ஞாயிறு, 5 ஜூலை, 2015

இன்று, நேற்று, நாளை - எனக்குப் பிடித்தவை


எல்லோரும் பாபநாசம் விமர்சனம் போடும் நேரத்தில் நாம கொஞ்சம் லேட்டா என்ட்ரி கொடுக்கிறோமோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் பரவாயில்லை. ரசித்த விஷயத்தை கொஞ்சம் முன்னே பின்னே ஆனாலும் சொல்லி விடுவது தான் தர்மம்.

பொதுவாக டைம் டிராவல் மாதிரி கான்செப்டை எடுத்துக் கொண்டால் எதிர்காலத்துக்குச் செல்வது எப்போதும் சேஃப். அடித்து ஆட முடியும். தோன்றியதை எல்லாம் காண்பிக்கலாம். இன்றிலிருந்து சுமார் ஐம்பது நூறு வருடங்கள் கேப் விட்டுப் போனால் எதை வேண்டுமானாலும் காண்பிக்கலாம். லாஜிக்காக வைரஸ் மேட்டர் போல எதையேனும்  வைத்துக்கொண்டு எதிர்கால மனிதனுக்கு இரண்டு தலை முளைத்து விட்டது என்று கூட கதை விடலாம். நம்பும்படி காட்சிகள் வைத்து ரசிகனை அசத்துவது டைரக்டரின் சாமர்த்தியம். ஆனால் பட்ஜெட் தலையைத்தின்னும். கற்பனை, பேப்பர் ஒர்க், சி.ஜி என நிறைய வேலை வைக்கும்.

ஆனால் ஆங்கில "டைம் மிஷின்" படத்தில் நான் எதிர்பார்த்துப் போனது வேறு. எனக்குக் கிடைத்த அனுபவம் வேறு. எதிர்காலத்தில் நடக்கும் என நான் ஏதேதோ ஸ்டார் வார்ஸ் ரேஞ்சில் கிராபிக்ஸையெல்லாம் எதிர்பார்த்துப் போனால் படம் என்னவோ எதிர்காலத்தில் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாண்டிப்போய் உலகம் பலமுறை அழிவுகளை எதிர்கொண்டு, எதிர்காலத்திலேயே ஒரு பழங்கால செட் அப் பை போட்டு ஏமாற்றி விட்டார்கள். கதையில் ஹீரோ எதிர்காலத்தில் போய் சேரும் இடம் கி.பி 1200 ல் காட்டு வாசிகள் இருந்தால் எப்படி இருந்திருக்கும் அப்படி ஆக்கி கூடவே மனிதனையும் குரங்கையும் இணைத்து ஒரு பெரிய மிருக மனிதன் என எதையோ செய்து குழப்பி எதிர்பார்த்து போனவனை "இந்த பழங்குடி கதையை சொல்றதுக்கு எதுக்குடா டைம் மிஷின்?" என்று கேட்க வைத்து அனுப்பினார்கள்.

அதே போல் "அபூர்வ சக்தி 520" என்று ஒரு தெலுகு டப்பிங் படம். படம் வந்தது 1980 களின் இறுதியில் என்று நினைக்கிறேன். விபரமே தெரியாமல் பாட்டியின் கை பிடித்து தியேட்டருக்குப் போனது நினைவுக்கு வந்தது. அதில் எதிர்காலத்துக்கு, அதாவது 2005 - க்கு வருவார்கள். ஏதோ வைரஸ் பாதிக்கப்பட்டு 2005 ல் இருக்கும் மனிதர்களுக்கு மூஞ்சியெல்லாம் கொப்புளம் கொப்புளமாக ஆகியிருக்கும். ஆனால் படுமொக்கையாக இருக்கும். சின்னப்பையனாக இருந்த எனக்கு அப்போதே பிடிக்கவில்லை. இப்போ பார்த்தால் அவ்வளவுதான். செத்தேன்.

       இதே டைம் மிஷின் கான்செப்டை வைத்து இறந்த காலத்தையும் காட்டி கலக்கலாம். ஒரு நாஸ்டால்ஜியாவை உண்டாக்கலாம். மதராஸப்பட்டினம் ஏன் ஓடியது? அந்தக் காலத்து மெட்ராஸைப் பார்க்க எல்லோருக்கும் ஆசை. அதை அவ்வளவு அழகாக ஒரு காதல் கதையுடன் சேர்த்துக் காட்டியதில் மயங்கிப் போனோம். என்ன ஒன்று? டைம் மிஷினை வைத்து கடந்த காலத்திற்குச் சென்றால் ஆடியன்ஸூக்குத் தெரிந்த அவர்கள் அனுபவித்த விஷயங்களை இம்மி மாறாமல் காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சொதப்பல் ஆகி விடும். வித்தியாசம் தெரிந்து விட்டால் ஆடியன்ஸ் கத்துவார்கள்.

