன் எதுவும் இல்லை. ஒரே ஒரு ஷார்ட்ஸ் (கூட இல்லை, அதைவிட குட்டியாக ஒரு) டவுசர். ராமராஜன் செண்பகத்திடம் பால் வாங்க, ஐ மீன் கறக்கப்போகும் போது போட்டிருத்த டைட் ஜட்டி போன்ற டவுசர். மற்றவர்கள் அந்தக் கவர்ச்சியை ஒரு மாதிரி பார்த்தபடி நகர்ந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவனுக்கும் பேச்சு மும்முரத்தில் எதுவும் தோன்றவில்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது? ஸாரி, இங்கே அது தப்பான உதாரணம். ஐ மீன் யார் அவனிடம் மாணிக் பாட்ஷா மாதிரி "உள்ளே போ" என்று கர்ஜிப்பது?

என் பேச்சுலர் பருவம் நினைவுக்கு வந்தது. சென்னையில் என் ரூமில் இருந்த இரண்டு தடி எருமைகள் ஜாக்கியில் சைடு கட் வருமே அந்த மாதிரி ஜட்டியை மட்டும் போட்டுக்கொண்டு மற்றதையெல்லாம் உருவி எறிந்து விட்டு நைட்டு முழுக்க கஷ்க நாத்தத்துடன் சுற்றுவார்கள். அந்தக் கொடுமைக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. அதனால் "போச்சு, எல்லாம் போச்சு. குடும்பஸ்தர்கள் இருக்குற இடத்துல பேச்சுலர்களை அலவ் பண்ணலாமா? பண்ணினா இப்படித்தான் எல்லா அசிங்கமும் நடக்கும்" என்றெல்லாம் மாமா-க்கள் போல புலம்ப எனக்குத் தோன்றவில்லை.

ஸோ, சிம்பிளாக அவனிடம் கேட்டேன். "தம்பி, உள்ள போறியா? போட்டோ எடுத்து பேஸ்புக்-ல போடவா?" என்றேன். பயபுள்ள, அதுக்கப்புறம் சட்டையில்லாமல் வெளியே வருவதே இல்லை. அந்த நாலு ஸ்லைஸில் ஒன்றாக இருக்கக் கூடும்..