புதன், 28 அக்டோபர், 2020

விகடன் தாத்தா கேள்வியும், நம்ம கோக்கு மாக்கு பதில்களும்.

 "அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளைத் தயார் செய்யத் துவங்கி விட்டன. என்னென்ன வாக்குறுதிகள் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?" என்று விகடன் "யங்" தாத்தா "வாசகர் மேடை" பகுதிக்காக இன்று கேள்வி கேட்டிருந்தார். 


நம்ம பதில்கள் - 


வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 2000 ஊக்கத்தொகை, டாஸ்மாக்கில் தள்ளுபடி தரப்படும்.


அம்மா உணவகத்தில் ஐந்து இட்லி வாங்கினால் கபசுர குடிநீர் இலவசம்.


அம்மா உணவகத்தில் பார்சலும் வழங்கப்படும்.


ஒரு ரேஷன் கார்டுக்கு 100 ஜி.பி இலவச நெட் ரீசார்ஜ் போட்டுத்தரப்படும்.


வெங்காய விலை ஏறாமல் பார்த்துக் கொள்வோம். ஏறினால், ரேஷனில் ஒரு அட்டைக்கு இரண்டு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும்.


ஊழலில் சிக்கும் அரசியல்வாதிகளின் பணம் அப்படியே தமிழகத்தின் மீதுள்ள கடனைத் தீர்க்க செலுத்தப்படும். ஐந்தே ஆண்டுகளில் கடன் இல்லா தமிழ்நாடு.


சித்தி, அண்ணாமலை, மெட்டி ஒலி, நாதஸ்வரம் போன்ற சீரியல்களே அரசே வாங்கி பொதிகை யில் மறுஒளிபரப்பு செய்யும்.


வருடத்திற்கு இரண்டு முறை பிக் பாஸ் நடத்த ஆவன செய்வோம்.


வாட்ஸ் அப் செயலியை வாங்கி அரசுடைமை ஆக்குவோம்.


வருடத்துக்கு ஒரு முதல்வர் திட்டத்தைக் கொண்டு வருவோம்.


குடித்துவிட்டு வண்டியோட்டும் மதுப்பிரியர்களின் உயிர்நலன் கருதி, ஸ்விக்கி மூலம் மதுபானங்கள் டோர்டெலிவரி செய்ய வழிவகை செய்வோம்.


ஜாக்கிசான், ஜெட்லீ படங்களைத் தடை செய்து சைனாவை வெறுப்பேத்துவோம்.


ஆன்லைன் வகுப்பில் படிக்க வேண்டி, அரசுப்பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா டேப் (TAB) வழங்கப்படும்.


தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும், அனைவரும் தமிழ்ப்பாடம் கட்டாயம். தமிழகத்தில் பிறந்த பிற மொழிக்காரர்களுக்கும் சேர்த்து. (பிறப்புச் சான்றிதழ் வைத்து சோதிக்கப்படும்).


தமிழ்நாட்டில் பிறந்த எல்லாரையும் (பிறப்புச் சான்றிதழ்) வைத்து தமிழராக அறிவிப்போம்.


பிறமாநிலத்தவர் தமிழ்நாட்டில் குவிவதைக் குறைத்து, தமிழர்களுக்கே, தமிழகப் பணிகளில் முன்னுரிமை அளிப்போம்.


2020 ஐ, ஜீரோ கல்வியாண்டாக அறிவிப்போம்.


முடங்கிய புகார் துறைக்குப் புத்துணர்வளித்து மீண்டும் கொண்டு வருவோம்.


கொரோனா ஊரடங்கு காலத்தில் முடங்கிய திருமணங்களை அரசு செலவில் நடத்துவோம்.


ரஜினி, கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுப்போம். (அப்படியே நைஸா ஒதுக்கிடலாம்ல)


மந்திரிகளை ரிசார்ட்டில் தங்க வைத்து "அரசு பிக் பாஸ்" நடத்தி பொதிகையில் ஒளிபரப்புவோம்.


நாங்கள் வெற்றி பெற்றால் மந்திரிகள் கூவத்தூரில் இருந்த நாட்களை பிக் பாஸ் போல எடிட் செய்து ஒளிபரப்புவோம்.


ரேஷனில் விலையில்லா கபசுர குடிநீர் வழங்கப்படும்.


விவசாயிகளுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கப்படும்.


நீட்டை தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்த உயிருள்ளவரை போராடுவோம். (அதுக்கப்புறம் எவன் கேக்கப் போறான்?). 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக