உலகத்தைப்படைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார் கடவுள். படைப்புத்தொழிலின் சூட்சுமங்களை தன்னுடனிருந்த மற்ற தேவதைகளுக்கு விளக்கிக்கொண்டிருந்தார் அவர். எல்லா படைப்பிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும், ஆக்கமும் அழிவும் சேர்ந்தே படைக்கப்பட வேண்டும் என்றார் அவர். உதாரணமாக 10 மான்களைப்படைத்தால் 1 சிங்கத்தைப்படைக்க வேண்டும். 100 சாதுக்களைப்படைத்தால் அவற்றிற்கு ஒரு வைரியைப்படைக்க வேண்டும்.
இதோ பாருங்கள், இதுதான் அமெரிக்கா. உலகிலேயே மிக்க செல்வச்செழிப்பான, பணக்காரர்கள் நிறைந்த நாடாகப் படைத்திருக்கிறேன். ஆனால் அதே நேரம் பாதுகாப்பின்மையையும் பதற்றத்தையும் தந்துள்ளேன். இது ஆப்பிரிக்கா. இங்கே எழில் கொஞ்சும் இயற்கையழகையும், வற்றாத கனிம வளங்களையும் படைத்துள்ளேன். ஆனால் அதே நேரம், மிக மோசமான பருவ நிலைகளையும், எதிரிகளையும் அளித்துள்ளேன்.
அடுத்தது தென் அமெரிக்கா. மிக அடர்ந்த கானகப்பகுதிகள் உண்டு. ஆனால் குறைவான நிலப்பகுதிகள் காரணமாக அவர்கள் காடுகளை அழித்தே வாழ வேண்டும். ஆபத்தும் உண்டு. இது ஜப்பான். அறிவார்ந்த மக்கள். நல்ல வளமை. ஆனால் எண்ணற்ற எரிமலைகள். எப்போதும் உயிர் பயம். ஆகவே, நண்பர்களே, எந்தப்படைப்பிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றார்.
உடனே ஒரு தேவதை கேட்டது - "கடவுளே, இவற்றில் மிகவும் அழகான தேசம் எது?" புன்னகைத்தபடியே சொன்னார் கடவுள் - "எல்லாவற்றுக்கும் மகுடம் போல் அமைந்திருக்கும் இந்தியாதான் அது. என்னுடைய படைப்புகளிலேயே மிக உயர்வான ஒன்று. அனைத்து வகை கலாசாரங்களும் இணைந்த நாடு, மிகுந்த இயற்கை வளங்கள், தொழில்வளம், தொழில்நுட்ப வளம், மக்கள் வளம், நல்ல கலாசாரம் என அனைத்து வளங்களையும் ஒருசேர அளித்துள்ளேன் என்றார்.
ஆச்சரியமடைந்த தேவதை கேட்டது - ஆனால் நீங்கள் எல்லாவற்றிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்றீர்களே?" "இந்தியாவுக்கு எல்லாமே வளமையான விஷயங்கள் தானா? பிரச்சினைகளே கிடையாதா?"
பதிலாக உரக்கச் சிரித்தபடியே கடவுள் கூறினார்.
"ஹா. ஹா. ஹா., அதற்குத்தான் இந்தியாவுக்கு அண்டை நாடுகளைக் கொடுத்திருக்கிறேனே"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக