புதன், 29 டிசம்பர், 2021

அந்த ரெண்டு அப்பாவிகள்

 எப்பயாவது நம்ம பயிற்சி வகுப்புகள்ல சில அப்பாவிகள் மாட்டுவதுண்டு. பொதுவா அது ஒரு ஆம்பள வாத்தியா இருக்கும். ஒட்டு மொத்த பெண் படைக் கும்பலுக்குள்ள தனியா சிக்கி, அந்த அல்லி ராஜ்யத்துல நாம அடிக்கிற ஜோக்குகளுக்கு கலாய்ச்சி கமெண்ட் அடிக்கிற டீச்சர்களிடம் எப்படி ரியாக்ட் செய்றதுன்னு தெரியாது அப்பாவியா முழிச்சிட்டு அமைதியா உக்காந்துட்டு இருப்பாரு. பாக்கவே பரிதாபமா இருக்கும்.

(பை தி வே, இங்க எல்லாத்துறையிலயும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுங்க ன்னு போராடிகிட்டு இருக்கும் போது, பெரிசா நம்மளுடைய கவனத்தைக் கவராம ஒரு மிகப்பெரிய துறை முழுக்க முழுக்க (சுமார் 95%) பெண்கள் மட்டுமே ஆட்சி புரியும் படி இயங்கிகிட்டு இருக்கு. அதுதான் தனியார் பள்ளித்துறை. பெரும்பாலான பள்ளிகள்ல டிரைவர்கள் மட்டும் தான் ஆண்களா இருப்பாங்க. பேருக்கு ஒன்றிரண்டு வாத்தியார்கள், ஆபீஸ் ஊழியர்கள் ஓரிருவர். அவ்வளவு தான்.)
அடுத்து..
எங்கம்மா "எள்ளு எண்ணெய்க்கி காயுது. எலிப்புழுக்கை எதுக்குக் காயுது"ம்பாங்க. அதுபோல சில அரை டிக்கெட், கால் டிக்கெட்டுகளும் மாட்டும். பயிற்சி வகுப்பு நடக்கும் அன்று பள்ளி முழுக்க விடுமுறைன்றதால டீச்சர்களின் பிள்ளைகள் நான்கைந்து மட்டும் ஒன்று சேர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கும். சில விளையாடப் பிடிக்காத "அம்மா கோண்டு" சின்ன டிக்கெட்டுகள் அம்மா கூடவே வகுப்பில் அமர்ந்து நான் சொல்றதையெல்லாம் கேட்டுகிட்டு "நாங்க ஏண்டா நடுராத்திரி சுடுகாட்டுக்குப் போகணும்?" ன்ற ரியாக்ஷனோட என்னையே பார்த்துட்டு இருக்கும்.
அப்படி ரெண்டு போரை வட்ட வளையத்துல வெளிச்சம் போட்டுருக்கேன். பாருங்க.



புதன், 24 நவம்பர், 2021

Bynge Tamizh ன் "தக்காளி பற்றி ஒரு ஹைக்கூ கவிதை சொல்லுங்களேன்" போட்டி

Bynge Tamizh ஃபேஸ்புக்கில் இரண்டு நாட்கள் முன்பு "தக்காளி பற்றி ஒரு ஹைக்கூ கவிதை சொல்லுங்களேன்!" ன்னு ஒரு போட்டி அறிவிச்சிருந்தாங்க. அதில் நானும் ஒரு சில கவிதைகள் போட்டு விட்டேன். ஹைக்கூ இலக்கணம் எனக்கு அவ்வளவா தெரியாது. முயற்சி பண்ணுவோம்னு போட்டது. இது கவிதையா? ன்னு மட்டும் கேட்டுறாதீங்க. 

---------------------------------------------------- 

இன்றாயிருந்திருந்தால்

50 கேஜி தக்காளி 

என மதுமிதாவை 

வர்ணித்திருப்பான் 

விசுவநாதன்

---------------------------------------------------- 

அடிபட்டால் இனி

தக்காளிச் சட்னி கூட

வரவாய்ப்பில்லை

ஏழைக்கு

---------------------------------------------------- 

நீர்மத்தங்கம்

பெட்ரோல்.போல்

இனி நீ

சிவப்புத் தங்கம்

---------------------------------------------------- 

வறுமையின் நிறம்

சிவப்பு

விலையேறிப்போனது

இந்த சிவப்பு

---------------------------------------------------- 

தினமும் ஏறும்

தினமும் இறங்கும்

பெட்ரோலல்ல

தக்காளி.

---------------------------------------------------- 

ஏழைகளின் ஆப்பிள்

இன்று ஆனது

ஏழைகளுக்கும் ஆப்பிள்

---------------------------------------------------- 

நேரம் கெட்டால் ரோட்டிலே..

நேரம் வந்தால் உச்சியிலே

தக்காளி

---------------------------------------------------- 

வீட்டிலே ரேஷன்

ஆனது தக்காளி.

நாட்டிலே தருவரா

ரேஷனில் தக்காளி?

---------------------------------------------------- 

வியாழன், 18 நவம்பர், 2021

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை

 வீட்டில் பெரியவர்கள், வயதானவர்கள் யாரும் இல்லாததாலோ என்னவோ, இந்த சனிக்கிழமை எண்ணெய் தேய்க்குறது, 6 மணிக்கு மேல வீடு கூட்டக் கூடாது, அமாவாசை தர்ப்பணம், காக்கா சோறு, சாமி பாட்டு போடுறது, மந்திரம் சொல்றது, சாமிக்கு நேர்ந்துக்குறது, காசு முடிஞ்சு வைக்கிறது, வாரம் தவறாமல் கோவில் போவது, சாம்பிராணி போடுறது, கண்ணு படுறது, கண் திருஷ்டி, ஞாயிற்றுக்கிழமை சுத்திப்போடுறது, ராகுகாலம், எமகண்டம் பார்க்கறது, தாயத்து கட்டுறது, அகால நேரத்தில் வெளியே போகக்கூடாதது, மசூதில போய் பாடம் போடுறது, போன்ற எந்த டிரெடிஷனல் விஷயங்களும், பழம் நம்பிக்கைகளும், வீட்டில் விவாதிக்கப்படுவதும் இல்லை. கடைப்பிடிக்கப் படுவதும் இல்லை. 

இவை எல்லாம் சரியா, தவறா என்று விவாதிக்காமல், அதைப் பற்றியே யோசிக்காமல் இரண்டு, படித்த, இந்தத் தலைமுறையினர் (சரி...... கொஞ்சம் வருஷம் முந்தைய தலைமுறை) லாஜிக் பார்த்து கேஷூவலாக நடத்தும் குடும்பம் எங்களுடையது. அதிலும் இந்த கண் திருஷ்டி விஷயமெல்லாம் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தோம்.

ஆனால் சில சமயம், சில பேர், சில விஷ வித்துக்கள் ஒரு விழாவில் எங்காவது சந்தித்தால், "நாம நல்லா இருக்கோம்" என்று சொல்லி விடக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள். பழைய ஸ்டைலில் "எங்கங்க? கையி வலிக்கிது, காலு கொடையுது, கடன் இருக்குது, கஷ்டப் படுறோம்" என்று சொல்லக் கேட்டால் உள்ளூர சந்தோஷப்படுகிறார்கள். "பாவம் கஷ்டப்படுறான்" என்று இன்னும் நாலு பேரிடம் போய்ச் சொல்வதிலும் அவர்களுக்கு ஒரு ஆனந்தம். "நல்லா இருக்கேன்" என்றால் போதும் (பவர் ஆஃப் பாஸிடிவ் திங்க்கிங் தியரிப்படி எவ்வளவுக்கெவ்வளவு நாம் நல்லா இருக்கோம்னு நினைக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நம் வாழ்க்கை நன்றாக அமையும்) அவ்வளவு பொறாமை பொங்கி வழிய, ஒரு பெருமூச்சை இழுத்து விடுகிறார்கள் (சோலி முடிஞ்சுது) "என்னமோப்பா? அந்த லோன் முடிச்சிட்டியா? இந்த லோன் முடிச்சிட்டியா? அங்க வருமானம் எவ்ளோ வருது? சம்பளம் எவ்ளோ வருது?" என்று ஒரு என்கொயரி. (இதையே கேஷூவலாகவும், அன்புடனும் கேட்பவர்கள் வேறு கேட்டகிரி, அவர்களைப் பற்றி இப்போது பேச்சில்லை). 

சமீபத்தில் இப்படி ஒரு சம்பவம். ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி ஒரு அம்மணி நல்லா பொங்கிட்டுப் போயிருச்சி. கடந்த 15 நாளாக அது சம்பந்தப் பட்ட விஷயத்தில் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறேன். ஃபினான்ஷியலாகவும், வேறு சில பிரச்சினைகளுமாக சரியான குடைச்சலாக இருக்கிறது. எப்படா அந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வருவோம் என்று இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது தான் இந்தக் கண் திருஷ்டி போன்ற நெகடிவ் விஷயங்களெல்லாம் இருக்குதப்பா, இனிமே இப்படிப்பட்ட ஆட்கள் கண்ணுல படாம இருந்துக்கணும்னு தோணுது. 

மறுபடியும் முதல் பாராவைப் படிங்க. இனிமே, அப்பாம்மா இருந்தப்ப என்னென்ன பழக்கங்கள் செய்வாங்களோ அதையெல்லாம் ஒன்னொன்னா கொண்டு வந்துரலாமானு தோணுது. "முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை".

19 நவம்பர் 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

வெள்ளி, 12 நவம்பர், 2021

சூரரைப் போற்று - கின்டிலில் கோபிநாத்

சூரரைப் போற்று படம் ஒரு பக்கம்.

சில மாதங்கள் முன்பே, இந்தப் படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் - உடைய (திரைப்பட சுவாரஸ்யத்திற்காகபுனைவுகள் சேர்க்கப்பட்ட) வாழ்க்கை வரலாறு என்று கேள்விப்பட்டதும் அவருடைய "வானமே எல்லை" புத்தகத்தைத் தரவிறக்கிப் படித்தேன். கின்டிலில் கிடைக்கிறது. Simply fly - A deccan Odyssey என்ற பெயரில் அவர் எழுதிய ஆங்கில மூலத்தின் தமிழாக்கம்.
"அன்ப்ரெடிக்டட் லைஃப்" என்று சொல்வார்களே அதற்கு பக்கா உதாரணம் இவருடைய கதை. எந்த ஒரு தொழிலதிபரும் என் நிறுவனத்திற்காக பெரும் ரிஸ்க் எடுத்தேன் என்றெல்லாம் சொல்வார்கள். அந்த ரிஸ்க்கையெல்லாம் தூக்கி ரஸ்க்கு மாதிரி சாப்பிட்டவர் இவர். ஒரே வாழ்க்கையில் ஒரு மிலிட்டரி மேனாக ஒரு வாழ்க்கை, ஒரு விவசாயியாக ஒரு வாழ்க்கை, ஒரு விமான நிறுவன அதிபராக ஒரு வாழ்க்கை எனக் கிட்டத்தட்ட நான்கு விதமான வாழ்க்கைகளை வாழ்ந்திருக்கிறார்.
படத்தை விடுங்கள். வணிகக் காரணங்களுக்காக நிறைய காம்ப்ரமைஸ் செய்து தான் எடுத்திருப்பார்கள். அல்லது, அட் லீஸ்ட் நேரம் காரணமாக நிறைய விஷயங்கள் குறைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், விருப்பமும் நேரமும் இருந்தால் கேப்டன் கோபிநாத்தின் புத்தகத்தைத் தரவிறக்கிப் படியுங்கள். அதுவும் ஒரு தொழில் முனைவோராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.