பழைய காலத்தைக் காண்பித்து பல்பு வாங்கியதில் ஒரு சிறந்த உதாரணம் "வாரணம் ஆயிரம்" படம். அதில் ஒரு  பாடலில் சூர்யா கஷ்டப்பட்டு பழைய மேக்கப், காஸ்ட்யூம் எல்லாம் போட்டுக்கொண்டு நடந்து வர, பக்கத்திலேயே அவரது நண்பன் கேஷூவலாக இந்த கால ஸ்டைலில் ஒரு டி.ஷர்ட் மாடல் டிரஸ்ஸில் வரும் சீன் ஞாபகம் இருக்கிறதா? கௌதம் மேனன் பல்பு வாங்கியது அங்கே தான். அதே போல அதே பாட்டில் ஒரு பழைய பஸ்ஸை காண்பிப்பதாக நினைத்து "நாய் வண்டி" போல ஒரு தகர டப்பாவை காண்பித்து, ஓ மை காட். 64 வயதாகும் என் அப்பா பார்த்துவிட்டு "என்னடா இது?" என்றார்.

       சரி, கமிங் டு தி பாயிண்ட் "இன்று, நேற்று, நாளை" எதிர்காலத்துக்குப் போகாமல் பட்ஜெட் காரணமாக இறந்த காலத்திற்குப் பயணிக்கிறது. அதிலும் பழைய காலத்தில் ஒரே ஒரு தெருவை மட்டும் செட் போட்டு சமாளித்திருக்கிறார்கள். டைம் மெஷின் படபடவென விரிந்து எழும், சுருங்கி அடங்கி சூட்கேஸ் சைஸூக்கு மாறும் சில சீன்களில் பயன்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ் மற்றும் ஆர்யாவுடைய லேப், மில்லியனராகக் காட்டப்படும் ஜெயப்பிரகாஷின் ஆபீஸ் காட்சிகளை பார்க்கும் போது படம் கொஞ்சம் ரிச் லுக் கொடுத்தாலும் ஓவர் ஆல் ஆக வெளியே வந்து யோசிக்கையில் அட, இது சின்ன பட்ஜெட் படம்ல என்று நன்றாகப்புரிகிறது. சரி என்ன செய்ய? கிடைத்த பட்ஜெட்டுக்குள் கபடி ஆடியிருக்கிறார்கள்.

       என்னதான் ஸிட் ஃபீல்டு சொன்னார் என்று கருந்தேள் அடிக்கடி "முதல் சீனிலேயே கதை ஆரம்பித்து விட வேண்டும்" சொன்னாலும் இப்படி "முதல்" ஷாட்டிலேயே டகார் என்று படத்தின் மெயின் லைன் ஆன "டைம் மிஷினை ஆர்யா கடந்த காலத்துக்கு அனுப்புகிறார்" என்று ஆரம்பிப்பதெல்லாம் கொஞ்சம் டூ மச் பாஸ். குழந்தை குட்டிகளை தியேட்டரில் லைட் ஆஃப் ஆனதும் செட்டில் செய்பவர்கள், கொஞ்சம் லேட்டாய் வருபவர்களையும் மனதில் வைத்துக்கொண்டு அடுத்த படத்தில் கொஞ்சூண்டு டைம் கொடுத்தால் நன்று.

       12 பி படத்திலும் இதே பிரச்சினை இருந்தது. ஆனால் ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த முக்கியமான சீன் வரும் "இவன் பஸ்ல ஏறுனா வேற கதை", "பஸ்ஸை மிஸ் பண்ணிட்டா வேற கதை" என்று பார்த்திபன் வாய்ஸ் ஓவர் வரும். இதை ஒரு வார இதழ் விமர்சனத்தில் "அந்த சீனை மிஸ் பண்ணிட்டா, ஏன் ஒரே ஷாம் ரெண்டு ஹீரோயினோட சுத்துறாரு? ஏன் ஒரே டைம்ல ரெண்டு வேலைக்குப் போறாரு" என்றெல்லாம் குழப்பம் எழும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதே போல எழுந்தது. படம் அவுட்டு. ஆனால் இதில் டீஸர் முதல் டிரெயிலர் வரை "கால இயந்திரம்" "கால இயந்திரம்" "கால இயந்திரம்" என்று கூவி விட்டதால் முதல் காட்சியை மிஸ் செய்தவர்களுக்கும் கதை புரிந்தது. ஆனால் லேட்டாக வந்தவர்கள் கிளைமாக்ஸ் முடிந்ததும் ஆர்யாவை பார்த்து "ஹே, என்னடா ஆர்யா இந்தப்படத்துல எப்டி?" என்று ஒரு கேள்வியை கேட்டு விட்டுத்தான் போனார்கள்.

       முதல் கால் மணி நேரம் மெள்ள நகர்ந்து போரடிப்பது போல நகர்ந்த போது நான் வற்புறுத்தி என் குடும்பமும், தங்கை குடும்பமும் என்னையே பார்த்தார்கள். "டேய், அண்ணா, என்னடா இது?" என்று முறைத்தாள் என் பாசமலர். ஆனால் டைம் மிஷின் ஹீரோவின் கையில் கிடைத்ததும் படபடவென சீன்கள் ஓடத்துவங்கியதால் பிரச்சினை இல்லை. படம் கிரேட் எஸ்கேப். எல்லோருக்கும் சந்தோஷம். பொதுவாகவே ஒரு படம் சூப்பராக அமைந்து விட்டால் அதற்கு கூட்டிக் கொண்டு போனவன் பெருமையாக, என்னமோ நாமளே டைரக்ட் செய்த மாதிரி காலரை உயர்த்துவதும் வழக்கம். அது எனக்கு நடந்தது. காட்சிக்குக் காட்சி ரசித்தார்கள். மெல்லிய நகைச்சுவையும் ரிலாக்ஸ் செய்ய உதவியது.

       டைம் மெஷினை சூட்கேஸ் ஸ்டைலில் மடக்கி உபயோகப்படுத்தும் ஐடியா சூப்பர். "ஐயர்ன் மேன் - சூட்கேஸ் ஆர்மர்" - ல் இருந்து இந்த ஐடியா கிடைத்திருக்கலாம் (பார்ட் டூ - மானகோ கார் ரேஸ் டிராக் சண்டை) என்று நினைக்கிறேன்.

       அதே போல பயங்கர பவர்ஃபுல்லான இன்டர்வெல் ப்ளாக். என்கவுண்டரில் செத்துட்டான் என விலாவாரியாகக் காண்பிக்கப்பட்ட வில்லன், டைம் மெஷினில் போன கருணா செய்த ஒரு சிறு தவறால் பிழைத்து விட "ஓ மை காட்" என்று ஆடியன்ஸ் பயங்கர ஷாக் ஆக (ஏனென்றால் வில்லனால் ஹீரோயினின் அப்பாவுக்கு ஒரு பெரிய பிரச்சினை வரும் என்பது கதையில் காண்பிக்கப் பட்டு விட்டது) அங்கே வரும் இன்டர்வெல் ப்ளாக் செம ப்ளான். பெரும் கை தட்டலுடன் கொடுக்கப் பட்ட இன்டர்வெல் ப்ளாக் இது. என் நினைவில் "ஃபேஸ் ஆஃப்" படத்தில் நிக்கோலஸ் கேஜ், கடல் நடுவில் உள்ள சிறையில் இருந்து தண்ணீரில் குதிக்கும் சீன் அப்படி ஒரு கை தட்டல் வாங்கியது.

       "ஆடியன்ஸை புத்திசாலி என்று நினைக்க வைக்க வேண்டும், அப்போது தான் அவனை படத்துடன் ஒன்ற வைக்க முடியும்" என்று வாத்தியார் சுஜாதா ஒருமுறை சொல்லியிருப்பார். தன் புத்திக்கு வேலை கொடுக்கும் படத்துடன் ஓடுவது ரசிகனுக்கு ரொம்பப் பிடிக்கும். செகண்ட் ஆஃப் எப்படி இருக்கும், வில்லனிடம் இருந்து எப்படி தப்பிப்பார்கள், அவனை எப்படி பழிவாங்குவார்கள், என்று இன்டர்வெல்லில் ஏக டிஸ்கஷன். அதை ஏமாற்றாத இரண்டாம் பாதியும் ரசிக்கும் படியே இருந்ததால் படம் திருப்தியுடன் நிறைவடைந்தது.

       ஆனால் லாஜிக் உதைக்கும் இடங்களும் சில உண்டு. ஹீரோ தங்கம் வாங்க பழைய காலத்துக்குப் போகும்போதே இப்போதுள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லாதே என்று உடனே நமக்குத் தோன்றுகிறது. இது அவர்களுக்குத் தோன்றாதது ஏன்?

       இன்னோரு சஜஷன் பழைய கால நகைக் கடையில் "ஐ, இங்க பார்றா அதர்வா" என்று கருணா சொல்கையில் சட்டென்று புரிந்து நிறைய பேர் கைதட்டவில்லை. அவன் கலர் வாங்கப் போகும் போது தான் பலர் கவனித்துக் கை தட்டினார்கள். அந்த கடைப்பையனுக்கு ஒரே ஒரு க்ளோசப் ஷாட் வைத்திருந்து அதன் மேல் கருணாவின் "ஐ, இங்க பார்றா அதர்வா" வாய்ஸ் ஓவர் ஓடியிருந்தால் க்ளாப்ஸ் பிரித்து எறிந்திருக்கும்.

       கால இயந்திரத்தை உபயோகப் படுத்துவதில் முதல் ரூலே "நீங்கள் கடந்த காலத்துக்குப் போனால் அங்கே எதையும் மாற்றி விடக்கூடாது. அதனால் நிகழ்காலத்தில் ஏற்படும் பின்விளைவுகள் மிகப் பெரியதாக இருக்கலாம்" என்று சொல்கிறார்கள். அப்படி இருக்கையில் விஷ்ணுவும், கருணாவும் தங்கள் "காணாமல் போனதை கண்டுபிடித்துத் தருவோம்" என்ற பிஸினஸூக்காக டைம் மிஷினை கால் டாக்ஸி போல உபயோகித்து (இதை கருணாவே சொல்கிறார்) ஆயிரக்கணக்கான சம்பவங்களை மாற்றி விடுகிறார்களே? அதனால் ஒவ்வாருவர் வாழ்க்கையிலும், எவ்வளவு பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்? இது எவ்வளவு பெரிய லாஜிக் பொத்தல்? அதுவும் மேற்கண்ட விதி முன்னமேயே சொல்லப்பட்டு விடும் போது. ஆனால் படம் ஓடுகிற ஓட்டத்தில் வீட்டுக்கு வந்த பிறகு தான் இதெல்லாம் தோன்றுகிறது.

       ஆனால் அதே நேரம் கவிதை போன்ற ஒரு சூப்பர் கற்பனை அசத்தல். ஹீரோயினை முன்நோக்கி கூட்டிச் சென்று அவள் வயது குறையக் குறைய அவளை அவளே கொஞ்சிவிட்டு வருவது செம கவிதை கலந்த கற்பனை. அதிலும் தன்னையே குழந்தையாக ஹீரோயின் கையில் வாங்கிப்பார்க்கும் காட்சியில் நான் எழுந்து நின்று கைதட்டினேன். உலகத்திலேயே எந்த ஒரு காதலனாலும் இதை விட பெஸ்ட் பிறந்தநாள் பரிசை தரமுடியாது. விஞ்ஞானமும் கவிதை கலக்கும் இடம் அந்தக் கற்பனை. அந்த ஐடியா யாருக்குத் தோன்றியிருந்தாலும் அவர்களுக்கு கலா மாஸ்டர் ஸ்டைலில் நான் தலையைச் சுற்றி 101 ரூபாய் தருகிறேன்.


       வேறென்ன? இன்னும் எவ்வளவோ தோன்றுகிறது. ஏற்கனவே ஏ4 ல் நான்கு பக்கம் தாண்டி விட்டது. இது போதும். இந்தப் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தும் இரவு முழுக்க மண்டையில் அதன் காட்சிகள் ஓடிக் கொண்டே இருந்தன. என்னைப் பொறுத்தவரை அப்படி இருந்தால் தான் அது ஒரு சிறந்த வெற்றிப் படம். இதே ஜானரில் இதற்கு முன் எனக்கு இப்படிப் பிடித்தபடம் 1995 ல்  வந்த "ஜூமாஞ்சி". அப்போ எனக்குப் பதினாலு வயசு. எட்டாப்பு என்று நினைக்கிறேன். படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தால் தலை முழுக்க அதே யோசனை. கிட்டத்தட்ட "இப்டி இருந்தா எப்டி இருக்கும், அப்டி இருந்தா எப்டி இருக்கும்" என்று கிட்டத்தட்ட ஜூமாஞ்சி இரண்டாம் பாகம் மண்டைக்குள் உருவாகி ஓடியது. அதன் படி "இன்று, நேற்று, நாளை" எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடித்த படம். யாரும் தவற விடக் கூடாத அனுபவம்.

2 கருத்துகள்:

  1. இந்த படத்தை பாக்கிற ஐடியா இதை வாசிக்கிற வரை இல்லை இனிமேல் பாக்கணும்

    பதிலளிநீக்கு
  2. 'டைம் மெஷின்' படம் பார்த்து ஏமாந்துட்டீங்க போல... HG Well's எழுதிய Time Machine படியுங்கள்... எனக்கு அந்த கதையில் இருந்த உணர்வுகள் மிகவும் பிடித்திருந்தது... ஹீரோவுக்கும் எதிர்கால (குட்டி) பெண்ணுக்குமான காதல்... நேரம் கிடைத்தால் வாசிக்கவும்...

    பதிலளிநீக்கு