புதன், 29 டிசம்பர், 2021

அந்த ரெண்டு அப்பாவிகள்

 எப்பயாவது நம்ம பயிற்சி வகுப்புகள்ல சில அப்பாவிகள் மாட்டுவதுண்டு. பொதுவா அது ஒரு ஆம்பள வாத்தியா இருக்கும். ஒட்டு மொத்த பெண் படைக் கும்பலுக்குள்ள தனியா சிக்கி, அந்த அல்லி ராஜ்யத்துல நாம அடிக்கிற ஜோக்குகளுக்கு கலாய்ச்சி கமெண்ட் அடிக்கிற டீச்சர்களிடம் எப்படி ரியாக்ட் செய்றதுன்னு தெரியாது அப்பாவியா முழிச்சிட்டு அமைதியா உக்காந்துட்டு இருப்பாரு. பாக்கவே பரிதாபமா இருக்கும்.

(பை தி வே, இங்க எல்லாத்துறையிலயும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுங்க ன்னு போராடிகிட்டு இருக்கும் போது, பெரிசா நம்மளுடைய கவனத்தைக் கவராம ஒரு மிகப்பெரிய துறை முழுக்க முழுக்க (சுமார் 95%) பெண்கள் மட்டுமே ஆட்சி புரியும் படி இயங்கிகிட்டு இருக்கு. அதுதான் தனியார் பள்ளித்துறை. பெரும்பாலான பள்ளிகள்ல டிரைவர்கள் மட்டும் தான் ஆண்களா இருப்பாங்க. பேருக்கு ஒன்றிரண்டு வாத்தியார்கள், ஆபீஸ் ஊழியர்கள் ஓரிருவர். அவ்வளவு தான்.)
அடுத்து..
எங்கம்மா "எள்ளு எண்ணெய்க்கி காயுது. எலிப்புழுக்கை எதுக்குக் காயுது"ம்பாங்க. அதுபோல சில அரை டிக்கெட், கால் டிக்கெட்டுகளும் மாட்டும். பயிற்சி வகுப்பு நடக்கும் அன்று பள்ளி முழுக்க விடுமுறைன்றதால டீச்சர்களின் பிள்ளைகள் நான்கைந்து மட்டும் ஒன்று சேர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கும். சில விளையாடப் பிடிக்காத "அம்மா கோண்டு" சின்ன டிக்கெட்டுகள் அம்மா கூடவே வகுப்பில் அமர்ந்து நான் சொல்றதையெல்லாம் கேட்டுகிட்டு "நாங்க ஏண்டா நடுராத்திரி சுடுகாட்டுக்குப் போகணும்?" ன்ற ரியாக்ஷனோட என்னையே பார்த்துட்டு இருக்கும்.
அப்படி ரெண்டு போரை வட்ட வளையத்துல வெளிச்சம் போட்டுருக்கேன். பாருங்க.