உங்கள் மனம் சோர்வு அடையும் போது "என்னைப்பாருப்பா" என்று உங்கள் மனக்கண்ணில் கோபிநாத் வந்து நிற்பார்.
பிற்சேர்க்கை - இப் பதிவை ஒரு மூவி குரூப்பில் போட்டதும், வதவதவென்று "பி.டி.எஃப் அனுப்புங்க", "பி.டி.எஃப் அனுப்புங்க", என்று கமெண்ட்களில் ஏகப்பட்ட கோரிக்கைகள். அதில் சிலர் "பி.டி.எஃப் அப்லோட் செய்யப்பட்ட வெப் சைட்டுகள் உள்ள ஏதோ லிங்குகளையும் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இது போக எனக்கு இன்பாக்ஸ் கோரிக்கைகளும் வந்தன. என்னிடம் பி.டி.எஃப் இல்லை. கின்டில் மூலம் படித்தேன் என்றதும் ஏமாற்றம் அவர்களுக்கு.

12 நவம்பர் 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

சூரரைப் போற்று - விட்டுப்போன ஹெலிகாப்டர் சர்வீஸ்

மு.கு - ஸ்பாய்லர் இருக்கலாம்.

படத்தில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் கேப்டன் கோபிநாத் வாழ்க்கையில் நடந்தவையே. விமான விபத்து, மல்லையா பேரம் பேசுதல் உட்பட. திரைப்படத்தின் வடிவத்திற்காக சில புது கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, மிலிட்டரி கதை, விவசாயி கதைகள் தேவைக்கேற்ப சுருக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் நிறுவனம் கதையில் வரவே இல்லை.
நிஜத்தில் மல்லையா பேரம் பேசுவது ஏர் டெக்கான் வெற்றி பெற்ற பிறகு. படத்தில் முன்பே பேசுவது போல காட்டப் படுகிறது. அதே போல் நிஜத்தில் மல்லையா பேரம் பேசி கம்பெனியை வாங்கியே விடுவார். இப்போது அதன் பெயர் "சிம்ப்ளிஃபை டெக்கான்" கிங்ஃபிஷர் பறவையின் லோகோவுடன்.
க்ளைமாக்ஸில் பெயர் போடும்போது காட்டப்படும் - ஃபிளைட்டில் பறக்கும் எளியோர்களின் சென்டிமெண்ட் கதைகள் ஏர் டெக்கானுக்கு மட்டும் நடந்தவை அல்ல. ஏர் டெக்கானுக்கும் முன்பே, கேப்டன் கோபிநாத் துவங்கிய "டெக்கான் ஏவியேஷன்" எனும் ஹெலிகாப்டர் சர்வீஸில் நடந்த உண்மைக் கதைகள்.
உண்மையில் சொல்லப்போனால் அதுதான் "ஏர் டெக்கான்" எனும் குறைந்த விலை ஏர் சர்வீஸை ஆரம்பிக்க கோபிநாத்துக்கு உந்துதலாக இருந்தது.

12 நவம்பர் 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

வெள்ளி, 29 அக்டோபர், 2021

புனீத் ராஜ்குமாரும், இன்ஷூரன்ஸூம்

புனீத் ராஜ்குமாருக்கெல்லாம் சாகுற வயசா? உடம்பை பயங்கர ஃபிட்டா வச்சிகிட்டு, துள்ளிக்குதிச்சு, ஆடிப்பாடி, பறந்து பறந்து அடிச்சுப் புடிச்சு கமர்ஷியல் படம் பண்ணிட்டிருந்த மனுசன். ஹார்ட் அட்டாக்காம். ஜஸ்ட் 46 வயசு. 

அவர் குடும்பத்துக்கு மனசளவில் இது ஒரு பெரிய்ய இழப்பா இருந்தாலும், திரைத்துறையில் கோலோச்சிய ஒரு மிகப்பெரிய நடிகரின் மகன் என்பதாலும், இவரே ஒரு பிரபல கமர்ஷியல் நடிகர் என்பதாலும் ஃபினான்ஷியலா அவங்களுக்குப் பிரச்சினை (நம்மள மாதிரி) இருக்காது. 



அதுவே நம்மளை மாதிரி, அவர் ஒரு சாதாரண நிறுவனத்தில் சம்பளத்திற்கு வேலைக்குப் போயிட்டிருந்த ஒருத்தரா இருந்திருந்தா? அல்லது ஒற்றை ஆளா நின்னு ஒரு பிஸினஸ் பண்ற ஆளா இருந்திருந்தா? இன்னிக்கு அவர் குடும்பத்தின் நிலை என்ன? இதைத்தாண்டி வரும் வரை இன்னும் சில வருஷங்களுக்கு அந்தக் குடும்பம் என்ன செய்யும்?

சரி, பச்சையாவே கேட்குறேன். இது நம்மள்ல ஒருத்தருக்கு நடந்திருந்தா? ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு குடும்பத்துக்கு வருமானம் குடுக்கும் அளவுக்கு ஒரு ஏற்பாடு செஞ்சிருக்கீங்களா? (குறிப்பா - "கொஞ்சமா பணம் கட்டி", இழப்பு ஏற்பட்டா "மட்டும்" ரிட்டன் வர்ற மாதிரியான டெர்ம் இன்ஷூரன்ஸ்). 

நீங்க இன்ஷூரன்ஸ் எடுத்துட்டீங்களா?

பி.கு - நான் இன்ஷூரன்ஸ் ஏஜண்ட் இல்லை

விகடன்ல உள்ள ஆள் இருக்கா?

10 செகண்ட் கதைகள் - ஆனந்த விகடன்

ஒவ்வொரு முறையும் என் கதையோ, ஜோக்கோ பத்திரிகைகளில் வெளியாகும் போது பலரும் பாராட்டுவார்கள். சுஜாதா சொன்னது போல (அதுக்காக என்னை சுஜாதாவாகவோ, என்னிடம் பேசுபவர்களை சாதாரணமாகவோ சத்தியமாக நான் நினைக்கவில்லை, நானெல்லாம் சும்மா கொசு) பாராட்டுகளுடன் சேர்த்து "நான் கூட எழுதுவேண்டா, எழுதுவேண்ணே, எழுதுவேன் சார், எழுதுவேன் பாஸ், எழுதுவேன் தம்பி, எழுதுவேன் கார்த்திக்" என்ற பதில்களும் சேர்த்தே கிடைக்கும். இது பரவாயில்லை.
"ஆனா எனக்கு நேரமில்லை" (அப்ப, நாம சும்மா இருக்கோமோ)
"மொக்கை கதையெல்லாம் போடறாங்க" (நம்மளுதைத் தான் சொல்றாங்களோ?) "நம்ம கதையை போட மாட்டேங்கிறாங்க,
"உள்ள ஆள் இருக்கணும் சார் அப்பதான் போடுவாங்க" (ஆமாம், எங்க மச்சான் அங்கதான் எடிட்டரா இருக்காரு, போங்கய்யா யோவ்) என்றெல்லாம் சொல்வது தான் டூ மச்.

(இதே மாதிரி ஒரு போட்டோ கிராபரைப் Deva Rajan பார்த்தால் "நான் கூட நல்லா போட்டோ எடுப்பேன் என்பது)

விடுங்க சார், நீங்க வேற விஷயத்துல பெரியாளா இருக்கலாம். பேச்சுலயோ, பிஸினஸ்லயோ? நீங்க கதை எழுதலைங்கறது இங்க மேட்டரே இல்லை. பிச்சை எடுப்பவனைப் பார்த்து "நான் கூட பிச்சை நல்லா எடுப்பேன், ப்ச், நேரம் இல்லை அதான்" என்று சொல்லிப் பாருங்களேன்.
(சத்தியமாக உண்மையாகவே தன் படைப்பு வர வேண்டும் என்று எழுதுபவர்களை மேலே குறிப்பிடவில்லை, அவர்களைக் கிண்டல் செய்யும் பதிவல்ல இது. அது வேற குரூப். அவர்களைப் பாராட்டவே செய்கிறேன்)
நிஜமாக எழுதுபவர்களுக்காக ஒரு விஷயம் - நான் சொல்லும் பதில் "தொடர்ந்து அனுப்பி கிட்டே இருந்தா உங்களதும் வரும்" என்பது தான். ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களைப் போல நூற்றுக்கணக்கான பேர் கதைகளை எழுதி அனுப்பிக்கொண்டேடேடேடே இருக்கிறார்கள். "நானும் ரெண்டு அனுப்பியிருக்கேன் சார், போடவே இல்லை" என்றார் சேலத்தில் நான் சந்தித்த ஒரு கல்லூரிப் பெண். "நான் ரெண்டு கதை அனுப்பினேன். இந்த வாரம் வந்திருக்கான்னு பார்க்கிறேன்" என்று உறுதியுடன் சொன்னார் ஒரு நண்பர் (ஆனால் வரவில்லை). "4 கதை அனுப்பியிருக்கேன். ஆனா போடவே மாட்டேங்கிறாங்க. ஃபெட் அப் ஆகி "எழுதறதையே" நிறுத்திட்டேன்" என்றார் இன்னொருத்தர். முடியலைண்ணே. சத்தியமா முடியலை...
ஒரு சின்ன கணக்கு. விகடனுக்கு ஐம்பது பேர் (இதுவே கம்மிதான்) எழுதுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். லீடிங் எழுத்தாளர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு ஐந்து கதைகளாவது (10 செகண்ட் கதை) அனுப்புகிறார்களாம். ஸோ, ஒரு நாளைக்கு குறைந்த பட்சம், 200 கதைகள் வரும். வாரத்துக்கு 1400 கதைகள். 1400 ல் இருந்து 10 கதைகளை எடுக்க வேண்டும் என்றால் (நான் அறிந்த வரை, அவர்கள் ஸ்கிப் செய்வதில்லை) அவர்கள் எவ்வளவு கஷ்டப் பட வேண்டும்? மேலும் இந்த மூட்டை மூட்டையான கதைகளில் உங்கள் கதை நான்காவது வார்த்தையிலேயே அவர்களைக் கவர வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கதை தான். நாம் எழுதியது நமக்கு நன்றாகத்தான் தோன்றும். ஆனால் எடிட்டர் தான் வாசகர் மனநிலை அறிந்து, எது நன்றாக ரீச் ஆகும் என்று படித்துத் தேர்ந்தெடுப்பார். நீங்க ஒரு போட்டிக்கு நடுவரா இருந்தா எப்படித் திணறுவீங்க, யோசிங்களேன்.
இந்த வார விகடனில் வெளியான இரண்டு கதைகளுடன் சேர்த்து இதுவரை எனது 5 கதைகள் வெளியாகி உள்ளன. (ஐந்தே ஐந்து தான், இதுக்கே இவ்ளோ பெரிய பதிவு போடறியா? என்று சொல்கிறீர்களா? ஒரே ஒரு கதை கூட வராத ஒருத்தன், என்னை நேத்து, ரோமிங்கில், 15 நிமிடம் வறுத்தான், எனக்கு எவ்ளோ கோபம் வரும்?) ஆனால் நான் இதுவரை எழுதி அனுப்பியது எத்தனை தெரியுமா? 104 கதைகள். 104 ல் 5 கதைகள் அவர்களுக்குப் பிடித்துப் போய் வெளியாகியுள்ளன. அப்போ மீதி? அவ்ளோ தான் (பாட்ஷா, விஜயகுமார் ஸ்டைலில் படிக்கவும்)
இன்னோரு பொதுவான சோகம் என்னவென்றால், இந்த வாரம் நம்ம படைப்பு ஒன்று வந்து விட்டால் அவற்றுடன் அனுப்பிய மற்ற எல்லாம் ரிஜக்டட் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஸோ, 104 எழுதிப் பிரயோஜனமில்லை. எல்லாம் போச்சு, "எல்லாக் கோட்டையும், அழி. நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்" கதைதான். எனவே, நான் மீண்டும் நாளையில் இருந்து புதிதாக அனுப்பத் துவங்க வேண்டும்.
கே.லக்ஷ்மணன், ரிஷிவந்தியா பாஸ்கர், கே.ஆனந்தன், பர்வீன் யூனுஸ், சகிதா முருகன், இந்தியா வாசன், அஜித், மினிமீன்ஸ் என்று விகடனில் அடிக்கடி வரும் பெயர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இவர்களைப் போன்றோர் எழுதித்தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரது உறவினர்களும் விகடனில் வேலை பார்க்கிறார்களா?
ஸோ, இப்போ நான் அனுப்பிய மத்த கதையெல்லாம் இன்வேலிட். இனிமே புதுசா எழுதணும்.


புதன், 27 அக்டோபர், 2021

ஸ்கூல் பீசுக்குப் பணம் சேர்க்க ஒரு ஐடியா

நம்ம ஃபைனான்ஸ் லேர்னிங் குரூப்பில் எழுதியது. 

நான் என் ரெண்டு பசங்க பேர்லயும் தனித்தனியா ஐசிஐசிஐ யங் ஸ்டார் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் ஆரம்பிச்சு, என் சேவிங்க்ஸ் அக்கவுண்டில் இருந்து வாரா வாரம் தானா அவங்க அக்கவுண்டுக்கு பணம் போற மாதிரி ஃபண்ட் ட்ரான்ஸ்பர் செட் பண்ணிட்டேன். திங்கள் பெரியவனுக்கு, வியாழன் சின்னவனுக்கு. தானா பணம் போயிடும். 

எப்பனா பெருசா தேவைப்பட்டா அவங்க அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிப்பாத்தா 7000, 8000 கெடக்கும். மிக மிக முக்கியமான செலவு இருந்தா மட்டும் எடுத்து செலவு பண்ணுவேன்.

அதுலயும் பெரியவனுக்கு இசுக்கூல் பீஸ் எவ்வளவுன்னு பார்த்து அதை 52 ஆல வகுத்து அந்தப் பணம் என் அக்கவுண்டில் இருந்து Auto debit ஆகுற மாதிரி செட் பண்ணியிருக்கேன். மார்ச், ஏப்ரல்ல அவன் அக்கவுண்டுல இருந்து எடுத்து அவனுக்கே இசுக்கூல் பீ'ஸ் கட்டிடுவேன். 

ஆயிரம் செலவுகள் ஆகுற அக்கவுண்டுல இப்படி தானா போறது பெருசா தெரியாது. (தெரிஞ்சா மட்டும்? பீசு கட்டித்தானே ஆகணும்) ரெண்டு வருஷமா இப்படித்தான் ஓடுது. 

ஐடியா நல்லாருக்குன்னு தோணுனா யூஸ் பண்ணிக்குங்க. 

குறிப்பு - இவ்விடம் அனைத்து விதமான தீபாவளிப் பரிசுகளும் ஏற்றுக் கொள்ளப்படும். அந்த ஆயிர ரூவாக் கட்டு உட்பட.

கிரிப்டோ கரன்ஸி பற்றித் தெரிஞ்சுக்கணுமா?

எங்க ஃபினான்ஸ் குரூப் மக்களுக்காக எழுதியது. அதை அப்படியே இங்க தர்றேன்.

குரூப்ல கிரிப்டோ கரன்ஸி பற்றிய பதிவுகள் வரவர ரொம்ப அதிகமா இருக்கு. குழு அன்பர்கள் அவை பற்றிய பதிவுகளைக் குறைக்கவும். கண்டிப்பாக டிஸ்க்ளெய்மர் தனித்தனி கிரிப்டோ பதிவுக்கும் போட வேண்டும்.
இன்னிக்கு கிரிப்டோக்கள் ஏறும்போதும், கொஞ்சம் சம்பாதிக்கும் போதும் எல்லாருக்கும் நல்லா இருக்கும். ஆனா அதில் 1000 பிரச்சினைகள் உண்டு. ஒரு காலத்தில் நான் காலேஜ் படிக்கும் போது MLM மிகப்பெரிய வரவேற்பைக் கொண்டிருந்தது. இப்போ மாதிரி MLM ல பொருள் விற்பனைலாம் இல்லை. வெறுமனே நீங்க பணம் கட்டி ஆள் சேர்த்தா போதும். அதற்குக் கீழே ஆள் சேர சேர உங்களுக்குப் பணம் வந்துட்டே இருக்கும். கிட்டத்தட்ட இன்னிக்கு கிரிப்டோ அப்படித்தான் இருக்கு.
அப்போ MLM ல ஈடுபட்டவங்க, அதில் சம்பாரிச்சவங்க இப்போ கிரிப்டோல ஈடுபட்டுள்ளவங்க, சம்பாதிக்கிறவங்க க்ரிப்டோவுக்கு ஆதரவா எப்படியெல்லாம் பேசுறாங்களோ அதே பேட்டர்ன்ல தான் அப்ப பேசுவாங்க. ஆனா அடிப்படையே இல்லாத ஒரு பிஸினஸ்ல எப்படி நிக்க முடியும்? சதுரங்க வேட்டைன்னு ஒரு படம் வரும் அளவுக்கு இலட்சக்கணக்கான பேர் MLM உட்பட பலவிதமான பிஸினஸில் கோடிக்கணக்குல இழந்தாங்க.
இன்னிக்கு கிரிப்டோ அப்படித்தான் விளம்பரம் செய்யப்படுது. க்ரிப்டோ கரன்ஸி என்ற ஒரு பொது கரன்ஸி உண்டு தான். ஆனா அது பி.ஹெச்.டி பண்ற அளவுக்கான ஒரு டாபிக். அதைப் பற்றி எதுவுமே சொல்லாம மொட்டையா "பத்தாயிரம் போடு, ஒரு லட்சம் ஆகிடும்னு" மண்டபம் புக் பண்ணி அறியாமைல இருக்குற மக்களை இழுக்குறாங்க.
இது எப்படின்னா "ரெண்டு லட்சரூவா குடு, நீதான் இந்தப்படத்து ஹீரோ, ரெண்டே வருஷத்துல நீதான் ரஜினி" ன்னு சொல்ற மாதிரி இருக்கு. எல்லாரும் ரஜினி ஆகிட முடியுமா? என்பது தான் கேள்வி. கோடம்பாக்கம் தெருவுல இன்னிக்கு போனாக்கூட வாழ்க்கையை இழந்த 500 ரஜினிக்களை நீங்க புடிக்கலாம்.
சரி மறுபடி க்ரிப்டோவுக்கு வருவோம். அதை ஆதரிக்கும் நீங்க, ஒருவேளை அதில்
1. ஆராய்ச்சி பண்ணி இன்வெஸ்ட் (இதுவே சரியான வார்த்தையா?) பண்ணலாம். உங்களுக்கு அதுல கொஞ்சம் அறிவு இருக்கலாம். ஆனா எல்லாருக்கும் இருக்குமா?
2. அல்லது ஒரு 10 % போனா போகுதுன்னு நீங்க இன்வெஸ்ட் பண்ணி வைக்கலாம். ஆனா அது தெரியாம உங்களை நம்புற ஒருத்தர் 100% போடலாம். இது சந்தை - மந்தைக் குணம். காலம் காலமா இருக்குறது.
3. கிரிப்டோ கரன்ஸி எதிர்காலத்தில் அவசியமாக மாற"லாம்". ஆனா எல்லா காயினும் நிக்காது. இன்னிக்கு செல்போன் முக்கியமானதா இருக்கு. ஆனா யுனினார்-லாம் எங்கபோச்சு? வலியது மட்டுமே வாழும். அதுபோல சில காயின்லாம் கண்டிப்பா நக்கிட்டுப் போகும். அதுல இன்வெஸ்ட் பண்ணவன் கதி?
4. கிரிப்டோ கரன்ஸி ஒரேடியா காணாமலே கூடப் போகலாம். தேக்குமர இன்வெஸ்ட்மெண்ட்லாம் என்னாச்சு? கலைமகள் சபா மண்டபம் புக் பண்ணி காசு வாங்கி கூட்டா நிலம் வாங்குறேன்னு சொன்னான். எங்க போனான்? கட்ன காசு என்னாச்சு?
லவ் பண்ணும் போது உடம்புல ஜிவ்வுன்னு சொகமா இருக்கும். மத்தவங்க எதாவது சொன்னா அவங்க மேல காண்டாவத்தான் செய்யும். ஆனா அதே பொண்ணை கட்டிகிட்டு பாய்ஸ் ல வர்ற அப்பா மாதிரி பத்து வருஷம் கழிச்சு ஒரு மிடில் கிளாஸ் குடும்பஸ்தனா நிற்கும் போது தான் அதன் கஷ்டம் தெரியும்.
இப்ப பிரச்சினை நீங்க இல்ல. உங்களை நம்பி க்ரிப்டோவுல ஒருத்தன் பணம் போட்டு நட்டமானா? பத்து வருஷம் கழிச்சு அவன் யார்கிட்ட போய்க் கேப்பான்? சில ரியல் உதாரணங்கள் கீழே.
1. எங்கப்பா கலைமகள் சபா திட்டத்துல இருந்தாரு? இப்ப யாரைப் போய் கேட்குறது?
2. எங்க அரிசிக்கடை சித்தப்பா பென்னி ஸ்டாக்குல பணத்தைக் கொட்டினாரு. மூணு நாலு வருஷத்துல எல்லாம் போச்சு. இப்ப யாரைப் போய் கேட்குறது?
3. எங்க மாமா ஒர்த்தர் தேக்கு மர வளர்ப்புத் திட்டத்துல காசு போட்டிருந்தார். இப்ப யாரைப் போய் கேட்குறது?
4. என் நண்பன் ஃபியூச்சர் வர்த்தகத்துல கான்ட்ராக்ட்ல (உதா - 2 இலட்சம் கட்டு, மாசம் 10% எடுத்துத்தருவோம்) பணம் போட்டிருந்தான். கடந்த மார்க்கெட் டவுன்ல மொத்தமா அவனுக காணாமப் போயிட்டானுக. இப்ப யாரைப் போய் கேட்குறது?
5. எங்க பெரியப்பா காளான் சாமி (மண்ணுள்ளிப்பாம்பு மாதிரி, காளான் சாமியை டிபன் பாக்ஸ்ல இருட்ல வச்சி வளக்கணும், ப்ளாக் டீ ஊத்தணும், அது வளர வளர ஐஸ்வர்யம் வருமாம்) மேட்டரை நம்பி இருந்தாரு. அது ஹம்பக்னு தெரிஞ்சதும் இப்ப யாரைப் போய் கேட்குறது?
இது போல பலதையும் பார்த்தவங்க நாங்க. இப்டி எது சொன்னாலும், விடாம க்ரிப்டோ மேல பயங்கர பாஸிடிவா இருக்குறவங்க அமேசான் ப்ரைம்ல The Big Short ஒரு படம் இருக்கு. அதைப் பாருங்க. 2008 சப் ப்ரைம் பிரச்சினை வரும்வரை அதை யாராலயும் நம்ப முடியலை. ஆனா வந்த பிறகு உலகம் முழுக்க கோடிக்கணக்கான பேரைக் கதற அடிச்சது அது.
கமெண்ட்ல வந்து ஆர்க்யூ பண்ணாதீங்க. நாளைக்கு க்ரிப்டோல பிரச்சினை வரும்போது அதை இன்னிக்கு ஆதரிச்ச பலர் சிம்பிளா குரூப்பை விட்டுக் கிளம்பிடுவாங்க. ஆனா அட்மினோ, மாடரேட்டர்களோ உங்களுக்காக மொத்து வாங்க முடியாது. இதுல ஒரு பைசா எங்களுக்கு ஆதாயம் இல்ல. கோபப்படாம யோசிங்க. மீறியும் தொடர் ஆதரவுப் பதிவுகள் வந்தா அவை டிக்லைன் செய்யப்படும். அவ்வளவுதான்.
வன்றி. நமக்கம்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக

"இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக" - ன்னு சொல்ற மாதிரி "இன்னிக்கு என் வாழ்க்கையிலேயே முதன் முறையாக" ஒரு நல்ல காரியத்தைச் செஞ்சேன். கோவை ரோட்டரியும் - கோவை வாசவி க்ளப்பும் இணைந்து நடத்திய முகாம் ஒன்றுக்காக நண்பர் அழைச்சிருந்தார். நமக்கெல்லாம் இதுபோல ஒரு எக்ஸ்டர்னல் புஷ் தேவைப்படுதில்லையா? சந்தோஷமாப் போய் கொடுத்துட்டுவந்தேன்.

இதுக்கு முன்னாடி ரெண்டு - மூணு முறை சந்தர்ப்பம் அமைஞ்சும் "நான் ரத்தம் தரவா" - ன்னு போனப்போ "நீ அண்டர்வெயிட்டு, ச்சீ ஓடிப்போ" ன்னு பத்தி விட்ருக்காங்க. ஆனா இப்போ கொரோனா புண்ணியத்தில் நல்லா உக்காந்து தின்னு தின்னு வெயிட் போட்டு "க்வாலிஃபை" ஆகிட்டேன் போல. போனதுமே என்னை வெயிட் போட்டுப் பாத்து "இந்தக் கோழி தாங்கும், உள்ள கூட்டிட்டுப்போங்க"ன்னுட்டாங்க.
ஒரு பெரிய்ய ஃபார்ம் ஒன்னு கொடுத்து ஃபில்-அப் பண்ணச் சொன்னாங்க. அதுல "நான் என் சொந்த முடிவில தான் ரத்ததானம் பண்றேன்" னு டிஸ்க்ளெய்மர் உட்பட அதுல ஊருல இருக்குற எல்லா வியாதிகளும் பேரும் வரிஸ்ஸையா போட்டு இருந்தது. இதுக்கு முன்னாடி தெரியாத சில வியாதிகள் கூட இருந்தது. அது எல்லாத்தையும் "ஆம் அல்லது இல்லை" ன்னு டிக்கு போடச்சொன்னாங்க. அதுல நான் "ஆம்" போட்ட ஒரே இடம் - "கடந்த நாலு மணி நேரத்துக்குள்ள எதாவது தின்னியா?" வுக்குத் தான்.
நம்ம ரத்தம் எலிஜிபிலா?-ன்னு பார்க்க ஹீமோக்ளோபின் டெஸ்ட் செய்யணுமாம். ஆனா, பொதுவா, நார்மலா இருக்கிற ஆண்களுக்கு டெஸ்ட் எடுக்கத் தேவையில்லைன்னு சொல்ட்டாங்க. எதுக்கும் இருக்கட்டும்னு எடுத்துப் பாருய்யா... ன்னு சொன்னா கடுப்புல அந்த மனுசன் மோதிரம் போடாத என் மோதிர விரலைப் புடிச்சி நறுக்குன்னு ஒரு ஊசியைச் சொருகி ஒரு சொட்டு ரத்தத்தைப் (அதுவும் நல்லா பெரிய சொட்டு) பிழிஞ்சு ஏதோ ஒரு கெமிக்கல் ரொம்பின ஒரு டம்ப்ளர்ல உட்டாரு. அது நல்ல செவப்பா சொய்ன்னு கீழ போச்சு. “எலிஜிபிள் தான், ரத்தம் எடுக்கலாம்”-னு சொல்ட்டாரு. அந்தக் கெமிக்கல் முறை ஏதோ பழைய முறையாம்.
ஆனா பெண்களுக்கு, பிரசவம் அது இதுன்னு பல விதங்களில் ரத்த இழப்பு வாய்ப்பு இருக்கறதால ஹீமோக்ளோபின் டெஸ்ட் கட்டாயமாம். குட்டியா ஒரு டெஸ்ட் மெஷின் இருந்தது. அதுல எந் தங்கமணி உட்பட பல பெண்களுக்கு டெஸ்ட் பாத்தாங்க. ஹீமோக்ளோபின் லெவல் 12.5 பாயிண்ட் இருக்கணுமாம். ஆனா வந்த பெண்கள் மூன்று, நான்கு பேருக்குமே 11 முதல் 11.4 வரைன்னு குறைவாவே இருந்ததால அவங்களை "உன் ரத்தம்லாம் வேணாம், நீ முதல்ல நல்லாத் தின்னு உடம்பைத் தேத்து" ன்னு பத்தி விட்டுட்டாங்க.




நமக்கு அந்தப் பிரச்சினையில்லை. உள்ள போனா, பெட்ல படுக்க வச்சி, கையில் டைட்டா ஒரு கட்டு கட்டி, அப்டியே நாலு தட்டு தட்டி, தனுஷ் கை நாக்குப்பூச்சி மாதிரி என் நாடி நரம்பையெல்லாம் எழுப்பி அதுல நல்லதா ஒன்னைச் சூஸ் பண்ணி, நல்ல கனத்த ஊசி ஒன்னை அழுத்திச் சொருகி அந்த ப்ளட் பாக்கெட்டில் போட்டு விட்டாங்க. கையில ஒரு ஸாஃப்ட் பால் கொடுத்து "அமுக்கு ராசா"ன்னாங்கள்.
அத ஒரு பத்து தபா அமுக்குறதுக்குள்ள, சரசரன்னு ஏழெட்டு நிமிஷத்தில ஃபுல் பாக்கெட் நொம்பிருச்சி. அதை ஒரு மெஷினோட கனெக்ட் செஞ்சிருந்தாங்க. அது வேலை முடிஞ்சதும் சிம்பு மாதிரி "பீப், பீப்" னு கத்திச்சு. ரொம்பின பாக்கெட்டை உத்துப் பார்த்தா அது கருஞ்சிவப்புக் கலர்ல, பார்க்கக் கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. இருந்தாலும் அதை நர்ஸக்கா எடுத்துட்டுப் போகும் போது "குஷி" ஜோதிகாவோட ப்ளட் பாக்கெட்டை க்ளோஸப்ல காட்டி எஸ்.ஜே.சூர்யா பேசுற வாய்ஸ் ஓவர் என் காதுல ரொம்பத் தெளிவாக் கேட்டுது.
ரத்தம் குடுத்து முடிச்சதும் கொஞ்சம் கிர்ருன்னு வந்துது. ஒரு யூனிட் ரத்தத்தை எட்டே நிமிஷத்துல எடுத்தா பின்ன? "அப்படித்தான் இருக்கும், கொஞ்சம் இருங்க"ன்னு அந்த ஆட்டோமேடிக் பெட்-டை தலை-கீழா கால் மேலா திருப்பி வச்சி விட்டார், "இப்ப தலைக்கு ரத்தம் பாயும், 5 நிமிஷத்துல சரியாகிடும்"னு சொன்னாரு. சோலி முடிஞ்சதும் "கொஞ்ச நேரம் போய் உட்காருங்க. நிக்கக்கூடாது, நின்னா மயக்கம் வரும்"ன்னு சொல்லி வெளிய அனுப்பினாரு.
வெளிய வந்ததும் அங்கேயே ரெண்டு டெட்ரா பேக் மேங்கோ ஜூஸ் குடுத்தாய்ங்கள். குடிச்சுப்புட்டுக் கொஞ்ச நேரம் உக்காந்திருந்தேன். கூட வந்தவுங்கள்ல சிலர், போன முறை இவர் சொன்ன அட்வைஸையும் கேட்காம, சூஸையும் குடிக்காம பார்க்கிங்ல போய் தலைசுத்தின கதையையும், அப்டியே கைத்தாங்கலா டீக்கடைக்குப் பொத்துனாப்ல போய் பன்னு வாங்கித் தின்ன கதையையும் சொன்னதைக் கேட்டு "அப்பா" பட நாராயணன் மாதிரி "நமக்கு எதுக்குடா கார்த்திகேயா வம்பு"ன்னு கம்ன்னு அங்கயே உக்காந்துட்டேன்.
மறுபடி அவர்ட்ட போய், "நாங்குடுத்த அதே அளவு ரத்தம் எனக்கு மறுபடி எப்ப ஊறும்?" னு கேட்டேன். "24 மணிநேரத்துல ஊறிடும்"னாரு. அப்போ "நாளான்னிக்கு ரத்தம் குடுக்கச் சொல்லி மறுபடி கூப்டுவாங்களா? ஒருநாள் விட்டு ஒருநாள் ரத்தம் குடுத்தா உடம்பு தாங்குமா?" ன்னு டவுட்டோடவே வெளிய வந்தப்போ, அனுபவசாலி ஒர்த்தர் கூப்ட்டு "பாஸூ, அவங்கெடக்கான், ரத்தத்துக்கு ஈக்வலா லிக்விட் மட்டும் தான் 24 மணிநேரத்துல ஊறும். ஆனா சரியான அளவு ப்ளேட்லெட்ஸ் வளர 3 மாசம் ஆவும்"ன்னாரு. நீங்க மறுபடி 3 - 4 மாசம் கழிச்சித்தான் ரத்தம் கொடுக்க முடியும் னாரு. "அப்பச்சரி, அப்பச்சரி" ன்னு கெளம்பிட்டேன்.
இந்தக் கூத்துக்கு நடுப்புற தங்கமணியும் பசங்களும் நான் ஏதோ உலக சாதனை செஞ்சா மாதிரி உள்ளே வந்து எட்டி எட்டிப் பார்த்துட்டும், போட்டோ எடுத்திட்டும், ஆளுக்கொரு ஜூஸைக்குடிச்சிகிட்டும் இருந்தாங்க. நானும் கக்கூஸ் கண்ணாடியில போய்ப்பார்த்தேன். "எதையோ சாதிச்ச திருப்தி அவன் முகத்துல" ன்னு சந்திரமுகியில சொல்ற மாதிரி தான் இருந்தது மூஞ்சி.
இப்படிக்கி
- ரத்த வழங்கி எசுக்கா

articles - ல் எங்கே a போட? எங்கே an போட?

நண்பர் ஒருவருக்கு ஆங்கில இலக்கணத்தில் வரும் articles - ல் பலத்த சந்தேகம். எந்த இடத்தில் a போட வேண்டும்? எந்த இடத்தில் an போட வேண்டும்? என்னிடம் கேட்டார். சொல்லிக் கொடுத்தேன். (இந்த இடத்தில் நான் ஒரு முன்னாள் ஆங்கில வாத்தி என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்).

இன்றைக்கும் அவர் அனுப்பும் மெயில்களில் பல இடங்களில் அவருக்கு இந்த டவுட்டு வருகிறது. இந்தக் குழப்பம் எல்லோருக்கும் வருவது சகஜம். பெரிய பெரிய ஆட்கள் அனுப்பும் மெயில்களில் கூட articles - ல் தவறு இருக்கிறது. (articles ல் the என்ற வார்த்தையும் உண்டு. ஆனால் பலருக்கும் சந்தேகம் a மற்றும் an - ல் தான். ஆகவே the பற்றி இங்கே பார்க்கப் போவதில்லை).
அவருக்குச் சொன்னது மற்றவர்களுக்கும் உபயோகப்படலாம். அது பலருக்கும் பயனளிக்கும் என்பதால் இங்கே பதிகிறேன். இப்படி பதியச் சொன்னது கூட என் நண்பரின் ஐடியா தான். சரிஓ.கே.. போலாமா?
அடிப்படை தகவல் - ஆங்கிலத்தில் வெறும் 26 எழுத்துக்கள் மட்டுமே. அதை வைத்துத் தான் எல்லா வித்தையும் காட்டுகிறார்கள். vowels எனக் கூறப்படும் a, e, i, o, u என்ற ஐந்தும் உயிர் எழுத்துக்கள். மற்ற 21-ம் consonants எனப்படும் மெய் எழுத்துக்கள். தமிழிலோ மற்ற இந்திய மொழிகளிலோ இருப்பது போல உயிர் மெய் எழுத்துக்கள் (கா, கீ, கூ, கெ, கை) எனும் கூட்டெழுத்துக்கள் கிடையவே கிடையாது.
பிரச்சினையே இங்கே தான். a, e, i, o, u என்ற உயிர் எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைக்கு முன்பு an போடு. consonants - ல் ஆரம்பிக்கும் வார்த்தைகளுக்கு முன்பு a போடு என்று பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். அதன் படி நியாயமாகப் பார்த்தால் u என்பது vowel என்பதால் கீழே வரும் எல்லா வார்த்தைகளுக்கும் முன்பு an தானே போட வேண்டும்?
MLA, umbrella, untold story, university, useful gift, union, uniform (ஒரு எம்.எல்.ஏ, ஒரு குடை, சொல்லப்படாத ஒரு கதை, ஒரு உபயோகமான பரிசு, ஒரு அமைப்பு, ஒரு சீருடை) ஆனால் அப்படி போட முடியாது. ஏன்? சரியான விடைகள் கீழே. (இது போக பல இடங்களில் the வரும். அது அடுத்த ஸ்டெப். இப்போதைக்கு நம் கேள்வி. எங்கே a? எங்கெங்கே an? என்பதே)
சரியான விடைகள் -
a university (யுனிவர்சிட்டி)
a useful gift (யூஸ்ஃபுல் கிஃப்ட்)
a union (யூனியன்)
a uniform (யூனிஃபார்ம்)
an MLA (எம்.எல்.ஏ)
an umbrella (அம்ப்ரெல்லா)
an untold story (அன்டோல்ட் ஸ்டோரி)
எப்படி என்கிறீர்களா? அடைப்புக்குள் உள்ளவை க்ளூக்கள். அதை வைத்து கண்டுபிடிக்கப் பாருங்கள். நினைவு வருகிறதா? எஸ். கரெக்ட். ஒரு வார்த்தை vowel ல் ஆரம்பிக்கிறது என்பதால் மட்டுமே அதற்கு முன் an போட முடியாது. vowel sounds என்று சொல்லியிருப்பார்கள். அதாவது உயிர் எழுத்தின் ஒலியில் அந்த வார்த்தையின் உச்சரிப்பு துவங்க வேண்டும். எழுத்து consonant ஆகக் கூட இருக்கலாம். (MLA வை கவனிக்கவும்) ஒலி தான் முக்கியம்.
விடை காணும் வழி - நாம் தமிழர்கள். ஆகவே நமக்கு இதனை கண்டுபிடிப்பது ரொம்ப சிம்பிள். தமிழ் உயிர் எழுத்துக்கள் உங்கள் எல்லோருக்கும் தெரியும் அல்லவா? (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ). கொடுக்கப்படும் ஆங்கில வார்த்தையை மனதுக்குள் ஒரு முறை படியுங்கள். அதன் ஒலி தமிழ் அ-னா, ஆ-வன்னாவில் துவங்குகிறதா? சிம்பிள். அங்கே an போட்டு விடுங்கள்.
க, ங, ச என்ற 18 மெய்யெழுத்துக்களின் ஒலியிலோ அல்லது கை, கே, கோ போன்ற 216 உயிர் மெய் எழுத்துக்களின் ஒலிகளிலோ அந்த ஆங்கில வார்த்தை துவங்கினால் அதன் முன்பு a தான் வர வேண்டும். அவ்வளவு தான்.
இப்போ ஹோம்வொர்க். கீழ்க்கண்ட வார்த்தைகளுக்கு எந்த "ஆர்ட்டிகில்" போட வேண்டும்?
ordinary man (ஆர்டினரி மேன்)
octopus (ஆக்டோபஸ்)
ancient (ஏன்சியன்ட்)
apple (ஆஏப்பிள்)
x – ray (எக்ஸ் ரே)
hour (ஹவர் அல்ல ஆர் (edited))
european country (யூரோப்பியன் கன்ட்ரி)
one rupee note (ஒன் அல்ல வன்)
ஆனால் ஒரு முக்கிய விஷயம். ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு வார்த்தையின் தவறான பதத்தை சரி என்று நினைத்துக் கொண்டு எத்தனை முறை படித்தாலும் விளங்காது.
டிசுக்கி - மேற்கொண்டு டவுட்டுகளுக்கும், குறை, நிறைகள் பாராட்டவும் இன்பாக்ஸூக்கு வரவும். தவறிருந்தால் கண்டிப்பாய் திருத்திக் கொள்கிறேன்.

24 அக்டோபர் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

செவ்வாய், 19 அக்டோபர், 2021

மாற்றான் பார்த்து விட்டு மனசு மாறிய குடும்பஸ்தர்கள் சங்கம்.

அன்புள்ள கே.வி.ஆனந்த் மற்றும் சுபா அவர்களுக்கு,

எனர்ஜி ட்ரிங்க் பவுடர் வாங்குவது இப்போது எல்லார் வீட்டிலும் கட்டாயம் ஆகிவிட்டது. காம்ப்ளான் சாப்பிட்டால் சீக்கிரம் உயரமாக வளர்கிறார்கள் (என்று ஆராய்ச்சி மூலமாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக அவர்களே கூறுவதால்) ஹார்லிக்ஸ் குடிப்பதால் ஷார்ப்பாக வளர்கிறார்கள் என்பதால், நாங்களும் எங்கள் வீட்டுப்பசங்கள் சீக்கிரம் உயரமாக வேண்டும், ஷார்ப்பாக வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர்களுக்கு எனர்ஜி ட்ரிங்க் வாங்கிக் கொடுக்கிறோம்.



மாற்றான் பார்த்த பிறகு அவற்றில் நீங்கள் குறிப்பிட்ட படி ஏதேனும் ஜெனடிக், ஸ்டீராய்டு கசமுசாக்கள் இருக்குமோ என்று பயம் வந்து விட்டது.

ஆகவே இனிமேல் எங்க வீட்டுப் பசங்களுக்கு மன்னா ஹெல்த் மிக்ஸ், வீட்டிலேயே தயார் செய்த கம்மங்கூழ், கேப்பை கூழ், பக்கத்து தெரு மாவு மெசினில் அரைத்த தானிய மாவுக்கஞ்சி போன்ற அயிட்டங்களையே கொடுப்பதாக குடும்பத்தோடு உட்கார்ந்து கும்மியடித்து யோசித்து முடிவு செய்துள்ளோம்.

இனிமேல் காம்ப்ளான் (அ) ஹார்லிக்ஸ் வாங்குவதாக இல்லை. அதனால் மிச்சமாகும் மாத பட்ஜெட்டுகளை உங்களது அடுத்தடுத்த படங்கள் பார்த்து அறிவை வளர்த்துக்கொள்வதற்கு தேவையான தியேட்டர் செலவுகளுக்கு ஒதுக்கி விட்டோம்.

உங்கள் சேவைக்கு நன்றி. இதற்காக காம்ப்ளான் மற்றும் ஹார்லிக்ஸ் கம்பேனிகள் வருத்தப்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல..

இப்படிக்கு,
மாற்றான் பார்த்து விட்டு மனசு மாறிய குடும்பஸ்தர்கள் சங்கம்.
20 அக்டோபர் 2012 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

வெள்ளி, 15 அக்டோபர், 2021

ஜாக்கிரதை - மார்க்கெட் ஏறும் போதும் - ஜாக்கிரதை

நம்ம இன்வெஸ்ட்மெண்ட் குரூப்புக்காக எழுதியது. குரூப் லிங்க் இதோ

கடந்த ஒன்றரை வருஷமா ஷேர் மார்க்கெட்டுக்கு உள்ள வந்தவங்க, இலாபம் பார்த்தவங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் அறிவுறுத்துறேன். இது புல் (காளை) மார்க்கெட். எல்லாத்துறைக்கும் பிரகாசமான எதிர்காலம் இருக்குற மாதிரியே தெரியுது.

போர்ட்ஃபோலியோ முழுக்க பச்சையா இருக்குது. எந்த ஷேர் வாங்குனாலும் ஏறுது. நாம வாங்கின ஷேரெல்லாம் ஏறிடுச்சு, அதுனால நாம பெரிய இன்வெஸ்ட்மெண்ட் புலி ஆகிட முடியாது. இந்த மார்க்கெட் எங்க போய் முடியும்னு தெரியாது. எப்ப திரும்பும்னு தெரியாது.

மார்க்கெட்ல ஆவரேஜா மூன்று வருடத்துக்கு ஒருமுறை ஒரு fall இருக்கும்னு சொல்வாங்க. ஒரு பெரிய fall 10 வருடத்துக்கு ஒருமுறை வரும்னு சொல்வாங்க. 2008 ல லேமென் ப்ரதர்ஸால லெஃப்ட்ல ஒரு மரண அடி வாங்கின மார்க்கெட் மறுபடி 2020 ல கொரோனாவால ரைட்ல ஒரு வாங்கு வாங்குச்சு.

அதுபோக நடுவுல அப்பப்ப சின்னச்சின்ன இறக்கங்களும் இருந்துச்சு. எனவே, 10 வருஷமா, 20 வருஷமா ட்ரேடிங்கோ, இன்வெஸ்ட்மெண்டோ பண்றவங்க கிட்ட அட்வைஸ் கேளுங்க. நீங்களா கேக்காட்டியும் அவங்களா சொல்றதையாச்சும் கேளுங்க. உஷாரா இருங்க.

ஷேர் ப்ரோக்கிங் நிறுவனத்துல வேலை செஞ்சப்போ 2008 பேர் (கரடி) மார்க்கெட்ல சத்யம் ஷேர்ல, அதுவும் ஃப்யூச்சர்ல மரண அடி வாங்கி ரத்தக் கண்ணீர் விட்டவனை ரெண்டடி தூரத்துல இருந்து பார்த்தவன் நானு. 420 ரூபாய்ல இருந்து ரெண்டுமுணு நாள்ல 6 ரூபாயில போய் நின்னது அது.

RMS னு சொல்லப்படுற ரிஸ்க் மேனேஜ்மெண்ட் சர்வீஸ் டிபார்ட்மெண்ட் உள் பூட்டு போட்டுட்டு எவனையும் உள்ள விடாம மார்ஜின் கட்டாதவங்களோட நூத்துக்கணக்கான பொஸிஷன்ஸை செல்லிங் அடிச்சித் தள்ளுனதைப் பார்த்தவன். அதுல செத்தவன் சில பேரு. பணத்தை இழந்ததால "வெற்றிக்கொடி கட்டு சார்லி" மாதிரி பைத்தியம் புடிச்சவன் பல பேரு.

MCX புரோக்கிங் ஆஃபீஸ் ல வேலை செய்யும் போது இதுக்கு நேர்மாறா வெள்ளி கன்னா பின்னான்னு விலை ஏறிப்போக, ஆனா "இறங்கும்னு நினைச்சு" ஏகப்பட்ட லாட் செல்லிங் அடிச்சு வச்சவங்கள்லாம் வட்டிக்குக் கடன் வாங்கி பொஸிஷன் க்ளோஸ் பண்ண பணம் கட்டுனதையும், அவங்களுக்கு பிராஞ்ச் ஓனர் ஆறுதல் கூட்டம் (ஆறுதல் கூட்டமா அது? இரங்கல் கூட்டம் மாதிரி இருந்தது) நடத்தினதைப் பார்த்தவன்.

அதுக்கு முன்னாடி இதே போல சில இறக்கங்கள்ல மொத்த சொத்தை இழந்தவர்களை கண்ணால பார்த்தவன் (எங்க அரிசிக்கடை சித்தப்பா காமிச்சாரு). ஜாக்கிரதை. ஜாக்கிரதை. ஜாக்கிரதை. இன்னும் ரெண்டரை வருஷத்துல பி.எம் எலக்ஷன் வரும்போது ரத்தக்களறி நடக்க"லாம்".

ஒரு pandemic க்குக்கு மொத்தம் ஏழு வேவ் இருக்குன்னு ஒரு டாக்டர் சொன்னாரு. முதல் மற்றும் இரண்டாவது வேவ் போல மிக அதிமா மறுபடி ஒரு பரவல் வந்தால், மறுபடி ஃபுல் லாக் டவுன் போட்டா உங்க போர்ட்ஃபோலியோ சிவப்பைப் பார்க்கலாம். டச் உட் - இதெல்லாம் நடக்கக் கூடாதுன்னு வேண்டிக்குவோம்.

இப்போதைக்கு மார்க்கெட் உள்ள வந்து, ஆனால் வேற முழு நேர வேலை, தொழில் பார்க்குற எல்லாருக்கும் சில அட்வைஸூகள்.

1. உங்க உபரிப்பணத்தை மட்டும் மார்க்கெட்ல போடுங்க.

2. மார்க்கெட்ல எவ்வளவு போட்டாலும், வந்தாலும், போனாலும், இறங்கினாலும், ஏறினாலும் அதைப் பத்தி "பயப்படாதீங்க". கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா முயற்சி பண்ணுங்க.

3. கொஞ்சம் மியூச்சுவல் ஃபண்டுகள் லயும் போடுங்க.

4. நல்லா ஆராய்ச்சி பண்ணி 10, 20, 30 ஆண்டுகளா இருக்குற நல்ல ஷேர்கள்ல போடுங்க.

5. டிரேடிங், இன்ட்ரா டே, ஆப்ஷன்ஸ், ஃப்யூச்சர்ஸ், அது இதுன்னு கன்ஃபர்மா மாசம் இத்தனை பர்சன்ட் தர்றேன்னு சொன்னா நம்பவே நம்பாதீங்க. அப்படி சொல்லி அப்ஸ்காண்ட் ஆனவங்க பல பேரை என் கண்ணால பாத்திருக்கேன். ஐ மீன் அப்ஸ்காண்ட் ஆகும் முன்.

6. இன்வெஸ்ட்மெண்டை SIP மோடுல பண்ணுங்க.

7. வட்டி கம்மியா வந்தாலும் பரவால்ல. முக்கியச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை பேங்க் FD ல வையுங்க.

8. டெர்ம் இன்ஷூரன்ஸ், மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்து வைங்க.

9. கொஞ்சம் தங்கம் வாங்கி வைங்க. அவசரத்துக்கு அதைத் தான் அடகு வைக்க முடியும்.

10. முடிஞ்சா வெள்ளித்தட்டு கிட்டு வாங்கி வைங்க. பெரிய்ய பிரச்சினைன்னா அதைக்கூட விற்க முடியும். ஆனா ஃப்ரீஸ் ஆன ஷேரையோ, டீலிஸ்ட் ஆன ஷேரையோ விக்க முடியாது.

11. டாக்டர்கிட்ட இன்வெஸ்ட்மெண்ட் பத்திக் கேக்காதீங்க. வாத்தியார் கிட்ட வைத்தியம் கேக்காதீங்க. ஆட்டோக்காரன் கிட்ட ஆப்பாயில் கேக்காதீங்க. 

அனுபவப் பட்டவர்கள், இவற்றில் விட்டுப் போன அட்வைஸூகளை சேர்க்கலாம். புல் மார்க்கெட் தொடர வாழ்த்துக்கள். 

வியாழன், 14 அக்டோபர், 2021

இந்தத் துறைக்கு வந்தது எப்படி?

ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய, ஆசிரியர்களுக்கு நான் பயிற்சி கொடுக்கும் புகைப்படம் ஒன்றில் "இந்தப் பயிற்றுவிப்பாளர் துறைக்கு வந்தது எப்படி?" என்று அறிவன் அறிவன் அவர்கள் ஒரு கேள்வியைப் போட்டிருந்தார். என்னுடைய 20 வருடத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஆழமான கேள்வியாக இருந்தது அது.
அதற்கான பதிலை யோசிக்கையில் "தொடர்ந்த படிப்பும், அடுத்தது என்ன?" என்ற ஆர்வமும் தான் காரணம் என்று சொல்லலாம் எனத் தோன்றியது..
தொழில் செய்தால் இலாபம் வரலாம். நட்டமும் வரலாம், கியாரண்டி கிடையாது. "நட்டம் தான் வரும்" என்று ஒரு பய பிம்பத்தை என்னைச் சுற்றி இருந்து பலவித தொழில்கள் செய்த பெரும்பாலான உறவினர்கள் தங்கள் வாழ்க்கை மூலம் காட்டி விட்டார்கள். எனவே, "தங்கையின் திருமணம், அப்பாவின் கடன்" போன்ற கமிட்மெண்டுகள் இருந்த எனக்கு வேலைக்குப் போவது தான் சிறந்தது என என் சிறு மூளையில் பதியப்பட்டது.
ஆனால், நல்ல படிப்புகளை நானே தேர்வு செய்யும் வாய்ப்புகள் இன்றி, தமிழகத்தின் பெரும்பாலான வசதியற்ற மாணவர்களைப் போல, அரசு உதவிபெற்ற பள்ளிகள், அரசாங்கக் கல்லூரி, கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்கள், என்று தொடர்ந்து, கிடைத்தவற்றைப் படித்தவன்தான் நான். அதே போல திரவியம் தேடியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் வேலைச் சந்தையில் "ஏதோ ஒரு வேலை" என்று உள்ளே நுழைந்தவன் தான்.
என் முதல் முழு நேர வேலையாக சேலம் தினமலரில் எடிட்டோரியலில் இரவு ஷிஃப்டில் வேலை செய்த போது எம்.ஏ ஆங்கில இலக்கியமும் படித்துக் கொண்டிருந்தேன். அதனால் அப்போது "டீச்சருக்கு இங்கே என்னய்யா வேலை?" என்று ஜாலியாகக் கலாய்த்து ஏற்றி விட்டார்கள். அப்போது தான் எனது தடம் மாறியது. அங்கிருந்து வேலை மாறுகையில் பள்ளி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே துவங்கியது "அடுத்தது என்ன?" என்ற கேள்வி.
அது தான் இங்கே வரை அழைத்து வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். கல்வித் தகுதிகள், பணத் தேவைகள் போன்ற பல காரணங்களால், பள்ளி ஆசிரியரில் இருந்து கல்லூரி ஆசிரியர், அடுத்தது (வெளிநாடுகளுக்கு) ஆன்லைன் கல்வியாளர், பங்குச் சந்தையில் பயிற்றுவிப்பாளர், எட்-டெக் எனும் கல்வித் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் பயிற்றுவிப்பாளர், ஃப்ரீலான்ஸ் ஆக கல்வி நிறுவனங்கள் சார்ந்த பலவித வேலைகள், பேச்சு, எழுத்து, மொழிபெயர்ப்பு என மெள்ள நகர்ந்து, இன்று ஒரு நிறுவனத்தில் மீண்டும் பயிற்றுவிப்பாளர் (மற்றும் கல்வி மேலாளர்) ஆக இருக்கிறேன்.
பலரின் வாழ்க்கையை மாற்ற வாய்ப்பிருக்கும் துறை என்பதால் கல்வித்துறையிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று ஆழமாக வேரூன்றி விட்டது. (மனத்திருப்தி சார்ந்த வருமானம்)
இடையில் குறும்படம், கதைகள், படைப்புகள், மின்புத்தகங்கள், நீயா? நானா?, ஒரு திரைப்படத்தில் நடிப்பு, யூடியூப் சேனல் எனப் பொழுதுபோக்கு சார்ந்தும் இயங்கிக் கொண்டு இருக்கிறேன். (ஆசைக்காக)

தூண்டிய கேள்விக்கு நன்றி.  




ரொம்பவும் குட்டிக் கதை

சென்ற மாதம் 22.09.21 தேதியிட்ட குமுதம் வார இதழில் வெளியான என்னுடைய குட்டிக் கதை ஒன்று. "சிங்கிள் வரி சிறுகதைகள்" என்ற பெயரில் வாராவாரம் குமுதத்தில் வெளியாகும் பகுதியில் வெளியானது.




ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

அபத்தமான ஸ்ட்ராடஜி

தமிழன், இந்தியன், சேட்டு, சிறு வியாபாரி, கார்ப்பரேட் வெங்காயம் என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டுப்பார்த்தால் லாஜிக் மிகவும் சிம்பிள் - உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே ஒரு கன்ஸ்யூமர் தனக்கு எது இலாபமோ, விலை குறைவோ அதை நோக்கியே நகர்வான். ஏனென்றால் அவன் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அவனுடைய வியர்வையும், இரத்தமும்.
------------------------------------------------------
ஒரு பதிவில் கீழை அ.கதிர்வேல் கதிர்வேல் சார் எழுதி இருந்தது.
//கேளம்பாக்கம் கடைத்தெருவில் மகள் சாமிக்கு பூ வாங்கி வரச் சொன்னார் ரோட்டோர கடையில் ஒரு பெண்மணி கதம்பம் முழம் 30 ரூபாய் என்று சொன்னார் எனக்கு அது அதிகமாக தெரிந்தது ஒரு பூ மொத்த விற்பனை கடையில் 20 ரூபாய்க்கு உதிரிப்பூ வாங்கிவிட்டு அருகிலேயே ஒரு பெண்மணி மாடிப்படி அருகில் பூ தொடுத்துக் கொண்டிருந்தார் ஒருவேளை அவரிடம் கம்மியாக இருக்குமோ என்று எண்ணி முழம் எவ்வளவு என்றேன் அவரும் 30 ரூபாய் என்று சொன்னதால் இங்கே எல்லா இடத்திலும் இதே விலைதான் என்று நினைத்துவிட்டு ஒரு முழம் வாங்கிட்டு முப்பது ரூபாய் கொடுத்தேன் இன்னும் இருபது ரூபாய் கொடுங்கள் என்றார் எதற்கு என்று கேட்டேன் முழம் 50 ரூபாய் நீங்கள் தான் சரியாக காதில் வாங்கவில்லை என்று பழியை என் மீது போட்டார் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை 30 ரூபாய் பேசிவிட்டு நீங்கள் வெட்டியவுடன் 100 ரூபாய் கூட சொல்வீர்கள் போல என்றேன் சரி சரி 10 ரூபாய் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டார்//
அதே போல எனக்கு நடந்த ஒரு அனுபவம்.
இப்படி மாத்தி சொல்லி வியாபாரம் செய்வது ஒரு புத்திசாலித்தனமான ஸ்ட்ராடஜி என்று அபத்தமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் சில வியாபாரிகள். நீங்கள் 25 ரூபாய்க்குக் கேட்க வாய்ப்பிருக்கிறது என்று நினைத்து "நான் 30 சொல்லலை 50 தான் சொன்னேன்" என்பது. பிறகு "நீ 30 தானம்மா சொன்னே" என்றால், மறுத்து விட்டு "சரி போ, 30 ரூபாய் கொடு" என்று வாங்கிக் கொள்வது. இதில் அவர்களுக்கு நீங்கள் குறைத்துக் கேட்க வாய்ப்பிருந்த அந்த 5 ரூபாய் லாபம் என்று அவர்களே நினைத்துக் கொள்கிறார்கள்.
அச்சு மாறாமல் இதே அனுபவம் எனக்குப் போன வாரம். இதே ஸ்ட்ராடஜியை சைக்கிள் கடை சேட் ஒருத்தன் என்னிடம் முயற்சி செய்தான். கடையில் அவன் 3500 ரூபாய் சொன்ன சைக்கிளை நாங்கள் ஆராய்ந்து பார்த்து விட்டு பேரம் பேசினோம். 3200 கேட்ட போது, "நான் 3800 சொன்னேன்" என்றான். "இல்லப்பா 3500 தான் சொன்னே, ஒரே நேரத்துல எனக்கும் என் பொண்டாட்டிக்கும் காது கேட்காமப் போகாது" என்றதுக்கு, "இல்லை 3800 தான் சொன்னேன். சரி, 3500 க்கு வேணா பண்ணித் தரேன்" என்றான்.
போய்யா என்று சொல்லிவிட்டு எதிரிலேயே வேறு கடைக்குப் போய் கிட்டத்தட்ட அடுத்த மாடல் 2500 க்கு வாங்கிவிட்டோம். அவனுக்குத் தான் நஷ்டம்.
நிறைய கடைகள் இருக்கிற பஜார் போறது நமக்கு நல்லது. இன்னோரு கடையில் ஆல்வின் மாடல் 16 இன்ச் 3800 சொல்லி பேரம் பேசின பிறகு லாஸ்ட் ப்ரைஸ் 3100 க்கு தரேன்னு சொன்னாங்க. ஆனா நம்ம பட்ஜெட் கம்மின்னு வேற கடை வந்துட்டோம்.

சில ஆண்டுகள் முன்பு Scooter type ஒன்னு வாங்கினப்போ பஜார் ரேட் 1100+. ஆனா அப்போ இருந்த பக்கத்து வீட்டுக்காரர் அமேசான்ல செல்லர். எனவே அவரு ஹோல்சேல் வாங்குவார். அவர் எனக்கு 750 க்கு வாங்கித் தந்தார்.

.

அக்கவுண்ட்ல கோடிக்கணக்குல காசு இருந்தா எவ்ளோ கெத்தா சுத்தலாம்?

 நான்லாம் "இனிமே ஷேர் மார்க்கெட்ல சம்பாரிச்சு நாம செலவு பண்ண முடியாது. எதுல போட்டாலும் லாங் டெர்ம் தான் - அது என் ரிட்டையர்மெண்டுக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ தான்" என்று மாறி ரெண்டு வருஷம் ஆச்சு. இனிமே எந்த ஷேர்ல போட்டாலும் 20 வருசம் தான். (அதுவரை மனசு அலைபாயாம இருக்கணும் ஆண்டவா).

வேலைல சேர்ந்த புதுசுல, சின்ன வயசுல ஷேர்ல போட்டதெல்லாம் "கேட்டது, பாத்தது" வச்சித்தான். சுஸ்லான், எஜூகாம்ப், தம்பிப்பய ரிலையன்ஸ், சத்யம்னு நெறைய்ய பல்பு வாங்கியிருக்கேன். இன்ஃபோஸிஸ், அண்ணங்காரன் ரிலையன்ஸ், L&T (மனைவியார் பர்ச்சேஸ்) மாதிரி நல்ல ஷேர்ஸ் கூட என்ட்ரி டைம், எக்ஸிட் டைம் தெரியாம எப்பயாவது நுழைஞ்சு, எப்பயாவது வெளிய வர்றதுதான். ஆனா எல்லாமே 5 ஷேர், 10 ஷேர், 20 ஷேர் ரேஞ்சுன்றதால அடி கம்மியா இருந்தது. பின்னாளில் யெஸ் பேங்க் (மனைவியோட பர்ச்சேஸ்) ல கூட எப்படியோ ஆவரேஜ் பண்ணி 3000 ரூவா நட்டத்தோட தப்பிச்சேன்.
ஆனா 2008 மார்க்கெட் க்ராஷ் ல என் இன்வெஸ்ட்மெண்ட் 40% க்கு மேல நக்கிட்டுப்போச்சு. ஆனா தங்கை கல்யாணத்துக்காக அப்போ என் பணத்தை எடுத்தே ஆக வேண்டிய நிலைமை. நட்டத்துல எடுத்தேன். அதுக்கப்புறம் அவளோட கல்யாணக் கடன் கட்றது, என்னோட கல்யாணக் கடன் கட்றது, டூ வீலர் லோன், ஜூவல் அடமான லோன்கள் கட்றது, அதுகளுக்கு வட்டி கட்றது, அப்டி இப்டின்னு வாழ்க்கை ஓடிடுச்சு. ஒன்றரை வருடம் வேலையில்லாம ஃப்ரீலான்சரா "கிடைச்சதை செஞ்சு, கொடுத்ததை வாங்கி" வாழ்க்கை நடத்தினேன். கையில இருந்த FD லாம் காலி.
தங்கை கல்யாணத்தப்போ "பர்சனல் லோன்"னு ஒன்னு இருக்கு யாரும் எனக்குச் சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்கும். (இந்த குரூப் ஆரம்பிச்சது கூட அது போல எண்ணத்தில் தான். பல பேருக்கு "ஓ, இப்படி ஒன்னு இருக்கா" ன்னு அவங்களுக்குத் தெரியாததை சொல்லிக்குடுக்கலாமே. ஒரு கூட்டு முயற்சி மூலம்).
அதுக்கப்புறம் "இந்த வம்பே வேணாம்டா சாமி" ன்னு மார்க்கெட்டுக்கே பெரிய்ய கேப் விட்டேன். கடந்த 2006 ல இருந்து இருக்கேன். ஆனா 15 வருஷத்துல ஷேர்ல சம்பாரிச்சதே இல்லை. 2008 க்கு முன், ஆரம்பத்துல கூட வெறும் இன்ட்ரா டே செஞ்சு 100, 200 ன்னு தான் பார்த்தேன். பிறகு தான் இந்த 2008 க்ராஷூம், பெரிய்ய கேப்பும். மனைவியும் "அவங்க சொன்னாங்க, டிப்ஸ் வந்துச்சு"ன்னு சில ஷேர்ஸ் வச்சிருந்தாங்க. அதிலும் பெரிய லாபம் இல்லை. ஆவரேஜ் பார்த்தா ஆறேழு வருஷத்துல போட்ட காசு மட்டும் தான் திரும்ப வந்துச்சு.
நான் மார்க்கெட்ல இலாபம் பார்த்ததுன்னா போன வருஷம் தான். "வாங்கி, வச்சு, வித்து"ன்னு சுமார் 10% எடுத்தேன். மார்க்கெட் பத்தி கொஞ்சம் படிச்சேன். டீட்டெயில்ட் டெக்னிகல் அனாலிஸிஸ் லாம் எனக்குப் புரியாது. நான் ஸ்டேட் போர்டு - தமிழ் மீடியம் வேற. எனவே எனக்குப் புரியும் அளவுக்குக் "கொஞ்சம்" படிச்சேன்.
இப்போ ஒரே முடிவுதான். மாசாமாசம் "கொஞ்சமா" என்னால முடிஞ்சதை மட்டும் ஷேர்ல போடுறது. அதுவும் ஏற்கனவே தன்னை ப்ரூவ் செஞ்ச மார்க்கெட் லீடர்ஸ்ல மட்டும். அப்புறம், ரிட்டையர் மெண்ட் வரை வெயிட் பண்றது. (தேவைப்பட்டா பசங்க வளர்ந்ததும், அவங்க தேவைக்கு அவங்களுக்கு கொஞ்சம் பர்சன்டேஜ் எடுத்துக் கொடுக்கலாம்).
ஒரு 60 - 65 வயசுல அக்கவுண்ட்ல கோடிக்கணக்குல காசு இருந்தா எவ்ளோ கெத்தா சுத்தலாம்?

புதைப்பதா? எரிப்பதா? எது சரி?

 ஒரு அன்பர் குரூப் ஒன்றில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதன் சாராம்சம் - "குடும்பத்தில் இறந்தவர்களை இஸ்லாத்தில், நீர் உற்றி கழுவி சுத்தம் செய்து, துணியில் சுற்றி 4 அடிக் குழியில் புதைப்பார்கள். இதுபோல் கிறிஸ்த்துவர்கள் இறந்த சடலத்தை கண்ணியத்தோடு சர்ச் பாதர் தலைமையில் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்கிறார்கள். ஆனால் இந்துக்கள் ஒரு நபர் இறப்பின் அவரை குடும்ப நபரே எரியூட்டுவதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை" என்று எழுதியிருந்தார்.

அவர் அந்த இரண்டில் ஒரு மதத்தைச் சேர்ந்தவர். அவர் எவ்வளவுதான் ஸாஃப்டாக எழுதியிருந்தாலும், "புதைப்பது தான் சரி" என்பது போல அவரது போஸ்ட்டின் சப்டெக்ஸ்ட் சொல்கிறது. அது சப்கான்ஷியஸ்லி அவர் வளர்ந்த விதம், அவரது மனதுக்குள் புதைக்கப்பட்ட எண்ணம். எப்படி "செளத் இந்தியான்னா பெண்கள் சேலை தான் கட்டுவாங்க" ன்னு நார்த் இன்டியன்ஸ் புரிஞ்சு வச்சிருக்கிற மாதிரி. இந்துக்களுக்கு இறந்தவர் உடலை எரிப்பதில் எந்தக் குற்ற உணர்வும் வருவதில்லை. மனவலி, அழுகை எல்லாம் "இறந்துட்டாரே" என்பதில் தான்.
எனக்குத் தெரிந்த ஒரு முஸ்லிம் நண்பரை புதைத்த இடத்தை க்ராஸ் செய்யும் போதெல்லாம் அந்த மனிதர் இங்கே தான் அடியில் இருக்கிறார் என்பது எனக்கு ஒரு மாதிரி சிலிர்ப்பையும், நடுக்கத்தையும் தான் தருகிறது. அதுவே என் தந்தையை எரித்த இடத்தை கிராஸ் செய்யும் போது அந்தப் பயம் வருவதில்லை. இது நான் வளர்ந்த விதம். அதுக்காக "எரிப்பது தான் சரி" என்று கிறிஸ்தவர்களிடமும், முஸ்லிம்களிடமும் நான் போய்ச் சொன்னால் என்னை அடிக்க வருவார்கள்.
அமெரிக்காவில் ஒரு நிறுவனம் இறந்தவர்களின் உடலை ஃபார்மலின் போன்றவற்றில் ஊற வைத்து ஒருவித கண்ணாடிக் கெமிக்கல் பெட்டிக்குள் நீங்கள் பார்ப்பது போல பேக்கிங் செய்து கொடுப்பார்கள். அப்படி வாங்கிச் சென்றவர்கள் சில மாதங்களுக்குப் பிறகு வீட்டில் அதை வைத்துக்கொள்ளப் பிடிக்காமல் புதைக்கக் (அல்லது அவர்கள் வழக்கப்படி டிஸ்போஸ் செய்யக்) கொடுத்து விட்டார்களாம். ஒரு பிரபல எழுத்தாளரின் பாடியும் இப்படி ஒரு மியூசியத்தில் உள்ளதாம். முதலில் சில மாதங்கள் தினமும் வந்து பார்த்த அவர் மனைவி "அவர் போயிட்டார், இது வெறும் பாடி" என்று மனம் உணர்ந்த பிறகு அங்கே செல்வதை நிறுத்தி விட்டாராம்.
இன்னும் சில ஆண்டுகளில் புதைப்பதற்கு இடம் இல்லாமல் எல்லா மதங்களும் "எரிப்பதை"த் தான் வலியுறுத்தும் என்று ஒரு கட்டுரையும் படித்தேன்.
செளத் ஆப்ரிக்காவில் சில பழங்குடியினர், யாரேனும் இறந்தால் அவர்கள் உடலை பூஜை, மரியாதையெல்லாம் செய்து காட்டுக்குள் சென்று போட்டு விட்டு வந்து விடுவார்களாம். காட்டு நாய், நரிகள், கழுதைப்புலிகள் அந்த உடலைக்கிழித்து உண்ணுமாம். அல்லது அந்த உடல் அழுகி, புழு வைத்து, செடி முளைத்து, மண்ணோடு மண்ணாக டீகம்போஸ் ஆகி விடுமாம். அதற்காக அவர்கள் வருத்தப்படுவதில்லை. அறிவியலில் கூட "life cycle of a man" படி, பூமியில் இருந்து கிடைத்தவற்றைத் தின்று வளர்ந்த உடம்பு பூமியுடன் டீகம்போஸ் ஆகிக் கலப்பது தான் சரி. அதன் படி அந்தப் பழங்குடியினர் செய்வது சரி தானே.
அதற்காக, அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தர் இதே போல வந்து போஸ்ட்டில் சொன்னால், நாம நம்ம சொந்தக்காரரின் உடலை கழுதைப் புலி கிழித்துத் தின்பதை ஒத்துக் கொள்வோமா?
அவரவர்க்கு அவரவர் வழக்கம்.

வியாழன், 9 செப்டம்பர், 2021

ஆன்லைன் வகுப்பில் இப்படியெல்லாமா நடக்குது?

#Activity_Based_learning  

#Real_Life_Examples 

3rd Std EVS - Online Classroom Observation செய்து கொண்டிருந்தேன். 



டீச்சர் போனை எடுத்துக் கொண்டு நேராக தோட்டத்திற்குச் சென்றார். ஒரு இலையைப் பறித்து அதைக் கேமராவில் காட்டி ஒவ்வொரு பாகமாகத் தொட்டுக் காட்டி "இது என்ன?" என்று கேட்கிறார். பிள்ளைகள் ஒவ்வொன்றாக பதில் சொல்கிறார்கள். அதிலிருந்து அப்படியே Photosynthesis - ஒளிச்சேர்க்கை டாபிக்கைத் தொட்டு நடத்தத் துவங்குகிறார். ஆர்வமாக கவனிக்கிறார்கள் குழந்தைகள் 

(ஒரு பையனின் தந்தை பின்னால் துண்டுடன் க்ராஸ் செய்கிறார். கேமரா ஆஃப் பண்ணு என்று சொல்லியிருப்பார் போல. ஓக்கே என்று தலையாட்டியபடி கேமராவை ஆஃப் செய்கிறான் அவன்)

Photosynthesis க்காக ஒரு வீடியோ போட்டுக்காண்பித்தார். அதைப்பார்த்து முடித்ததும் ஒரு பயல் நேயர் விருப்பம் போல "வேற வீடியோ போடுங்க மிஸ்" என்கிறான். 

Sunlight, Chrolophyl, Carbon Dioxide, Water என்று சொல்லும் போது குழந்தைகள் திரும்பச் சொல்கிறார்கள். ஒரு குழந்தை Chrolophyl ஐ "கோலோபில்" என்றது. அழகாக இருந்தது. 

இதுபோலக் குழந்தைகளுடன் கிடைக்கும் நேரத்திற்காகவே இந்தத்துறையை விட்டு இன்னும் விலகாமல் இருக்கிறேன். 

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

ஒண்ணரை வருசம் சுலோவாவே

கும்பகோணம் திருமஞ்சன வீதி நடுநிலைப்பள்ளின்னு ஒரு இஸ்கோலு.. (ஆரம்பப் பள்ளியோ?)

அங்கதான் எங்கம்மாவும் சின்ன மாம்ஸூம் படிச்சாங்களாம்... சரீரீ.... படிப்பை ஆரம்பிச்சாகளாம்.. எப்போவா? அது இருக்கும் ஒரு 56 - 58 வருசம்...
அங்கன பெரிய வாத்தியார்னு ஒருத்தர் இருந்தாரு. அவுங்களுக்கும் அவர்தான் பெரிய வாத்தியாரு. எனக்கும் தான். அவரு தெருவுல நடந்து வந்தா சைக்கிள் ஓட்டுறவங்க கே.எஸ்.ரவிக்குமார் ஆக்சன் சொன்னவுடனே ரோட்டோரமா நின்னு வணக்கம் வச்சுட்டு வாத்தியார் போனப்பறம் தான் சைக்கிள எடுப்பாங்களாம்...
அந்தப் பெருமையை சொல்லிப்போட்டு என்னையையும் கொண்டு போயி அந்த ஸ்கூலுலயே, ஸாரி பள்ளிக் கோடத்துலயே சேத்தாக.. ஸாரி... சேக்க முயற்சி பண்ணுனாக... 5 வயசுல..
(நடுவால ரெண்டு வருசம் முன்னால கான்வென்டுல எல்லுகேஜி சேக்குறேன்னு எங்க நைனா அடிச்ச கூத்து அங்கன பீஸ் கட்டாததால ஈ-ன்னு பல்ல இளிச்சு நாந்திரும்பி வீட்டுக்கே வந்த கதை இதுல சேராது)
அவரு தான் அந்தக் காலத்து ஆளாச்சே.. அந்தக் காலம் னா கொஞ்ச நஞ்சமில்ல. 58 வருசம் முன்னாலயே "அந்தக்காலம்"னா என்னா வயசிருக்கும் அவருக்கு. அவரு க்ரைடீரியா என்னன்னா "டேய், பயலே வலது கைய தூக்கு. அதை உன் தலை மேல சுத்தி வச்சு இடது காதை தொடு" தொட்டேன். ஸாரி, தொட முயற்சி பண்ணேன். மிடில... நாம தான் முத பெஞ்சிலயே எப்பயும் உக்கார்ற அளவு பொடுசாச்சே. குட்டிக் கை. எப்புடி எட்டும்?
அவ்ளோதான். மேகி சூடாகி இறக்கி வைக்கிற நேரம் கூட இல்ல... இன்டர்வியூ ஓவர். "பய ரொம்ப சிறுசா இருக்கான். போயிட்டு அடுத்த வருசம் வாடா நாராயணா". பேக் டு தி பெவிலியன். நம்ம கேரியர்-ல ஒரு ஒண்ணரை வருசம் போச்சு. அரோகரா... மத்தவன் லாம் 5 வயசுல ஒண்ணாப்பு படிச்சா, நான் மட்டும் ஆறரையில சேந்தேன்.
அப்போ ஆரம்பிச்சது. வாழ்க்க இன்னிய வரை ஒரு ஒண்ணரை வருசம் சுலோவாவே போவுது. சரி உடு. ஒரு வருசம் முன்னாடியே படிச்சிருந்தா மட்டும்? அடுத்த மாசம் நம்மூருக்கு வாராறே ஆர்னால்டு.. அவருக்குப் போட்டியா கலிபோர்னியாவுக்கு கவர்னராவா ஆயிருக்கப் போறேன்?
லூஸ்ல விட்டுட்டு வாத்திக்கு ஒரு வணக்கம் வையி... பெரிய வாத்தியார் வாழ்க... ஸாரி... அவரு போயிட்டாரு. அவரு புகழ் வாழ்க...
ஹேப்பி (பிலேட்டட்) டீச்சர்ஸ் டே
--------------------
7 செப்டம்பர் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.